Tuesday, September 21, 2010

இனவெறியை வென்ற நட்பு

 லஸ் லாங்கும் ஜெஸ்ஸி ஓவன்ஸும்




20ஆம் நூற்றண்டில் உலக நாடுகளுக்கெல்லாம் மாபெரும் அச்சுறுத்தலாக இருந்தவர் யாரென கேட்டால், ஹிட்லர் என்பதுதான் அனைவரின் பதிலாக இருக்கும். ஹிட்லரின் நாடு பிடிக்கும் கொள்கைமுதல் யூதர்கள் படுகொலைவரை அனைத்துக்கும் அடிப்படியானது ஹிட்லர் உயர்த்திப்பிடித்த இனவெறிக் கொள்கையான ‘ஆரிய மேன்மைகொள்கையே. மனித இனத்தில் ஆரிய இனம் தான் உயர்ந்தது, அந்த ஆரிய இனத்திலேயே தூய்மையானவர்கள் ஜெர்மானியர்கள்தான். ஆகவே, அவர்களே இந்த உலகை ஆளத்தகுந்தவர்கள் என்பது ஹிட்லரின் இனவாதக் கொள்கையாகும்.

ஆரிய மேன்மை தாங்கிய ஜெர்மானியர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று அவர் உறுதியாக நம்பினார். அது 1936ஆம் ஆண்டு. ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற இருந்தது. அந்தப் போட்டிகளை தனது கொள்கையை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள ஹிட்லர் முடிவு செய்தார். ஹிட்லரின் கண்காணிப்பில் ஜெர்மானிய வீரர்கள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டனர். முக்கிய வீரர்கள் போட்டி நடைபெறும் நாள் வரை அவர்களது திறமையை யாரும் காணாத வகையில் ரகசியமாக வைக்கப்பட்டனர்.    

ஜெஸ்ஸி ஓவன்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பின தடகள வீரரான இவரும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்காக பெர்லினுக்கு வந்திருந்தார். தான் கலந்துகொள்ளும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று இனவெறி மிக்க ஹிட்லரின் முகத்தில் கரியைப் பூசவேண்டும் என்று தீர்மானத்தோடு கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டிருந்தார்.

அன்று நீளம் தாண்டுதல் போட்டிக்கான தகுதிச் சுற்றுகள் நடைபெற்றன. அதற்கு ஓராண்டுக்கு முன்புதான் 8.13 மீட்டர் நீளம் தாண்டி உலக சாதனைப் படைத்திருந்தார் ஜெஸ்ஸி ஓவன்ஸ். எனவே தகுதிச் சுற்றை கடந்து எளிதாக இறுதிச் சுற்றை அடைந்துவிடலாம் என்று நினைத்து களமிறங்கினார் ஓவன்ஸ். போட்டிகள் ஆரம்பமாயின.

அப்போது ஓவன்ஸை மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கினார் அந்த உயரமான ஜெர்மானிய இளைஞர். அவர் பெயர் லஸ் லாங். தனது முதல் முயற்சியிலேயே 7.90 மீட்டர் நீளம் தாண்டி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார் லஸ் லாங். அவரை ஹிட்லர் தன் கண்கானிப்பிலேயே ரகசியமாக வைத்திருந்த விஷயத்தை ஓவன்ஸ் அப்போதுதான் கேள்வியுற்றார்.

இப்போது ஓவன்ஸின் முறை வந்தது. லஸ் லாங் மட்டும் இந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுவிட்டால், ஹிட்லரின் நம்பிக்கை உண்மையாகிவிடுமே. என்னைப் போன்ற நீக்ரோவால் வெற்றிபெற முடியாது என்ற ஹிட்லரின் ‘ஆரிய மேன்மைநம்பிக்கைக்கு வலுச் சேர்ந்துவிடுமேஎன்ற எண்ணம் ஜெஸ்ஸி ஓவன்ஸ் மனதில் பதட்டத்தை ஏற்படுத்தியது. ஓவன்ஸின் முதல் முயற்சி, அவர் ஃபவுல் செய்ததால் வீணானது. தொடர்ந்து இரண்டாவது முயற்சியிலும் எல்லைக்கோட்டைத் தாண்டி கால் வைத்ததால், அதுவும் வீணானது. வெறுப்படைந்த ஓவன்ஸ் கோபத்துடன் தரையை எட்டி உதைத்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். ‘இதற்காகவா அமெரிக்காவிலிருந்து கடல்கடந்து வந்தேன்?என்று மனதுக்குள் குமுறினார்.

அப்போது தனது தோளின் மீது ஒரு கை ஆறுதலாக தொடுவதை ஓவன்ஸ் உணர்ந்தார். அது வேறு யாருமல்ல. யாரிடம் தோற்றுவிடக்கூடாது என்று ஓவன்ஸ் நினைத்தாரோ அதே லஸ் லாங் தான்.

