Tuesday, June 21, 2011

மார்க்ஸ் என்னும் ’மனிதர்’




”மனித குலத்தின் பெரும்பான்மைக்காகப் பாடுபடக்கூடிய ஒரு வேலையை நாம் தீர்மானித்துக் கொண்டால் எவ்வளவு சுமைகளும் நம்மை வளைத்துவிடாது. காரணம், அவையெல்லாம் அனைவருக்குமான தியாகங்கள். நமக்குக் கிடைக்கப்போகிற மகிழ்ச்சியோ எல்லையற்றது, கஞ்சத்தனமில்லாதது, அகங்காரமற்றது. நமது மகிழ்ச்சி கோடானுகோடி மக்களுக்குச் சொந்தமானது. நமது சாதனைகள் நீடித்து நிற்கும், என்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கும். உன்னதமான மனிதர்கள் வடிக்கும் சூடான கண்ணீரால் நமது சாம்பல் கழுவப்படும்.”

’எதிர்காலப் பணியை தேர்வு செய்வது குறித்து ஒரு இளைஞனின் சிந்தனைகள்’ என்ற தலைப்பில், பள்ளி இறுதி வகுப்புத் தேர்வின் போது ஒரு மாணவன் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றுள்ள வரிகள் இவை. இந்த வரிகளைப் படித்த ஆசிரியர்கள் நினைத்திருக்க மாட்டார்கள், இந்த இளைஞன் தான் சொன்னதைச் செய்து காட்டுவானென்று. அன்று முதல் இன்றுவரை புரட்சிகர மக்கள்நலச் சிந்தனையாளர்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும் அந்த மாமனிதரின் பெயர் காரல் மார்க்ஸ் என்பதாகும்.



பிரெஞ்சு புரட்சித் தீயின் வெம்மை ஐரோப்பாவில் சற்று அடங்கியிருந்த காலம் அது. 1818ஆம் ஆண்டு. அன்று பிரஷ்யா என்றழைக்கப்பட்ட இன்றைய ஜெர்மனியில் மோசெல் நதிக்கரையில் அமைந்திருந்த சிறு நகரம் டிரியர். 1818, மே 5ஆம் நாள் ஹென்ரிச் மார்க்ஸ் என்பவரின் மகனாகப் பிறந்தார் காரல் மார்க்ஸ். பள்ளிப் பருவத்திலேயே உலக அறிவை வளர்த்துக்கொள்வதில் பேரார்வம் காட்டினார். ட்ரியரில் பள்ளிப் படிப்பை முடித்தப் பின்னர் சட்டம் பயில்வதற்கு பான் நகரப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இயல்பிலேயே துறுதுறுப்பும், கேள்விக் கேட்கும் குணமும் கொண்ட மார்க்ஸுக்கு பான் பல்கலைக்கழகச் சூழ்நிலை ஒத்துவரவில்லை. அதனால் அவரை 1836ல் பெர்லின் பல்கலைக்கழகத்துக்கு படிக்க அனுப்பினார் அவரது தந்தை.

பல தத்துவ அறிஞர்கள், சிந்தனையாளர்களின் உறைவிடமாக இருந்த பெர்லின் பல்கலைக்கழகம் மார்க்ஸின் சிந்தனையைத் தூண்டுவதாக இருந்ததில் வியப்பில்லை. சிந்தனையாளர்களுக்கு தத்துவம் தானே கருவி. மார்க்ஸ் தத்துவத்தின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். பண்டைய கிரேக்கத் தத்துவம் முதல் அன்றைய நவீன தத்துவமான காண்ட் மற்றும் ஹெகேலின் தத்துவம் வரை ஆழ்ந்து பயின்றார். அந்த கால ஜெர்மனியின் புரட்சிகரச் சிந்தனையின் ஆதரவாளர்களாக இருந்த இளம் ஹெகேலியர்கள் குழுவில் மார்க்ஸும் தன்னை இணைத்துக்கொண்டார்.

அறிவு வேட்கையில் தீவிர தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு டாக்டர் பட்டம் பெற்றபோது மார்க்ஸின் வயது 23. இது நடந்தது 1841ல். ஆசிரியர் பணியை மேற்கொள்ளலாம என்று முடிவு செய்த மார்க்ஸுக்கு சரியான வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை என்பது நன்மைக்கு தான் என்பதை காலம் உணர்த்தியது. இல்லையெனில் புரட்சியாளர் மார்க்ஸ் நமக்குக் கிடைத்திருக்கமாட்டார். 1842ல் கொலோன் நகரத்தில் ’ ரைனிஷ் ஷெய்டுங்’ என்னும் பத்திரிகையில் எழுதத்தொடங்கி அதன் ஆசிரியரும் ஆனார். ஆனால் அவரது தீவிர அரசியல் சமூக விழிப்புணர்வுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத பிரஷ்ய அரசாங்கத்தின் கெடுபிடியால் அடுத்த ஆண்டே அந்தப் பத்திரிகை மூடப்பட்டது.

