Tuesday, September 21, 2010

இனவெறியை வென்ற நட்பு

 லஸ் லாங்கும் ஜெஸ்ஸி ஓவன்ஸும்




20ஆம் நூற்றண்டில் உலக நாடுகளுக்கெல்லாம் மாபெரும் அச்சுறுத்தலாக இருந்தவர் யாரென கேட்டால், ஹிட்லர் என்பதுதான் அனைவரின் பதிலாக இருக்கும். ஹிட்லரின் நாடு பிடிக்கும் கொள்கைமுதல் யூதர்கள் படுகொலைவரை அனைத்துக்கும் அடிப்படியானது ஹிட்லர் உயர்த்திப்பிடித்த இனவெறிக் கொள்கையான ‘ஆரிய மேன்மைகொள்கையே. மனித இனத்தில் ஆரிய இனம் தான் உயர்ந்தது, அந்த ஆரிய இனத்திலேயே தூய்மையானவர்கள் ஜெர்மானியர்கள்தான். ஆகவே, அவர்களே இந்த உலகை ஆளத்தகுந்தவர்கள் என்பது ஹிட்லரின் இனவாதக் கொள்கையாகும்.

ஆரிய மேன்மை தாங்கிய ஜெர்மானியர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று அவர் உறுதியாக நம்பினார். அது 1936ஆம் ஆண்டு. ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற இருந்தது. அந்தப் போட்டிகளை தனது கொள்கையை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள ஹிட்லர் முடிவு செய்தார். ஹிட்லரின் கண்காணிப்பில் ஜெர்மானிய வீரர்கள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டனர். முக்கிய வீரர்கள் போட்டி நடைபெறும் நாள் வரை அவர்களது திறமையை யாரும் காணாத வகையில் ரகசியமாக வைக்கப்பட்டனர்.    

ஜெஸ்ஸி ஓவன்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பின தடகள வீரரான இவரும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்காக பெர்லினுக்கு வந்திருந்தார். தான் கலந்துகொள்ளும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று இனவெறி மிக்க ஹிட்லரின் முகத்தில் கரியைப் பூசவேண்டும் என்று தீர்மானத்தோடு கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டிருந்தார்.

அன்று நீளம் தாண்டுதல் போட்டிக்கான தகுதிச் சுற்றுகள் நடைபெற்றன. அதற்கு ஓராண்டுக்கு முன்புதான் 8.13 மீட்டர் நீளம் தாண்டி உலக சாதனைப் படைத்திருந்தார் ஜெஸ்ஸி ஓவன்ஸ். எனவே தகுதிச் சுற்றை கடந்து எளிதாக இறுதிச் சுற்றை அடைந்துவிடலாம் என்று நினைத்து களமிறங்கினார் ஓவன்ஸ். போட்டிகள் ஆரம்பமாயின.

அப்போது ஓவன்ஸை மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கினார் அந்த உயரமான ஜெர்மானிய இளைஞர். அவர் பெயர் லஸ் லாங். தனது முதல் முயற்சியிலேயே 7.90 மீட்டர் நீளம் தாண்டி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார் லஸ் லாங். அவரை ஹிட்லர் தன் கண்கானிப்பிலேயே ரகசியமாக வைத்திருந்த விஷயத்தை ஓவன்ஸ் அப்போதுதான் கேள்வியுற்றார்.

இப்போது ஓவன்ஸின் முறை வந்தது. லஸ் லாங் மட்டும் இந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுவிட்டால், ஹிட்லரின் நம்பிக்கை உண்மையாகிவிடுமே. என்னைப் போன்ற நீக்ரோவால் வெற்றிபெற முடியாது என்ற ஹிட்லரின் ‘ஆரிய மேன்மைநம்பிக்கைக்கு வலுச் சேர்ந்துவிடுமேஎன்ற எண்ணம் ஜெஸ்ஸி ஓவன்ஸ் மனதில் பதட்டத்தை ஏற்படுத்தியது. ஓவன்ஸின் முதல் முயற்சி, அவர் ஃபவுல் செய்ததால் வீணானது. தொடர்ந்து இரண்டாவது முயற்சியிலும் எல்லைக்கோட்டைத் தாண்டி கால் வைத்ததால், அதுவும் வீணானது. வெறுப்படைந்த ஓவன்ஸ் கோபத்துடன் தரையை எட்டி உதைத்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். ‘இதற்காகவா அமெரிக்காவிலிருந்து கடல்கடந்து வந்தேன்?என்று மனதுக்குள் குமுறினார்.

