Monday, January 14, 2013

புத்தகம் படிக்கலாமா?








ஒவ்வொரு புத்தாண்டிலும் புதிய உறுதிமொழிகள் எடுத்துக்கொள்வது, அதைப் பின்பற்றுகிறார்களோ இல்லையோ, பலரது பழக்கம். சிலவற்றை நம்மால் எளிதாகக் கடைபிடிக்க முடியும், சிலவற்றைப் பின்பற்றுவது பல காரணங்களால் இயலாமல் போகும். ஆனால், நம்மால் எளிதில் பின்பற்றக்கூடிய, செலவு குறைவான, வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும், தலைமுறைகளுக்கும் பயந்தரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை இந்த ஆண்டு பின்பற்ற வேண்டிய பழக்கமாக நாம் அனைவரும் உறுதியெடுத்துக் கொள்ளலாமே!

ஒரு புத்தகம் என்பது பாக்கெட்டில் எடுத்துச்செல்லப்படும் பூந்தோட்டம் போன்றது என்கிறது சீனப் பழமொழி. உண்மைதான் எண்ணங்கள் வளர்ந்து பூத்துக் குலுங்கும் மரங்கள் தானே நல்ல புத்தகங்கள். பண்டைய தீப்ஸ் நகரின் நூலகத்தின் வாயிலில் “புத்தகம் – ஆன்மாவுக்கு மருந்து” என்று பொறிக்கப்பட்டிருக்கும். மக்களுக்குத் தேவையானதை விடுத்து, அவ்ர்களை பொழுத்துப்போக்கு, நுகர்வின் அடிமைகளாக மாற்றும் நவீன கசடுகளால் நோயுற்றிருக்கும் நமது ஆன்மாவுக்கு புத்தகங்கள் மட்டுமே மருந்தாக இருக்க முடியும் என்பது உண்மைதான். புத்தகம் படிப்பது அந்தப் புத்தகத்தைப் படிப்பதோடு முடிவடைந்துவிடுவதில்லை. அது நமக்கு வாழ்க்கையைக் கற்றுத் தருகிறது. புத்தகத்தின் சிறப்பை உணர்ந்த சமூகங்களே நாகரிகத்தில் முன்னேறியவையாக, மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாகத் திகழ்ந்துள்ளன. ”புத்தகத்தை இரவலுக்குக் கொடுப்பவன் முட்டாள். அப்படிப் இரவல் பெற்ற புத்தகத்தை திருப்பிக் கொடுப்பவன் அவனைவிட முட்டாள்” என்ற அரேபிய பழமொழி, வாங்கிய பொருளைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனக் கூறுவதாக நினைத்துவிடாதீர்கள். புத்தகத்தின் முக்கியத்துவதைத் தான் அப்பழமொழி உணர்த்துகிறது.

”நான் தெரிந்துகொள்ள விரும்பும் விஷயங்கள் புத்தகத்தில் இருக்கின்றன; நான் படிக்காத புத்தகங்களை எனக்காக எடுத்துவந்து தருகிறவனே எனது சிறந்த நண்பன்” என்று சிறந்த நண்பனாக இருப்பதற்கே நீங்கள் நல்ல புத்தகங்களை கொண்டுவந்து தரவேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார் கறுப்பர்களின் அடிமை விலங்கொடித்த ஆபிரகாம் லிங்கன். புத்தகங்களின் முக்கியத்துவத்தை பக்கம் பக்கமாக பலர் விளக்க, “புத்தகங்கள் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத அறையைப் போன்றது” என்று ஒரே வரியில் ‘நச்’சென்று கூறுகிறார் ஹென்ரிச் மான். நல்ல புத்தககங்களைப் படிக்காத ஒருவன், அந்தப் புத்தகங்களைப் படிக்கத் தெரியாதவனைவிட எந்த விதத்திலும் மேம்பட்டவன் அல்ல என்கிறார் மார்க் ட்வைன்

புத்தகங்கள் என்பவை அறிவுக் கருவூலங்கள் என்பது சரி. எல்லாப் புத்தகங்களுமே அப்படிப்பட்டவைதானா? ஒரு புத்தகத்தின் மதிப்பு, நீங்கள் அதிலிருந்து எதை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைக் கொண்டு அளக்கப்பட வேண்டும் எனது ஜெம்ஸ் பிரைஸ் என்பாரின் கருத்து. படிப்பதைப் பற்றிச் சிந்திக்காதது, செரிக்காமல் சாப்பிடுவதைப் போன்றது என்று அறிஞர் எட்மண்ட் பர்க் சொல்வது இங்கு கவனிக்கத்தக்கது. ஒரு நல்லப் புத்தகம் என்பது வெறும் பொழுதுபோக்குக்கானது மட்டுமல்ல, அல்லது வேறொருவரின் கருத்துகளை நமது மண்டையில் திணித்துக்கொள்வதும் அல்ல. அது ஒரு உரையாடல் போன்றது. நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது நமது கருத்துகளையும், அனுபவங்களையும் நாம் புத்தகத்தின் கருத்துகளுடன் ஒப்பிட்டு மேம்படுத்திக்கொள்ள வேண்டும். புத்தகங்கள் எப்படிப்பட்டவை, அவற்றை எப்படி படிக்க வேண்டும் என்பதை ஃபிரான்ஸிஸ் பேக்கன் இப்படி கூறுகிறார்: சில புத்தகங்களை ருசிக்கலாம், சிலவற்றை விழுங்கிவிடலாம், வெகு சிலவற்றை நன்றாக மென்று, தின்று செரிக்க வேண்டும்.



