Saturday, September 29, 2012

150 வயதை எட்டிய சென்னை உயர்நீதிமன்றம்





பண பலம், ஆள் பலம், அதிகார பலம் கோலோச்சும் நாட்டில் சாதாரண மனிதனின் கடைசி மற்றும் ஒரே புகலிடமாக விளங்குபவை நீதிமன்றங்கள் தான். வரலாற்றுச் சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கி நீதியை நிலைநாட்டுவதில் தனிச்சிறப்பு பெற்ற சென்னை உயர்நீதிமன்றம் மக்கள் சேவையில் 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இன்று மாபெரும் நீதிமன்றமாக காட்சியளிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் ஆரம்பத்திலேயே உயர்நீதிமன்றமாக நிறுவப்பட்டதல்ல. அது 262 வருட பரிணாம மாற்றங்களுக்குப் பிறகே உயர்நீதிமன்றமாக உருவெடுத்தது. 1600ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் தொடர்பான சிறு குற்றங்களை விசாரிப்பதற்கான நீதிமன்றமாக ஆங்கில அரசால் ஜார்ஜ் கோட்டையில் முதல் நீதிமன்றம் தொடங்கப்பட்டது. அவ்வப்போது சிறு மாற்றங்களுடன் 1640ல் சவுல்ட்ரி கோர்ட் என்று பெயர் மாற்றப்பட்டது. அப்போதே சிவில், கிரிமனல் வகைக் குற்றங்களை விசாரிக்கத் தொடங்கியது. இந்தக் கோர்ட்டில் நீதிபதியாகப் பணியாற்றிய கண்ணப்பா (1644-1648) என்பவரை முதல் இந்திய நீதிபதி என்று கூறலாம்.

மேலும் சில மாற்றங்களுடன் சவுல்ட்ரி கோர்ட், 1688ல் மேயர் கோர்ட் ஆக மாற்றப்பட்டு சில சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 1798ல் இது மெட்ராஸ் கோர்ட் ஆஃப் ரெக்கார்டர் என்று மாற்றப்பட்டு, அதன் முதல் ரெக்கார்டராக தாமஸ் ஸ்டிரேன்ஜ் நியமிக்கப்பட்டார். விரைவில் 1801ல் அது மெட்ராஸ் சுப்ரீம் கோர்ட் ஆக மாறியது. தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கும் சிங்காரவேலர் மாளிகை வளாகத்தில்தான் சுப்ரீம் கோர்ட் செயல்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகளில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு 1862ஆம் ஆண்டுவரை மெட்ராஸ் சுப்ரீம் கோர்ட் செயல்பட்டது.

1862ல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஐகோர்ட் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உயர்நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன. இவ்வாறுதான் சென்னை உயர்நீதிமன்றம் உருவாகியது. 1888ல் தொடங்கப்பட்ட உயர்நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் 1892ல் நிறைவுற்றது. தற்போதுள்ள கட்ட வளாகத்தில் 1892 முதல் உயர்நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் தென்பகுதி மக்கள் பயனடையும் வகையில் 2004 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மதுரையில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றம் தனது நெடிய வரலாறில் பல முக்கியமான வழக்குகளையும் விசித்திரமான வழக்குகளையும் சந்தித்துள்ளது. அபாரமான வாதத்திறமை கொண்ட பல வழக்கறிஞர்களையும், நீதியின் செங்கோல் வழுவாமல் தீர்ப்பளிக்கும் ஞானம் கொண்ட பல நீதிபதிகளையும் சென்னை உயர்நீதிமன்றம் சந்தித்துள்ளது. இன்றும் அது தொடர்கிறது. நாட்டையே கதிகலங்க வைத்த, பரபரப்பூட்டிய பல வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்துத் தீர்ப்பளித்துள்ளது.