அப்போது தனது தோளின் மீது ஒரு கை ஆறுதலாக தொடுவதை ஓவன்ஸ் உணர்ந்தார். அது வேறு யாருமல்ல. யாரிடம் தோற்றுவிடக்கூடாது என்று ஓவன்ஸ் நினைத்தாரோ அதே லஸ் லாங் தான்.

‘என்னுடைய பெயர் லஸ் லாங்என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட லஸ் லாங், ‘ஏதோ ஒரு விஷயம் உங்களுடைய மன அமைதியை கெடுக்கிறது. உங்களுடைய திறமைக்கு கண்ணை மூடிக்கொண்டு தாண்டியிருந்தாலே தகுதி பெற்றிருப்பீர்கள்என்று ஓவன்ஸுக்கு தன்னம்பிக்கையூட்டினான். நாஜி இளைஞர் பாசறையில் பயிற்சி பெற்றிருந்தும் ‘ஆரிய இன மேன்மைபாராட்டாத லஸ் லாங்கைப் பார்த்து ஓவன்ஸ் ஆச்சரியம் அடைந்தார். சிறிது நேரம் ஆறுதலாக உரையாடிய பின்னர் ஒவன்ஸிடம், ‘இது ஒன்றும் இறுதி போட்டியில்லையே. தேவையான தூரத்துக்கு தாண்டி தகுதி பெற்றாலே போதுமே. இறுதிப் போட்டியில் உங்களுடைய முழுத்திறமையை காட்டலாம். அதனால் எல்லைக்கோட்டுக்கு அரை அடி முன்பே நீங்கள் ஒரு கோடு கிழித்துக்கொண்டு அங்கிருந்து தாண்டுங்கள். கண்டிப்பாக தகுதிப் பெறுவீர்கள்என்று ஓவன்ஸை தட்டிக்கொடுத்தார் லஸ் லாங்.

மனம் தெளிவடைந்த ஓவன்ஸ் லஸ் லாங் சொன்னபடியே செய்தார். தேவைப்பட்டதைவிட ஓர் அடி அதிகமாகவே தாண்டி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் ஓவன்ஸ்.

மனம் நெகிழ்ந்த ஓவன்ஸ் லஸ் லாங்குக்கு நன்றி சொல்வதற்காக அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றார். லஸ் லாங்கின் ஆறுதல் மட்டும் இல்லையென்றால் மறுநாள் நடக்கப்போகும் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போயிருக்கும். லஸ் லாங்கும் ஜெஸ்ஸி ஓவன்ஸும் தங்களது இன வேறுபாடுகளை மறந்து மனம் விட்டுப் பேசினர். தங்களைப் பற்றி, விளையாட்டைப் பற்றி, உலக நடப்புகளைப் பற்றி என பல விஷயங்களைப் பேசினர். முடிவில், அந்த அறையை விட்டு வெளியேறும் போது இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆகியிருந்தார்கள்.

இறுதிப் போட்டி தொடங்கியது. லஸ் லாங் தனது முந்தைய சாதனையை முறியடித்தார். இது ஜெஸ்ஸி ஓவன்ஸை மேலும் சாதிக்கத் தூண்டியது. லஸ் லாங் அளித்த தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்கிய ஜெஸ்ஸி ஓவன்ஸ் 8.06 மீட்டர் நீளம் தாண்டி, புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். அப்போது அவரை முதலில் பாராட்டியது லஸ் லாங் தான். அதுவும் சில நூறு மீட்டர் தூரத்தில் ஹிட்லர் பார்த்துக்கொண்டிருக்க முழு மனத்துடன் ஓவன்ஸின் கைகளைப் பற்றி குலுக்கினார். அவர்கள் இருவரின் நட்பானது சர்வாதிகாரியின் இனவெறியை வென்றது.
தங்கப்பதக்கத்துடன் ஓவன்ஸ். அருகில் வெள்ளி வென்ற லஸ் லாங்

அந்த வெற்றியோடு ஓட்டப் பந்தையங்களில் மேலும் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார் ஓவன்ஸ். நீளம் தாண்டுதலில் ஓவன்ஸ் அன்று படைத்த ஒலிம்பிக் சாதனை அடுத்த 25 ஆண்டுகளுக்கு முறியடிக்கப்படாமல் இருந்தது. 