சரி விஷயத்துக்கு வருவோம். புத்தாண்டு தொடங்கினாலே சென்னைவாசிகளான நமக்கு இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். ஒன்று புத்தாண்டின் முதல் பண்டிகையான பொங்கள் திருநாள். அடுத்தது ஆண்டுதோறும் நடக்கும் புத்தகத் கண்காட்சி. இந்த ஆண்டு புத்தக கண்காட்சி வழக்கத்தைவிட தாமதமாகத் தொடங்குகிறது. ஜனவரி 11ஆம் தேதி தொடங்கும் கண்காட்சி ஜனவரி 23 அன்று முடிவடைகிறது. கண்காட்சி நடைபெறும் இடமும் மாற்றப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில் நடந்துவந்த புத்தகக் கண்காட்சி மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் காரணமாக இந்த ஆண்டு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. புத்தகப் பிரியர்களின் ஆர்வத்தை இந்த இடமாற்றம் பாதிக்காது என்பது நிச்சயம்.

இன்று புத்தகங்கள் என்பவை காகிதத்தில் அச்சிடப்பட்டவை மட்டுமல்ல. தற்காலத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்களுடன் குறுந்தகடு, இ-புத்தகம் என புத்தகங்கள் பல வடிவங்களில் கிடைக்கின்றன. இ-புத்தகங்களின் வரவு புத்தக பராமரிப்பு செலவையும், அதற்கான உழைப்பு மற்றும் இடத்தையும் மிகவும் குறைத்துவிட்டது. இன்று லட்சக்கணக்கான புத்தகங்களை நம் கணினியிலேயே சேமித்து வைக்கமுடியும்.

புத்தகம் படிப்பதை தனிநபரின் பழக்கமாகக் கருதாமல் குடும்பத்தின் பழக்கமாக மாற்றுவோம். புத்தகம் படிப்பது நமக்கு அறிவையும், ஆனந்தத்தையும் தருவதுடன், தன்னபிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான உறுதியையும் தருகிறது. கல்வியின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் அறியாதவர்கள் அல்ல நாம். ஆகவே, புத்தகத் திருவிழாவில் குடும்பத்துடன் பங்கேற்போம், படிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் விதைப்போம்! 

பொங்கலோ பொங்கல்!




மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் தொடங்கியுள்ள புத்தாண்டின் முதல் பண்டிகையாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. நாடுகள்தோறும், உலகம் முழுவதும் எண்ணற்றப் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால், பொங்கல் விழா எல்லாவற்றிலும் தனிச் சிறப்பு பெற்றது. சாதி, மதச் சார்பற்ற தமிழர்கள் அனைவரும் இணைந்து கொண்டாடக்கூடிய ஒரு பெருநாள் பொங்கல். திருநாள், பெருநாள், நன்னாள், பண்டிகை, நோன்பு, புதுநாள் என இவ்வளவு சிறப்புகள் பெற்ற தமிழர்களின் ஒரே திருநாள் பொங்கல் தான்.

உழவுத் தொழிலையும், உழவர்களையும், உழைப்பாளர்களையும், உழவுக்கும் உழைப்புக்கு உறுதுணையாக இருந்த ஞாயிறு, மழை, மாடுகள் ஆகியவற்றைப் போற்றிக் கொண்டாடும் நாளான பொங்கல் தமிழர்களின் அறுவடைத் திருநாளும் ஆகும். உழவர்கள் தங்கள் உழைப்பின் பலனை அறுவடை செய்யும் காலம் இதுவாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் தொடர்ந்து கொண்டாடிவரும் திருநாள் பொங்கல். மதச்சார்பின்மைக்கும், இயற்கையை போற்றுதலுக்கும் சான்றாக இருப்பது தை முதல் நாளான இந்தப் பொங்கல் திருநாள்.

தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. ஒவ்வொரு பொங்கலும் அந்த நம்பிக்கையைத் தரத்தான் செய்கிறது. ஆனால், இந்த ஆண்டு தமிழர்களுக்கு சோதனை மிகுந்த ஆண்டாகவே தொடங்கியிருக்கிறது. உலகுக்கு சோறிடும் உழவர்கள் வாழ வழியின்றி தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் அவலம் தமிழகத்தில் நிலவுகிறது. விதைத்துவிட்டு நீருக்காக காத்திருந்து, நம்பிக்கையற்றுப்போன காவிரி டெல்டா விவசாயிகளின் தற்கொலைகள் மனித குலத்தின் மாபெரும் அவமானமாகும்.

‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’ என்று உலகமனைத்துமே ஏர் தொழிலின் பின்னேதான் என்று உழவைப் போற்றிய தமிழகத்தில் தான் இந்நிலை. பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவரையும் சேர்த்து உழவர்களே தாங்க வேண்டியிருப்பதால் ‘உழுவார் உலகத்தைத் தாங்கும் அச்சாணி’ என்றார் வள்ளுவர். அந்த அச்சாணிகளே முறிந்துவிட்டால் நம் சமூகம் எப்படி வாழும்? உலகுக்கு உணவிடும் உழவர்களின் வாழ்க்கை ஆண்டுக்காண்டு இந்த அவலநிலைக்கு உள்ளாவதை என்றுதான் நம் ஆட்சியாளர்கள் தடுக்கப்போகிறார்களோ தெரியவில்லை. அரசுகளும், கட்சிகளும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னைகளை அரசியல் பிரச்னையாகக் கருதாமல், அதை மக்களின் வாழ்வாதார பிரச்னையாக கருதி, வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தீர்க்க முயலவேண்டும்.

‘உழவர்களுக்கு உழவுத் தொழிலைச் செய்ய முடியாத நிலை எக்காரணங்களாவது ஏற்படுமேயானால், விரும்பப்படுகிற எல்லாப் பற்றுகளையும் துறந்துவிட்டோம் என்று கூறிக்கொள்ளும் துறவிகளுக்கும்கூட, நிலைத்த வாழ்வு இல்லாமற்போய்விடும்’ என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவன் கூறியது நம் தலைவர்களுக்கு எப்போது புரியும் என்று தெரியவில்லை. காவிரி டெல்டா பகுதியில் மட்டும் 14 லட்சம் ஏக்கரில் வெறும் 25% பயிர்களை மட்டுமே காப்பாற்ற முடியுமாம். இப்படிப்பட்ட நிலையில் கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்தத் தொழிலாளியான விவசாயி பண்டிகையை எப்படி கொண்டாட முடியும்?

நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலையும் மக்களுக்கு நம்பிக்கைத் தருவதாக இல்லை. பணக்காரர்களுக்கு மட்டுமல்ல பிச்சைக்காரர்களுக்கும் பாதுகாப்பற்றதாக நிலைமை மாறிவிட்டது. தொடரும் கொலைகள், கொள்ளைகள், முறைகேடுகள், பெருகிவரும் ரவுடி ராஜ்ஜியங்கள், தினசரி நிகழ்வாகிவிட்ட பாலியல் வன்கொடுமைகள் என பாதுகாப்பான வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லாத நிலையை தைத்திருநாள் மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். சமூக நல்லிணக்கத்துக்கும், சமூக நீதிக்கும் நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்ந்த தமிழகத்தில் சாதியத்தீயை மீண்டும் பற்றவைக்க சிலர் முயல்கிறார்கள். அத்தகைய சமூக விரோதச் சக்திகளை மக்கள் எப்போதும் போல வென்று காட்டுவர் என்று நம்புவோம். அத்தகைய தீயச் சக்திகளுக்கு துணை போகமாட்டோம் என்று இந்த நன்னாளில் உறுதியெடுத்துக்கொள்வோம்.

’உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்பது நமது பண்பாடு. இன்று உழவுமில்லை, தொழிலுமில்லை என்றாகிவிட்டது. காவிரி நீரின்றி தமிழக விவசாயி தற்கொலை செய்துகொள்வது ஒருபுறமிருக்க, ஆண்டு முழுவதும் தொடரும் மின்வெட்டால் தமிழகத்தின் தொழில்துறையே நசிந்துவிடும் நிலை உண்டாகியிருக்கிறது. பின்னலாடை உற்பத்தியில் உலகின் மையமாகத் திகழ்ந்த திருப்பூர் இன்று 

மின்வெட்டு காரணமாக செயலற்ற நிலைமைக்கு வந்துவிட்டது. வேலையில்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமுள்ள சிறு, குறு தொழில்கள் அனைத்தும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இதனால் இவற்றின் வருமானமும் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படுவதுடன், இத்தொழில் நிறுவனங்கள் தங்கள் சந்தைகளை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மின்வெட்டின் பாதிப்புக்கு பெருநிறுவனங்களும் தப்பவில்லை. தமிழகத்தைத் தேடிவரக்கூடிய முதலீடுகள்கூட மின்பற்றாக்குறையால் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிடும்நிலை உண்டாகியுள்ளது. இந்நிலையை மாற்ற தமிழக அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் நிலைமை அப்படியேதான் தொடருகிறது.

மூச்சு முட்டும் அளவுக்கு பிரச்னைகள் நமக்கு முன்பாகக் குவிந்து கிடந்தாலும், நம்பிக்கை ஒளி தென்படத்தான் செய்கிறது. எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காதவன், வாழ்க்கையில் உச்சத்தை அடைவது நிச்சயம் என்பர் பெரியோர்கள். இன்றும் நாம் நம்பிக்கையை இழக்கவில்லை. காலம் ஒருநாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும் என்ற நம்பிக்கையுடன் தமிழர் திருநாளைக் கொண்டாடுவோம். புத்தாண்டு புது நன்மைகளை கொண்டுவரும். அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள். பொங்குக பொங்கல்!