பயணம் செய்வதில் மனிதர்களுக்கு எப்போதுமே அலாதியான பிரியம் உண்டு. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனிதன் நீண்டப் பயணங்களை மேற்கொண்டு வருகிறான். அவற்றுள் சில பயணங்கள் வரலாறில் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை அடியோடு தகர்த்து, அவனது சிந்தனையையே மாற்றியமைத்தது ஒரு கடல் பயணம். 1831ஆம் ஆண்டு முதல் 1836 வரை அந்த புகழ்மிக்கப் பயணத்தை மேற்கொண்ட கப்பலின் பெயர் ‘பீகிள்(Beagle)’. அந்தப் பயணத்தின் நாயகர் சார்லஸ் டார்வின்.
18,19ஆம் நூற்றாண்டுகளில், புதிய நாடுகளை கண்டுபிடிக்கவும் நாடுகளின் மீது படையெடுத்து காலனிகளை உருவாக்குவதற்கும் கடல்வழிப் பயணம் இன்றியமையாததாக இருந்தது. அப்போது கடலில் போட்டி நாடுகளின் சவாலை எதிர்கொள்ளவும் வணிகத்தை பெருக்குவதற்கும் கடல் வழிகள், கடல் நீரோட்டங்கள், கடலோர நிலப்பகுதிகள் பற்றி நிறைய விவரங்களை ஆராய வேண்டியத் தேவை ஏற்பட்டது. இந்த நோக்கங்களுக்காக தென்னமெரிக்க கண்டத்தின் கடல் பகுதிகளில் ஆராய்ச்சியை மேற்கொள்ள ’எச்.எம்.எஸ்.பீகிள்’ என்ற கப்பலை 1826ஆம் ஆண்டு அனுப்பியது பிரிட்டிஷ் அரசு. அது தனது ஆய்வை முடித்துவிட்டு 1830ல் நாடு திரும்பியது.
இருப்பினும் மீண்டுமொரு விரிவான ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டு ’எச்.எம்.எஸ்.பீகிள்’ செப்பனிடப்பட்டு மீண்டும் தயார் செய்யப்பட்டது. அந்தக் கப்பலின் கேப்டனாக ஃபிட்ஸ்ராய் நியமிக்கப்பட்டார். புதிய விஷயங்களை தெரிந்துகொள்வதில் ஆர்வமும் ஆய்வு கண்ணோட்டமும் நிரம்பிய ஃபிட்ஸ்ராய் தன்னுடன் ஒரு ’இயற்கை விஞ்ஞானி’, அதுவும் புவி அமைப்பியல் அறிவுடைய ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார். அந்த வேலைக்கு விண்ணப்பித்தார் சார்லஸ் டார்வின் என்ற 22 வயது இளைஞர். இவர் இயற்கை வரலாறில் கொண்டிருந்த ஆர்வத்தால் தனது மருத்துவப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டவர். பின்னர் மதகுருக்கான பட்டப் படிப்பையும் முடித்திருந்தார். ஆடம் செட்ஜ்விக் என்ற புவி அமைப்பியல் விஞ்ஞானியிடம் சிறிது காலம் உதவியாளராக பணியாற்றியதால் நிலம் மற்றும் நில அமைப்புகள் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தார்.
டார்வினின் நண்பரும் பேராசிரியருமான ஹென்ஸ்லோ சிபாரிசு செய்ததால் டார்வினை பணியமர்த்திக் கொள்ள ஃபிட்ஸ்ராய் சம்மதித்தார். ஆனால் டார்வினின் தந்தை டார்வினுக்கு அனுமதி தரவில்லை. டார்வினின் அப்பாவிடம், அவரது மாமா எப்படியோ பேசி சம்மதிக்க வைத்துவிட்டார். பசிபிக், இந்திய, அட்லாண்டிக் ஆகிய மூன்று பெருங்கடல்களிலும் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. திட்டமிடப்பட்ட காலம் 2 ஆண்டுகள். ஆனால் இது 5 ஆண்டுகளுக்கு நீளும் என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
டிசம்பர் 27, 1831ல் ஃப்ளைமவுத் துறைமுகத்தில் இருந்து தனது பயணத்தை பீகிள் தொடங்கியது. அட்லாண்டிக் கடலில் பயணித்து தென்னமெரிக்க கண்டத்தின் கிழக்குக் கரையோரமாக தெற்கு திசையை நோக்கிச் சென்றது. பிரேசில், அர்ஜெண்டினா சென்ற பின் தெனமெரிக்காவின் மேற்கு கரையோரமாக பயணத்தைத் தொடர்ந்தது பீகிள். ஃபிட்ஸ்ராய் கடல் ஆய்வுகளை மேற்கொள்ள, டார்வின் நிலப்பகுதிகளில் இறங்கி தனது ஆய்வுகளை மேற்கொண்டார். நான்காண்டுகளுக்குப் பின்னர் 1835-ல் தன்னந்தனித் தீவான கலப்பகாஸ் தீவை அடைகின்றனர். இந்த நீண்டப் பயணத்தில் டார்வின் பல்வேறு இயற்கை அதிசயங்களை கண்டார்.