நான் வென்றுள்ள அத்தனை பதக்கங்களையும் கோப்பைகளையும் ஒன்று சேர்த்து உருக்கினாலும், அவை லஸ் லாங்கின் 24 காரட் தூய்மையான நட்புக்கு ஈடாகாது என்று லஸ் லாங்கின் நட்பு பற்றிக் கூறினார் ஓவன்ஸ். அன்று லஸ் லாங்கின் நட்பை உணர்ந்த போது, நவீன ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கிவைத்த பியரி டி கூபெர்டின் அவர்களின் வார்த்தைகள் தான் தனது நினைவுக்கு வந்ததாக ஜெஸ்ஸி ஓவன்ஸ் நினைவு கூர்கிறார். அது இதுதான்:

‘ஒலிம்பிக் போட்டியின் முக்கிய நோக்கம் வெற்றிபெறுவதல்ல, பங்கு பெறுவதுதான். வாழ்க்கையின் அடிப்படையான அம்சம் வெற்றிகொள்வதல்ல, நன்றாகப் போராடுவதே

’உடற்கூறியலின் தந்தை’ ஆண்ட்ரியஸ் வெசாலியஸ்

ஆண்ட்ரியஸ் வெசாலியஸ்


றிவியல் என்பது நாள் தோறும் வளர்ந்து கொண்டே இருப்பது. காலங்காலமாக உண்மை என்று கருதப்பட்டு கடைபிடிக்கப்படும் பல கோட்பாடுகளை நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் பொய்ப்பித்து வருவதை நாம் நடைமுறையில் காண்கிறோம். இப்போது சரி என்று கருதப்படும் உண்மைகள் பிற்காலத்தில் தவறு என்று நிரூபிக்கப்படலாம். உண்மை அறிதல் ஒன்றே அறிவியல் முறையின் நோக்கமாகும்.

இப்போதுள்ளதைப் போல் அறிவியல் மனப்பாங்கு கடந்த காலங்களில் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. செவ்வியல் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களான அரிஸ்டாட்டில், கேலன் போன்ற அறிவியல் அறிஞர்களின் கருத்துகளே முற்றான உண்மைகள், அவை மாற்ற முடியாதவை என்பதைப் போன்ற கருத்துகளே ஐரோப்பிய அறிவுலகம் முழுவதும் 1200 ஆண்டுகளுக்கும் மேலாக செல்வாக்கு செலுத்தி வந்தன. மத நூல்களும் தம் பங்குக்கு ஏராளமான மூட நம்பிக்கைகளை பரப்பி வந்தன. ஐரோப்பிய கண்டத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ரோமப் பேரரசோ அறிவியல் சிந்தனைகளுக்கு கடுமையான தடைகளை விதித்திருந்தது.

மருத்துவத் துறையிலும் இத்தகைய பழமைவாதக் கருத்துகளே உண்மை என்று பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் காரணமாக புதிய சிந்தனைகள் முளைவிட ஆரம்பித்தன. பழைய கோட்பாடுகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அத்தகைய புரட்சிகரமான ஆய்வுகளை மேற்கொண்டவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளரும் மருத்துவருமான ஆண்ட்ரியஸ் வெசாலியஸ்.


