Saturday, September 29, 2012

ரூபாயின் சரிவும் பெட்ரோல் விலையேற்றமும்




பெட்ரோல் விலைகளை நிர்ணயம் செய்யும் அதிகாரம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் , ஐ.பி.பி.
ஆகிய பொதுத்துறை எண்ணை விற்பனை நிறுவனங்களுக்கு இணைந்த அமைப்புக்கு (ஓ.எம்.சி.) 2010ல் அளிக்கப்பட்டதிலிருந்து அடிக்கடி பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்வது வாடிக்கையாகிவிட்டது. தற்போது ஒரே நாளில் பெட்ரோல் விலையை ரூ 7.50 உயர்த்தப்பட்டதன் மூலம் சாதாரண மக்களின் வயிற்றில் அடித்திருக்கிறது மத்திய அரசு. டீசல், எல்.பி.ஜி. விலைகளும் விரைவில் உயரக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கும் பெட்ரோல் விலை உயர்வுக்கும் சம்பந்தம் இல்லையென்று பொதுத்துறை நிறுவனங்களைக் காரணம் காட்டுகிறது அரசு. பெட்ரோலிய பொருள்களுக்கு விலைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், அரசுக்கும் விலை உயர்வுக்கும் தொடர்பு இல்லையென்று கூறும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தலைவர் ஆர்.எஸ்.புட்டோலா, உயர்த்தப்பட்ட விலைகளை மாற்றியமைக்கும் அல்லது குறைக்கும் சூழ்நிலை இல்லை என்று அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார். இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாது என்ற அவர், சந்தையில் கச்சா என்ணையின் விலை குறையும் போது, அதன் பலன் உடனடியாக நுகர்வோருக்கு அளிக்கப்படும் என்கிறார்.

இந்த விலை உயர்வை அனைத்து எதிர்கட்சிகளும் எதிர்க்கின்றன. மேலும், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாதக் காங்கிரஸ், தி.மு.க. போன்ற கூட்டணி கட்சிகளும் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மே 31 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தையும் எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன. விலை உயர்வை எதிர்க்கின்றன. உண்மையில் இந்த விலை உயர்வின் பின்னணி என்ன?

கடந்த 4-5 மதங்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மே மூன்றாவது வாரத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ 56.38 என்ற அளவில் இதுவரை இல்லாத அளவுக்கு மதிப்பிழந்தது. மார்ச் 1 முதல் 13% சரிவடைந்த ரூபாயின் மதிப்பு, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து 11% அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் தம் முதலீட்டைத் திரும்ப எடுத்துக்கொண்டது தான் என்று கூறுகிறார்கள்.


அமெரிக்க டாலரின் அடிப்படையில் ரூபாய் மதிப்பு கணக்கிடப்படுவதற்கு காரணம் பெரும்பாலான சர்வதேச வர்த்தகமும் இறக்குமதியும் அமெரிக்க டாலர் மூலமாக நடப்பதுதான். வெளிநாட்டிலிருந்து ஒரு பொருளை இறக்குமதி செய்ய அல்லது வாங்க வேண்டுமென்றால் ரூபாயை டாலராக மாற்ற வேண்டும். உங்களிடம் போதிய அளவுக்கு டாலர் இல்லையெனில் இறக்குமதி செய்வது குறைவதுடன் டாலரின் தேவைப்பாடு காரணமாக ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடையும். அதிக விலைக் கொடுத்து டாலரை வாங்க வேண்டியிருப்பதுதான் காரணம். ஏற்றுமதி மூலமாகவும், அந்நிய முதலீடுகள் மூலமாகவும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணம் மூலமாகவும் தான் நாம் டாலரை பெறுகிறோம். ஏற்றுமதி சரிவடையும் போதும் டாலரின் கையிருப்பு குறையும். இதுதான் அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.

ரூபாயின் மதிப்பு குறைவதற்கு காரணம் அந்நிய முதலீடுகள் குறைந்ததுதான் என்கிறார்கள். அந்நிய முதலீடு குறைய என்ன காரணம் என்றால் ஐரோப்பிய நாடுகள் சந்தித்துவரும் பொருளாதார வீழ்ச்சி, குறிப்பாக திவாலாகும் நிலையிலுள்ள கிரீஸ் நாடு தான் காரணம் என்கிறார் மத்திய நிதியமைச்சர் பிரணப் முகர்ஜி. கிரீஸின் வீழ்ச்சி ஐரோப்பிய பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் பாதிப்பின் எதிரொலி தான் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பின்னடைவு என்கிறார். இதற்கு தீர்வு தான் என்ன? சிக்கன நடவடிக்கைகளும் மானிய குறைப்பும் தான் என்று கூறுகிறார் நமது நிதியமைச்சர். பெட்ரோல் விலையேற்றமும் ரூபாயின் வீழ்ச்சியும் சந்திக்கும் புள்ளி இதுதான். பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் மானியத்தைக் குறைத்தால் இறக்குமதிக்குச் செலவிடும் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்து ரூபாயின் மதிப்பு உயர்ந்துவிடும் என்பது நாம் புரிந்துகொள்ள வேண்டிய செய்தி. பெட்ரோல் விலையேற்றத்தால் உள்நாட்டில் விலைவாசி உயருமே, என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு நமது நிதியமைச்சர் பதிலளிக்க மாட்டார்.