அழிந்து போன விலங்குகளின் ஏராளமான புதைபடிவங்களை சேகரித்தார். வித்தியாசமான பழக்கவழக்கங்கள் கொண்ட பல்வேறு பழங்குடி மக்களை கண்டார். நில அமைப்புகளை, எரிமலைப் பிரதேசங்களை, காடுகளை, நதிகளை, ஆராய்ந்தார். நீர், நிலம் ஆகியவற்றில் வாழும் பல்வேறு உயிரினங்களை ஒப்பிட்டு, வகைப்படுத்தி ஆராய்ந்தார். தான் கண்டறிந்ததை முழுமையாக குறிப்புகள் எடுத்துக்கொண்டார். இந்தக் குறிப்புகள் தான் இவரது கோட்பாடுகளுக்கு பினாள்களில் வலிமையான ஆதாரமாக இருந்தன.
பீகிளின் பயணம் மேற்கு நோக்கித் தொடர்ந்தது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவற்றைத் தொட்டுவிட்டு மொரிஷியஸ் தீவுகள் வழியாக ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையை அடைந்தது. அங்கிருந்து மீண்டும் பிரேசிலுக்கு வந்துவிட்டு தாய்நாட்டை நோக்கி இறுதிப் பயணத்தை மேற்கொண்டது. அக்டோபர் 2, 1836ல் இங்கிலாந்தை அடைந்தது. இந்த 5 ஆண்டுகள் கடல் பயணத்தில் 3 ஆண்டுகள் 3 மாதங்களை நிலத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக டார்வின் செலவழித்திருந்தார்.
நாடு திரும்பியதும் தனது குறிப்புகளையும் சேகரித்த ஆதாரங்களையும் ஆராய்ந்த டார்வின், காலங்காலமாக நம்பப்பட்டு வருவது போல் தாவரங்களும் விலங்குகளும் என்றென்றும் ஒரே மாதிரியாக இருப்பவை அல்ல. அவை தமது சூழ்நிலை(வாழ்நிலை) மாற்றங்களுக்கேற்ப தகவமைத்துக்கொண்டு பரிணாம வளர்ச்சியடைந்து வருகின்றன என்பதை 1837ஆம் ஆண்டிலேயே கண்டறிந்தார். கடவுளின் படைப்பு கொள்கையை நிராகரிக்கும் இந்த கண்டுப்பிடிப்பை வெளியிட இன்னும் ஆதாரங்களை சேர்க்கவேண்டும் என்று டார்வின் முடிவு செய்தார்.
இருபது ஆண்டுகள் மேலும் ஆராய்ந்து தனது கோட்பாட்டு உறுதியான ஆதாரங்களை நிறுவினார். இதற்கிடையில் வாலஸ் என்ற விஞ்ஞானியின் ஆய்வுகளும் டார்வினுக்கு உதவியாக இருந்தது. அறிவு ஜீவிகள், சாதாரண பொதுமக்கள் என அனைவரின் சிந்தனையிலும் பெரும் புரட்சியை உண்டு பண்ணிய ’இயற்கைத் தேர்வு மூலமாக இனங்களின் தோற்றம்(Origin of Species through Natural Selection) என்னும் நூலை 1859ல் வெளியிட்டார். பலத்த விவாதங்கள் நடத்தப்பட்டன். எங்கு பார்த்தாலும் சமயவாதிகளின் எதிர்ப்புகள். சில ஆண்டுகள் கடந்தபின் 1871ல் மீண்டும் ஒரு புயல் கிளம்பியது. ’மனிதனுடைய பாரம்பரியமும் பாலினம் சார்ந்த தேர்வும்(The Descent of Man and Selection in relation to Sex) என்ற நூலை வெளியிட்டார்.
வாலில்லா குரங்கு போன்ற ஒரு சிறப்பினத்திலிருந்து தான் மனித இனம் பரிணாம வளர்ச்சியடைந்தது என்று உடலமைப்பியல், புவியியல், சூழல் ஆதாரங்களுடன் இந்நூலில் நிறுவியிருந்தார். அறிவுலகிலேயே இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. நோய்வாய் பட்டிருந்த சார்லஸ் டார்வின் 1882ல் மறைந்துவிட்டார். ஆனாலும் அவருக்குப்பின் நிகழ்ந்த புதிய கண்டுபிடிப்புகள் அவரின் கோட்பாட்டை உண்மை என நிரூபித்தன. உலகில் தோன்றிய தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக சாலஸ் டார்வின் கொண்டாடப்படுகிறார். இதற்கு காரணம் ‘பீகிள்’ பயணம் தானே!