பரம்பரைப் பரம்பரையாக அரசவை மருத்துவர்களாகவும் மருந்தாளுனர்களாகவும் பணியாற்றிவந்த குடும்பத்தில் 1514ஆம் ஆண்டு டிசம்பர் 31 ல் பிறந்தார் ஆண்ட்ரியஸ் வெசாலியஸ். வெசாலியஸின் தந்தையான ஆண்ட்ரீஸ் வான் வெசலுக்கு தம் மகனை மருத்துவராக்க வேண்டுமென்று ஆசை. எனவே அடிப்படை கல்விக் கற்ற பிறகு மருத்துவம் படிக்க 1533ல் பாரீஸ் நகருக்கு சென்றார் வெசாலியஸ். அங்கு அவருக்கு கற்பித்த பேராசிரியர்களால் உடற்கூறியல் ஆய்வில் வெசாலியஸுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. கல்லறையிலிருந்து பிணங்களை திருட்டுத்தனமாக எடுத்துவந்து ஆய்வுகளை செய்தார் என்றால் அவருடைய ஆர்வம் எப்படிப்பட்டது என்பதை அறிந்துகொள்ளலாம். போர் காரணமாக பாரீஸை விட்டு வெளியேற நேர்ந்தது. பின்னர் இத்தாலியின் பதுவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது ஆய்வு டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.
மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார்

அங்கேயே பேராசிரியராக பணியில் சேர்ந்த வெசாலியஸ் தனது உடற்கூறியல் ஆய்வைத் தொடர்ந்தார். கி.பி.2 -ஆம் நூற்றாண்டில வாழ்ந்த கேலன் எழுதிவைத்த கருத்துகளே பாடமாக கற்பிக்கப்பட்டு வந்த காலமது. கேலனின் ஆய்வு முடிவுகளை கேள்விக்கு உட்படுத்துவது பெருங்குற்றமாக அந்நாள்களில் கருதப்பட்டு வந்தது. ஆனால், உண்மையான ஆய்வில் நம்பிக்கைக் கொண்ட வெசாலியஸ் கேலனின் பல கருத்துகள் தவறு என்பதைக் கண்டுப்பிடித்தார்.

மனித உடலின் உள்ளுறுப்புகளை கூர்ந்து ஆய்வு செய்து அவற்றின் சரியான இருப்பிடம், அமைப்பு, வேலைகள் ஆகியவைப் பற்றி புதிய உண்மைகளை வெளிக்கொணர்ந்தார். சிறந்த ஓவியர்களை பணிக்கு அமர்த்தி உடலுறுப்புகளை வரையச் செய்தார். அந்த ஓவியங்களின் துணையோடு மாணவர்களுக்குக் கற்பித்தார். அவருடைய காலம் வரை, மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் பாடத்தை கற்பிக்கும் பேராசிரியர் பாடத்தை மாணவர்களுக்குப் படித்துக்காட்டும் போது, நாவிதர் ஒருவர் பிணத்தின் உடலை அறுத்துக் காண்பிப்பார். ஆனால் மனித உடல் பற்றி கேலன், அரிஸ்டாட்டில் ஆகியோரின் கருத்துகள் சரிதானா என்பதை எந்த ஒரு பேராசிரியரும் சோதித்துப் பார்த்ததில்லை.
வெசாலியஸின் நூலில் இடம்பெற்றுள்ள படம்

ஆனால், வெசாலியஸ் கற்பிக்கும் முறை வித்தியாசமானது. இறந்த மனிதனின் உடல் மேசையில் கிடத்தப்பட்டிருக்க மாணவர்கள் சூழ்ந்து நிற்பர். வெசாலியஸ் தாமே உடலை அறுத்து மாணவர்களுக்கு உடற்கூறு பாடம் நடத்துவார். மாணவர்களையும் ஆய்வு செய்யத் தூண்டுவார். வெசாலியஸ் ஆய்வுகள் மருத்துவ உலகில் பிரபலமடையத் தொடங்கியது. மரண தண்டனைப் பெற்ற கைதிகளின் உடல்களை வெசாலியஸின் ஆய்வுக்கு உதவும் பொருட்டு அனுப்பினார் அந்நாளைய பதுவா நகர மேயர். தாம் கண்டறிந்தவற்றை பல நூல்களாக எழுதினார் வெசாலியஸ். அவற்றுள் தலையாயது மனித உடல் அமைப்பைப்பற்றி என்னும் பொருள்படும் ‘டி ஹ்யூமனி கார்ப்போரிஸ் ஃபேப்ரிகா’ என்னும் நூல். தனது கண்டுப்பிடிப்புகளில் ஏதேனும் தவறு இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டால் அதை ஏற்றுத் திருத்திக்கொண்டார் வெசாலியஸ். தமது மாணவர்களையும் சுயமாக ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவித்தார். புதிய கண்டுபிடிப்புகள் என்றால் எதிர்ப்பில்லாமல் இருக்குமா? பழமைவாதிகளும் மதவாதிகளும் அவரைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனாலும் அவர்கள் வெசாலியஸின் ஆராய்ச்சிகளை தவறென்று நிரூபிக்க முடியாமல் தோல்வியடைந்தனர்.