நாட்டின் பணவீக்க விகிதம் மிக அபாயகரமான நிலையில் உள்ளது. மொத்த விலைக் குறியீடு அளவில் பணவீக்கம் 7.23%, ஆகவும், சில்லறை விலைக் குறியீடு அளவில் 10.36% என்ற இரட்டை இலக்க அளவிலும் உள்ளது. மக்கள் அதிகம் நுகரும் பொருள்களின் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில் தான் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் விழிப்பிதுங்கியுள்ள நிலையில் பெட்ரோல் விலை உயர்வு கூடுதல் சுமையை மக்கள் முதுகில் ஏற்றியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டால் எப்படிப்பட்ட பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்?

பெட்ரோல் விலை உயர்வு பொருள்களின் விலையில் ஓரளவுதான் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டால், அது நுகர்பொருள்கள் விலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். ஏனெனில் சரக்கு எடுத்துச்செல்லும் வாகனங்கள் டீசலைத்தான் பயன்படுத்துகின்றன. விவசாயிகளும் டீசலைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். சமையல் எரிவாயு மற்றும் மண்ணென்ணை விலையும் உயர்த்தப்பட்டால், வறுமையில் உழலும் கீழ்த்தட்டு மக்களை கடுமையாக பாதிக்கும்.

அதுமட்டுமல்லாமல், பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். போக்குவரத்து, வாகன உற்பத்தி, எஃப்.எம்.சி.ஜி., ஜவுளி ஆகிய துறைகளைக் கடுமையாகப் பாதிக்கும். மக்களின் பட்ஜெட்டில் பெரிய துண்டு விழும். ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் காரணமாக பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உற்பத்தியாளர்களுக்கும் தனியாருக்கும் கடன்கள் கிடைப்பது கடினமாகிறது.

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு என்பது அவற்றின் விலைகள் உயர்வதுடன் நிற்பதில்லை. எரிபொருளை ஏதாவது ஒரு விதத்தில் கொஞ்சமாவது பயன்படுத்தும் பொருள்களின் விலைகளிலும் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒட்டுமொத்தத்தில் ஏற்கனவே உள்ள பணவீக்கமானது அனைத்துப் பொருள்களின் விலை உயர்வால் மேலும் அதிகரிக்கவே செய்யும். சர்வதேசச் சந்தையில் கச்சா என்ணை விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் என்பது பொதுவாக பொருளாதார, உற்பத்திக் காரணங்களால் ஏற்படுவதில்லை. ஊக நடவடிக்கைகள் காரணமாகவே இந்த விலை ஏற்ற இறக்கம் நிகழ்கிறது. இந்த ஊக ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் உள்நாட்டில் செய்யப்படும் பெட்ரோல் விலையில் மாற்றமானது, மக்களின் நுகர்வு பொருள்களின் விலையிலும் அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கொண்டு வருகிறது. இது சரிதானா?

இந்த விலை உயர்வால் யாருக்கு லாபம்?

இந்த விலை உயர்வு பொதுத்துறை எண்ணை நிறுவனங்களின் இழப்பைக் கணிசமாகக் குறைக்கும். அவற்றின் பங்கு விலைகள் உயரும். விலைக்கட்டுப்பாடு இருந்த காலத்தில் பொதுத்துறை நிறுவனங்களுடன் போட்டிப்போட முடியாமல் வெளியேறிய தனியார் எண்ணைக் கம்பெனிகள் மீண்டும் களத்தில் இறங்க வாய்ப்பை உருவாக்கும். அரசு விரும்புவது இதைத்தான் என்று தெரிகிறது.


எண்ணை நிறுவனங்களின் நஷ்டம் உண்மைதானா? அதைத் தவிர்க்கவே முடியாததா?