நமது நீதிமன்றங்கள் தொடக்கத்தில் சிவில், கிரிமினல் வழக்குகளை மட்டுமே கவனித்து வந்தாலும், சுதந்தரத்துக்குப் பிறகு, நமக்கென்று அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர், அதைக் காக்கும் பொறுப்பும் நீதிமன்றங்களுக்கு வந்துவிட்டது. நாட்டின் முதல் இரண்டு அடிப்படைத் தூண்களான அரசும் நிர்வாகமும் பொறுப்பற்ற வகையில் செயல்பட்டுவரும் இக்காலத்தில், அவற்றைக் கண்டிக்கும் பொறுப்பையும், முறையாகச் செயல்பட வைக்கும் பொறுப்பையும் நீதிமன்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளுக்கும் கண்ணியத்துக்கும் ஆபத்து நேராமல் காப்பதில் நீதிமன்றங்களுக்குத்தான் அதிகக் கடமையும் பொறுப்பும் இருக்கிறது. ஒரு சில குறைபாடுகள் இருப்பினும், அந்தக் கடமையை நமது நீதிமன்றங்கள் செம்மையாகவே செய்துவருகின்றன. கிரிமினல் வழக்குகளில் மட்டுமல்லாமல் சமூக நல வழக்குகளில் பல அற்புதமான தீர்ப்புகளை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. பொது மக்களின் பிரச்சினைகளை தாம் முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு சரியான நடவடிக்கைகளை எடுப்பதில் சென்னை உயர்நீதிமன்றம் இந்தியாவுக்கே உதாரணமாக திகழ்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். முதலாவது பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து இரண்டாம் வகுப்பு மாணவி சுருதி பலியான சம்பவம். தலைமை நீதிபதி இக்பால் அவர்கள் இந்த சம்பவத்தைத் தானே விசாரணைக்கு எடுத்துக்கொண்டு மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (பள்ளி வாகனங்களை முறைப்படுத்தல் மற்றும் ஒழுங்குப்படுத்தல்) சிறப்பு விதிகள் 2012 என்ற சட்டத்தை அரசு கொண்டு வந்திருப்பதைக் கூறலாம். இத்தனை காலமும் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல் லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு இச்சட்டம் கடிவாளம் போட்டுள்ளது. இரண்டாவதாக, கடந்த சில வாரங்களாக அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் நாய்கள், எலிகள் ஒழிப்பைக் கூறலாம். நாய்கள், எலிகள் போன்றவை அரசு மருத்துவமனைகளில் அங்குமிங்கும் உலவுவது நாம் சாதாரணமாகப் பார்க்கும் காட்சிதான். கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையின் ஒன்றின் உடலை எலிகள் கடித்துக் குதறியதைக் கேள்விப்பட்ட தலைமை நீதிபதி மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாகவே, அரசு மருத்துவமனைகளில் உலவும் விலங்குகளை ஒழிக்கும் நடவடிக்கையை  அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.    

நீதிமன்றங்கள் தமது அதிகார வரம்புக்கும் ஆற்றலுக்கும் உட்பட்டு மக்கள் சேவையாற்றினாலும், போதுமான நிர்வாக வசதிகள், கட்டமைப்புகள் இல்லாதது, போதுமான நீதிபதிகள் இல்லாதது, நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்ளாதது எனப் பல காரணங்களால் அவற்றின் செயல்பாடு பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறது. கோடிக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக்கிடப்பதற்கு இவைதான் முக்கிய காரணங்கள். 

சென்னை உயர்நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில் இரண்டு நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலே இருக்கின்றன. வழக்குகளைத் தமிழில் நடத்த வேண்டும் என்பது முதலாவது. நீதிக்காக நீதிமன்றத்தை அணுகும் சாதாரண, ஆங்கில தெரியாத பெரும்பான்மை மக்களுக்கு, அவர்களின் வழக்குக் குறித்து என்ன பேசப்படுகிறது என்பது தெரியாமலேயே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீதிமன்ற நடைமுறைகள் மக்கள் பேசும் மொழியில் அமைந்தால்தான் அது உண்மையான ஜனநாயக உரிமையாக இருக்க முடியும். இரண்டாவது கோரிக்கை மெட்ராஸ் ஹைகோர்ட் என்ற பெயரை மாற்றுவது. மெட்ராஸ் என்பதே சென்னை என்று மாறிவிட்ட பின்னர் இன்னும் எதற்கு உயர்நீதிமன்றத்தின் பெயரில் ‘மெட்ராஸ்’?

நாட்டில் அங்கிங்கெனாதபடி லஞ்ச-ஊழல் நிறைந்திருக்க, அரசியல்வாதிகளின் மீது மக்கள் நம்பிக்கையிழந்துவிட்ட நிலையில், மக்களின் ஒரே நம்பிக்கையாக விளங்குவது நீதிமன்றங்கள் தாம். அந்தப் பொறுப்பை உணர்ந்து இதுவரை நன்றாகச் செயல்பட்டு வரும் சென்னை உயர்நீதிமன்றம், எதிர்காலத்தில் மேலும் சிறப்பாகச் செயல்படும் என்று நம்பலாம்.


No comments:

Post a Comment