வெசாலியஸின் முக்கிய கண்டுபிடிப்புகளில் சில:

மனித உடலின் அடிப்படைச் சட்டகம் எலும்பு மண்டலம் என்று நிறுவினார். தாடை எலும்பு என்பது ஒன்று தான், ஸ்டெர்னம் என்னும் மார்பெலும்பு மூன்று பகுதிகளைக் கொண்டது என்று கண்டறிந்தார்.

உடல் தசைகளின் அமைப்பை முறையாக ஆராய்ந்து வகைப்படுத்தினார்.

இதயத்தின் உள்ளறைகளை கண்டறிந்து சொன்னார். இரத்த குழாய்களில் உள்ள பல வால்வுகளை கண்டறிந்தார்.

உணர்வுகளை கடத்துவதும், உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதும் நரம்புகள் தான் என்றார்.

நரம்புகள் மூளையிலிருந்தே ஆரம்பிக்கின்றன. அவற்றை ஒருங்கிணைத்து கட்டுப்படுத்துவது மூளை தான் என்று கண்டறிந்தார்.

கல்லீரலின் அமைப்பை வெளிப்படுத்தினார். சிறு நீரகங்களின் அமைப்பையும், இரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை சிறுநீராக வெளியேற்றுவதே சிறுநீரகத்தின் வேலை என்பதை வெளிப்படுத்தினார்.

பலம் இரத்தக் குழாய்கள், குடல், நுரையீரலை சூழ்ந்துள்ள ப்ளூரா உறை ஆகியவற்றை விளக்கினார். குடல்வாலைக் கண்டறிந்து சொன்னவரும் இவரே.

மூலையின் அமைப்பைப் பற்றி சிறந்த விளக்கங்களை அளித்தார். ஹைப்போதலாமஸ், கார்ப்பஸ் கொலோசம் போன்ற மூலையின் உள்ளுறுப்புகளின் அமைப்பை முதலில் விளக்கியவரும் இவரே.

மருந்து, உணவு, கைகளைப் பயன்படுத்தல் (அறுவை சிகிச்சை) ஆகியவையே மருத்துவத்தின் அடிப்படைகள் என வரையறுத்தார்.

இப்படிப்பட்ட புரட்சிகரமான ஆய்வுகளை மேற்கொண்டுவந்த வெசாலியஸைத் தேடி பதவிகளும் வந்தன. அரசரின் மருத்துவக் குழுவில் பல ஆண்டுகள் பணியாற்றிய வெசாலியஸ் தனது ஆய்வுகளைத் தொடர்ந்து செய்துவந்தார். புதிய கண்டுப்பிடிப்புகளுக்கு ஏற்ப தனது நூல்களை அவ்வப்போது திருத்தி எழுதினார். அவரது புகழைக் கண்டுப் பொறாமைக்கொண்ட அவருடைய சக அறிஞர்களால் தொடர்ந்து குற்றச்சாட்டுகளுக்கும் தொல்லைகளுக்கும் உள்ளானார். தனது ஐம்பதாவது வயதில், ஜெருசலேமுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டுத் திரும்பும் வழியில் ஸாகிந்தோஸ் என்னும் தீவில் 1564ல் மரணமடைந்தார்.