கச்சா எண்ணை இறக்குமதி செய்வதால் எண்ணை நிறுவனங்களுக்கு அதிகச் செலவாகிறது. அரசு ஒதுக்கீடு செய்யும் மானியம் போதவில்லை. ஓ.எம்.சி. ஏற்கனவே 30,000 கோடி நஷ்டம் ரூபாய் (எண்ணை மானியத்தில் 40,000 2/3 பங்கு) இழப்பைச் சந்தித்துள்ளது. இது அவர்களின் வருமானத்தில் அதிக இழப்பை உண்டாக்குவதால் தான் விலையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் என்று அரசும் பொதுத்துறை எண்ணை நிறுவனங்களும் சத்தியம் செய்கின்றன. இவர்கள் கூறும் நஷ்டம் என்பது உண்மையில் ’வருமானத்தில் இழப்பு’ தானே தவிர (அண்டர் ரெக்கவரிஸ்), உற்பத்தி மதிப்பில் உண்டாகும் நஷ்டம் அல்ல. எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், எரிவாயும் மட்டுமல்லாமல், வேறு பலவிதமான பெட்ரோலிய பொருள்களையும் உற்பத்தி செய்கின்றன. அவற்றின் விலைகள் கட்டுப்படுத்தப்படுவதில்லை. தங்கள் இஷ்டம் போலவே அவற்றுக்கு விலைகளை இந்நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இந்த வழியில் வரும் லாபம் எந்தக் கணக்கில் வருகிறது? வரிக்குப் பிந்தைய லாபம் பெரும்பாலான எண்ணை நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளாக அதிகரித்துகொண்டு தான் வருகின்றன. அதனால் இவர்கள் கூறும் லாஜிக் உண்மையல்ல.

சர்வதேசச் சந்தை நிலவரங்களால் பெட்ரோலிய பொருள்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாது என்றே வைத்துக்கொண்டாலும், அந்த விலை உயர்வு சாதாரண மக்களை பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து அரசு சிந்திக்கலாம். ஒவ்வொரு வாடிக்கையாளரின் தனிப்பட்ட தேவை, பயன்பாட்டின் அடிப்படையில் மானியத்தை நேரடியாக நுகர்வோருக்கு அளிக்கலாம். மத்திய மாநில அரசுகளின் வரிகள் காரணமாகவே பெட்ரோல், டீசலின் விலை அதிகமாக இருக்கிறது. அவற்றைக் குறைக்கலாம் அல்லது எண்ணை நிறுவனங்களுக்கு கலால் மற்றும் சுங்க வரிகளில் சலுகைகள் அளித்து உற்பத்திச் செலவைக் குறைக்கலாம். எண்ணைக் கம்பெனிகள் தம் வருவாயைப் பெருக்கிக்கொள்ள வேறு வகையான வழிகளையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் பெட்ரோல் விலை உயர்வால், அதை அதிகம் பயன்படுத்தாத மிக ஏழை மக்களே அதிகம் பாதிப்புள்ளாகப் போகிறார்கள்.

ரூபாயின் வீழ்ச்சியாகட்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வாகட்டும், அரசு சொல்லப்போகும் தீர்வு மானியக் குறைப்பும் அந்நிய முதலீடு அதிகரிப்பு, தனியாருக்குச் சாதகமான தீவிர பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள் போன்ற வழிகளைத் தான். வெகு சீக்கிரத்திலேயே மல்டி பிராண்ட் சில்லறை வர்த்தகம், காப்பீடு துறை ஆகியவற்றில் 100% அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இறக்குமதி அதிகரிப்பால் தான் இந்த நெருக்கடி என்றால், அதை சரிசெய்ய வேண்டிய வேலையை விட்டுவிட்டு மக்களின் மீது சுமையை ஏற்றுவது எப்படிப்பட்ட பொருளாதாரக் கொள்கை என்று தெரியவில்லை.

பெட்ரோல் விலையை உயர்த்தும் முடிவை எண்ணை நிறுவனங்கள் எடுத்துள்ளன. அதே நேரத்தில் இந்த முடிவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மக்களின் உணர்வுக்கு மாறாக அரசு செயல்பட முடியாது. சர்வதேச நிலைமைக்கு ஏற்ப எடுக்கப்பட்டுள்ள இந்த விலை உயர்வு விரும்பத்தக்கதோ, மகழ்ச்சியளிக்கும் முடிவோ அல்ல. எனவே, தற்போது உயர்த்தப்[பட்டுள்ள பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெறுவது பற்றி மத்திய அரசு முடிவெடுப்பதற்கு முன்பாக, சில நாள்கள் பொறுமையுடன் நிலைமையை உன்னிப்பாகப் கவனிக்க வேண்டியுள்ளதுஎன்று அறிக்கை விட்டுள்ளார் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி. மக்கள் மீது அரசு எவ்வளவு அக்கறை(?)யுடன் உள்ளது என்பதற்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்

No comments:

Post a Comment