‘என்னுடைய பெயர் லஸ் லாங்என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட லஸ் லாங், ‘ஏதோ ஒரு விஷயம் உங்களுடைய மன அமைதியை கெடுக்கிறது. உங்களுடைய திறமைக்கு கண்ணை மூடிக்கொண்டு தாண்டியிருந்தாலே தகுதி பெற்றிருப்பீர்கள்என்று ஓவன்ஸுக்கு தன்னம்பிக்கையூட்டினான். நாஜி இளைஞர் பாசறையில் பயிற்சி பெற்றிருந்தும் ‘ஆரிய இன மேன்மைபாராட்டாத லஸ் லாங்கைப் பார்த்து ஓவன்ஸ் ஆச்சரியம் அடைந்தார். சிறிது நேரம் ஆறுதலாக உரையாடிய பின்னர் ஒவன்ஸிடம், ‘இது ஒன்றும் இறுதி போட்டியில்லையே. தேவையான தூரத்துக்கு தாண்டி தகுதி பெற்றாலே போதுமே. இறுதிப் போட்டியில் உங்களுடைய முழுத்திறமையை காட்டலாம். அதனால் எல்லைக்கோட்டுக்கு அரை அடி முன்பே நீங்கள் ஒரு கோடு கிழித்துக்கொண்டு அங்கிருந்து தாண்டுங்கள். கண்டிப்பாக தகுதிப் பெறுவீர்கள்என்று ஓவன்ஸை தட்டிக்கொடுத்தார் லஸ் லாங்.

மனம் தெளிவடைந்த ஓவன்ஸ் லஸ் லாங் சொன்னபடியே செய்தார். தேவைப்பட்டதைவிட ஓர் அடி அதிகமாகவே தாண்டி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் ஓவன்ஸ்.

மனம் நெகிழ்ந்த ஓவன்ஸ் லஸ் லாங்குக்கு நன்றி சொல்வதற்காக அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றார். லஸ் லாங்கின் ஆறுதல் மட்டும் இல்லையென்றால் மறுநாள் நடக்கப்போகும் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போயிருக்கும். லஸ் லாங்கும் ஜெஸ்ஸி ஓவன்ஸும் தங்களது இன வேறுபாடுகளை மறந்து மனம் விட்டுப் பேசினர். தங்களைப் பற்றி, விளையாட்டைப் பற்றி, உலக நடப்புகளைப் பற்றி என பல விஷயங்களைப் பேசினர். முடிவில், அந்த அறையை விட்டு வெளியேறும் போது இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆகியிருந்தார்கள்.

இறுதிப் போட்டி தொடங்கியது. லஸ் லாங் தனது முந்தைய சாதனையை முறியடித்தார். இது ஜெஸ்ஸி ஓவன்ஸை மேலும் சாதிக்கத் தூண்டியது. லஸ் லாங் அளித்த தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்கிய ஜெஸ்ஸி ஓவன்ஸ் 8.06 மீட்டர் நீளம் தாண்டி, புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். அப்போது அவரை முதலில் பாராட்டியது லஸ் லாங் தான். அதுவும் சில நூறு மீட்டர் தூரத்தில் ஹிட்லர் பார்த்துக்கொண்டிருக்க முழு மனத்துடன் ஓவன்ஸின் கைகளைப் பற்றி குலுக்கினார். அவர்கள் இருவரின் நட்பானது சர்வாதிகாரியின் இனவெறியை வென்றது.
தங்கப்பதக்கத்துடன் ஓவன்ஸ். அருகில் வெள்ளி வென்ற லஸ் லாங்

அந்த வெற்றியோடு ஓட்டப் பந்தையங்களில் மேலும் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார் ஓவன்ஸ். நீளம் தாண்டுதலில் ஓவன்ஸ் அன்று படைத்த ஒலிம்பிக் சாதனை அடுத்த 25 ஆண்டுகளுக்கு முறியடிக்கப்படாமல் இருந்தது. 

நான் வென்றுள்ள அத்தனை பதக்கங்களையும் கோப்பைகளையும் ஒன்று சேர்த்து உருக்கினாலும், அவை லஸ் லாங்கின் 24 காரட் தூய்மையான நட்புக்கு ஈடாகாது என்று லஸ் லாங்கின் நட்பு பற்றிக் கூறினார் ஓவன்ஸ். அன்று லஸ் லாங்கின் நட்பை உணர்ந்த போது, நவீன ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கிவைத்த பியரி டி கூபெர்டின் அவர்களின் வார்த்தைகள் தான் தனது நினைவுக்கு வந்ததாக ஜெஸ்ஸி ஓவன்ஸ் நினைவு கூர்கிறார். அது இதுதான்:

‘ஒலிம்பிக் போட்டியின் முக்கிய நோக்கம் வெற்றிபெறுவதல்ல, பங்கு பெறுவதுதான். வாழ்க்கையின் அடிப்படையான அம்சம் வெற்றிகொள்வதல்ல, நன்றாகப் போராடுவதே

No comments:

Post a Comment