வெசாலியஸோடு அவருடைய ஆராய்ச்சிகள் முடிந்துவிடவில்லை. அவருக்குப் பின் நிகழ்த்தப்பட்ட பல மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு அவருடைய ஆய்வுகள் தான் அடைப்படையாக அமைந்தன. இரத்த ஓட்டத்தைக் கண்டுப்பிடித்துச் சொன்ன வில்லியம் ஹார்விக்கு அடிப்படையாக அமைந்தது வெசாலியஸின் ஆய்வே. வெசாலியஸின் ஒப்பீட்டு உடற்கூறியல் ஆய்வுகள் பரிணாமக் கொள்கையை வடிப்பதில் டார்வினுக்குப் பெரிதும் உதவின. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ‘உடற்கூறியலின் தந்தை’ என்றழைக்கப்படும் வெசாலியஸின் ஆராய்ச்சிகளுக்கு நவீன மருத்துவ உலகம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

நவீன ஜப்பானை உருவாக்கிய மெய்ஜி புரட்சி



ஜப்பான், உலகமே வியந்து பார்க்கும் ஒரு நாடு. ‘மேட் இன் ஜப்பான்என்பதே தரமான பொருளுக்கான சான்று என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்தியா, சீனா போன்ற நாடுகள் காலனிய ஆட்சியாலும் வறுமையாலும் சீர்கெட்டு பின்தங்கியிருந்தபோது, நூறு வருடங்களுக்கு முன்பே ஜப்பான் மட்டும் பொருளாதார வலிமைமிக்க, தொழில்வளர்ச்சி அடைந்த,  முன்னேற்றமடைந்த நாடாக மாறியது எப்போதும் வியப்புக்குரிய விஷயமாகவே பேசப்படுகிறது. பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜப்பானில் ஏற்பட்ட அரசியல் மாற்றமே இந்த சாதனைகளுக்கெல்லாம் காரணமாக அமைந்தது. அந்த மாற்றத்துக்கு வரலாறு இட்டப் பெயர் ‘மெய்ஜி புரட்சிஅல்லது ‘மெய்ஜி மீட்சிஎன்பதாகும். இந்த மெய்ஜி மீட்சி ஜப்பானின் உள்நாட்டு அரசியலில் மட்டுமல்ல, உலக நாடுகளுடனான ஜப்பானின் உறவுகளிலும் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியது.

நான்கு பெரிய தீவுகளையும் ஆயிரக்கணக்கான சிறிய தீவுகளையும் கொண்ட ஜப்பான் நாடு நீண்ட வரலாறைக் கொண்டுள்ளது. பண்டை காலம் முதலலே ஜப்பானின் பல்வேறு பகுதிகள் பல்வேறு வம்சங்களால் ஆளப்பட்டு வந்துள்ளது. 17ஆம் நூற்றாண்டில் டொகுகவா ஷோகன்கள் ஜப்பானில் செல்வாக்கு பெற்று அந்நாட்டின் பெரும்பகுதியை ஆளத்தொடங்கினர். (ஷோகன்என்றால் படைத்தலைவர் என்று பொருள்.). 1860களில் யோஷின்பு என்ற ஷோகன் ஜப்பானை ஆண்டுக் கொண்டிருந்தார். தொழில் வளர்ச்சியோ நவீனமயமோ இல்லாத அன்றைய ஜப்பான் நிலப்பிரபுத்துவ அமைப்பில் கட்டுண்டு இருந்தது. பெரும்பாலான நிலங்கள் ஒரு சில நிலப்பிரபுக்களுக்கு சொந்தமாக இருந்தன. சமுராய்என்றழைக்கப்பட்ட வகுப்பினர் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்று சிறப்பு சலுகைகளோடு வாழ்ந்தனர். சாதாரண மக்களின் வாழ்க்கை மிக மோசமான நிலையில் இருந்தது.


1850களில் வியாபாரம் செய்வதற்காக ஜப்பானில் நுழைந்தனர் ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும். இந்தியாவைப்போல ஜப்பானை தங்களது காலனி நாடாக மாற்ற அவர்களால் முடியாவிட்டாலும் அநீதியான வியாபார ஒப்பந்தங்களால் ஜப்பானுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினர். ஐரோப்பிய, அமெரிக்கர்களை ஜப்பானிய ஷோகன் எதிர்த்தாலும் மேற்கத்தியர்களிடம் இருந்த நவீன ஆயுதங்களும் தொழில்நுட்பமும் ஜப்பானுக்கு அச்சுறுத்தலாகவே இருந்தது. தம்து படைகளை பலப்படுத்த ஷோகனும் மற்ற பிரபுக்களும் நவீன ஆயுதங்களையும் தொழில்நுட்பத்தையும் இறக்குமதி செய்ய ஆரம்பித்தனர். எனினும் மேற்கத்திய நாடுகளை எதிர்ப்பதில் ஷோகனின் இயலாமை மக்களிடையே பெரும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் தோற்றுவித்தது.

வளமான நாடு, வலிமையான ராணுவம்என்னும் கோஷத்துடம் இளம் சமுராய்கள் தலைமையில் ஷோகன் எதிர்ப்பாளர்கள் ஆட்சி மாற்றத்துக்கு போராடினர். முடிவில், எதிர்ப்பாளர்களின் கோரிக்கைக்குப் பணிந்த ஷோகன் யோஷின்பு ஜனவரி 3, 1868ல் ஆட்சியை மெய்ஜி மன்னர் மட்சுஹிடோவிடம் ஒப்படைத்தார். அன்று தொடங்கியது தான் மெய்ஜி மீட்சி எனப்படும் சீர்த்திருத்த காலம். நன்கு கற்றறிந்த, மக்கள் செல்வாக்கு பெற்ற குழுவினரின் ஆலோசனைப்படி இடோவை (இன்றைய டோக்கியோ) தலைநகராகக் கொண்டு மெய்ஜி மன்னர் ஆட்சிபுரிய ஆரம்பித்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. பல நூறு பகுதிகளாக நிலப்பிரபுக்களால் ஆளப்பட்டுவந்த பகுதிகள், பல ஒன்று சேர்க்கப்பட்டு 75 பகுதிகளாக குறைக்கப்பட்டன். ஜப்பான் முழுமையாக ஒரே மத்திய அரசின்கீழ் வந்தது. அனைவரும் சமம் என்று அறிவிக்கப்பட்டது. மக்களுக்கிடையே இருந்த வகுப்பு பிரிவினைகள் சட்டப்படி ஒழிக்கப்பட்டன. சமுராய்கள் மற்றும் இதர மேற்குடி மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. ஷோகனின் படைகள் கலைக்கப்பட்டது. தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டு மேற்கத்திய பாணியில் நவீனப்படுத்தப்பட்டது. 21 வயது நிரம்பிய ஆண்களுக்கு மூன்று வருட ராணுவ சேவை கட்டாயம் ஆக்கப்பட்டது. குறைந்தபட்சம் ஆறுவருட பள்ளிக்கல்வி அனைவருக்கும் உறுதி செய்யப்பட்டது. நிலச்சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. வரிவிதிப்பு முறைகள், சட்ட-நீதிமன்ற அமைப்புகள், கல்விமுறை மேற்கத்திய முறையில் மாற்றப்பட்டன.


புத்த மதத்தின் செல்வாக்கு குறைக்கப்ட்டு ஜப்பானியரின் ஆதிமதமான ‘ஷிண்டோமதம் அரசினால் முன்னிலைப்படுத்தப்பட்டது. மதம், ஆட்சி இரண்டுக்கும் மன்னரே தலைவராக இருந்தார். அவ்வப்போது தலைத்தூக்கிய ஷோகன் ஆதரவாளர்கள் முழுமையாக அடக்கப்பட்டனர். அமெரிக்கா போன்ற நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு உருவாக்கப்பட்டது. தனியாருடன் இணைந்து அரசு தொழிதுறையை வளர்க்க பெரும் முயற்சியில் இறங்கியது. நவீன மேற்கத்திய தொழிநுட்பம் ஜப்பானுக்கு கொண்டுவரப்பட்டது. புதிய ரயில் பாதைகள், தபால் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள், கப்பல் கட்டும் துறைகள், சுரங்கங்கள், ஆயுதத் தொழிற்சாலைகள், சர்க்கரை, சிமெண்ட், வேதிப்பொருள்கள், கண்ணாடி என எண்ணற்ற பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அடுத்த இருபது ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. பல பெரிய தொழில் குழுமங்களும் உருவாகின.

அரசியல் சட்டப்படி 1889ஆம் ஆண்டில் டயட்எனப்படும் பாரளுமன்றம் ஏற்படுத்தப்பட்டு செயல்படத் தொடங்கியது. இதர ஆசிய நாடுகள் காலனி ஆட்சியாளர்களால் சுரண்டப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் நான்கு கால் பாய்ச்சலில் வேகமாக முன்னேறியது ஜப்பான். பொருளாதார வலிமையிலும் வாழ்க்கை தரத்திலும் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்ந்தது ஜப்பான். அதன் ராணுவ வலிமையும் பலமடங்கு பெருகியது. தந்து பக்கத்து நாடான கொரியாவின் மீது உரிமை கொண்டாடுவதில் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் ஏற்பட்ட மோதலால் 1894 போர் வெடித்தது. ஜப்பான் போரில் வென்று மேற்கத்திய நாடுகளை திரும்பிப்பார்க்க வைத்தது. அதன் பிறகு ரஷியாவுடன் ஏற்பட்ட போட்டியின் காரணமாக 1905ல் நடைபெற்ற போரிலும் ரஷியாவை வென்று தான் ஒரு வல்லரசாக உருவாகி வருவதை உலகுக்கு காட்டியது. இந்த வெற்றிகள் ஜப்பானிய மக்களிடையே தேசிய உணர்வை அதிகரித்தன. பெருமிதம் கொள்ள வைத்தன.


1912ல் மெய்ஜி மன்னர் இறந்துவிட அவரது மகனான யோஷிஹிடோ மன்னரானார். இவரது ஆட்சிகாலத்தில் மெய்ஜி புரட்சியின் பலன்களை மக்கள் முழுமையாக அனுபவிக்கத் தொடங்கினர். பொருளாதாரம் வளர்ந்ததால் மக்கள் செல்வ செழிப்புடன் இருந்தனர். வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. மேற்கத்திய கல்விமுறையும், தொழிநுட்பமும் மக்களின் சிந்தனை போக்கில் பெரும் மாற்றத்தை உண்டாக்கின. இதனால் மக்கள் அதிகப்ப்டையான அரசியல் சுதந்திரத்தை கோரினர். அரசியல் கட்சிகள் உருவாகி வலுப்பெற்றன. பழமையான கருத்துகள் மதிப்பிழந்தன. அனைவருக்கும் ஓட்டுரிமை வேண்டும் என கோரப்பட்டது. 1925ல் வயது வந்த அனைத்து ஆண்களுக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. 1912-1930 காலகட்டத்தில் அமெரிக்க மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கு இணையாக இருந்தது ஜப்பானியரின் வாழ்க்கை.


1930களில் ஜப்பானில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட உலகலாவிய பொருளாதார பெருமந்தம் ஜப்பானை கடுமையாக பாதித்தது. அதனால் மூலப்பொருள்களுக்கு ஏற்பட்ட தேவையை நிறைவுசெய்ய மேற்கத்திய நாடுகளைப் போலவே காலணிகளை உருவாக்கும் முயற்சிகளில் ஜப்பான் இறங்கியது. இந்தச் சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ராணுவம் ஜப்பானிய ஆட்சியின் தலைமையை கைப்பற்றிக்கொண்டது. பின்னர் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோல்வியடைந்தது. போரினால் சின்னாபின்னப்படுத்தப்பட்ட ஜப்பானின் பொருளாதாரம் மீண்டு வரும் என்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் அடுத்த முப்பது ஆண்டுகளிலேயே ஜப்பான் உலகின் முன்னேற்றமடைந்த நாடாக மீண்டு உருப்பெற்றது. இந்த அதிசயத்துக்கு காரணம் மெய்ஜி புரட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல், நிருவாகம் மற்றும் கல்வி சீர்த்திருத்தங்களும், அடிப்படை கட்டமைப்புகளும் தான் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

.