இதற்கிடையே 1843, ஜூனில், தான் காதலித்துவந்த ஜென்னியை திருமணம் செய்தார் மார்க்ஸ். சில மாதங்களிலேயே ஃபிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு இடம்பெயர வேண்டியிருந்தது. ஜெர்மனியில் இருந்தபோதே உழைப்பாளர்களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும், அரசும் சமூகமும் இழைத்துவரும் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்தார். தனது பத்திரிகையிலும் எழுதியிருந்தார். அதனால் அரசாங்கத்தின் கோபத்தையும் சம்பாதித்திருந்தார். இப்போது பாரீசில் ஜெர்மன் தொழிலாளர்களின் வாழ்நிலையைப் பார்த்த அவருக்கு அந்த உணர்வு இன்னும் அதிகமானது. மேலும் பிரெஞ்சு சோசலிஷ சிந்தனைக் கொண்டவர்களுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பும் அவரது சிந்தையை மேலும் கிளறின. இந்தக் காலக்கட்டத்தில் தான் எங்கெல்ஸ் அவர்களைச் சந்திக்கிறார். என்றும் பேசப்படப் போகும் நட்புக்கான விதை அன்று ஊன்றப்பட்டது.


1844ல் மார்க்ஸ் தம்பதியினருக்கு முதல் பெண்குழந்தைப் பிறந்தது. மார்க்ஸ் மிகப் பெரும் தத்துவஞானியாக உருவானப் போதிலும் நிரந்தர வேலையின்றி வறுமையில் வீழ்ந்ததால், சரியான மருத்துவம் செய்ய வசதியின்றி நான்கு குழந்தைகளை இழந்தனர் மார்க்ஸ் தம்பதியினர். ஏழில் மூன்று குழந்தைகளையே அவர்களால் காப்பாற்ற முடிந்தது.

தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதிலும் ஜனநாயக உரிமைகளுக்குக் குரல்கொடுப்பதிலும் தீவிரமாக இருந்ததால் பிரெஷ்ய அரசாங்கம் காரல் மார்க்ஸுக்கு நாட்டினுள் நுழைய தடைவிதித்தது. மேலும் அவரது தீவிர அரசியல் சமூக கருத்துகளால் கலவரமடைந்த பிரெஞ்சு அரசும் அவரை நாட்டைவிட்டு வெளியேற்றியது. பெல்ஜியத்துக்கு குடிபெயர்ந்தார் மார்க்ஸ். அவர் எங்கு சென்றாலும், அவரது தீவிர கருத்துகளையும் செயல்பாடுகளையும் கண்ட அரசாங்கங்கள் அவரை எப்போதும் கண்காணித்துக்கொண்டே இருந்தன. இதற்கிடையில் எங்கெல்ஸ் உடனான நட்பு வளர்ந்து இருவரும் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலானார்கள். அப்போது இங்கிலாந்தில் வசித்துவந்தாலும், மார்க்ஸுடன் இணைந்து அரசியல் செய்லபாடுகளோடு தத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார் எங்கெல்ஸ்.

முதலாளிகள் எவ்வாறு தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி மேலும் மேலும் செல்வம் சேர்க்கிறார்கள், அதைத் தட்டிக்கேட்கும் மக்களை எப்படி அரசுகள் ஒடுக்குகின்றன என்பதையெல்லாம் தமது எழுத்துகளாலும் போராட்டங்களாலும் மக்களுக்கு உணர்த்தினர். அரசின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொள்ள வேறு காரணமும் வேண்டுமா?



சர்வதேச அளவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கும் பொருட்டு 1846ல் கம்யூனிஸ்ட் கடிதக் குழுவை உருவாக்கினர். இது கம்யூனிஸ் கழகமாக மாறியது. இங்கிலாந்து நாட்டிலிருந்த முற்போக்கு ஜனநாயக இயக்கங்களின் ஆதரவுடன் 1847ல் இரண்டாவது கம்யூனிஸ்ட் கழக மாநாடு நடைபெற்றது. 1848ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் இணைந்து கம்யூனிஸ் இயக்கத்தின் செயல்திட்டத்தை விளக்கும் வகையில் ஒரு அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டனர். அதுதான் இன்றும் போற்றப்படும் புகழ்பெற்ற ‘கம்யூனிஸ்ட் அறிக்கை (Communist Manifesto) ஆகும். மனிதச் சமுதாயத்தின் பரிணாமம், வர்க்கங்களின் தோற்றம் மற்றும் வரலாறு, அரசு அதிகாரம், சுரண்டல், தொழிலாளர்களின் உரிமைகள் என அனைத்தையும் விவாதிக்கும் அந்த அறிக்கை, ” இழப்பதற்கு அவர்களின் தளைகளைத் தவிர ஏதுமில்லை பாட்டாளிகளுக்கு. பெறுவதற்கோ ஒரு உலகம் இருக்கிறது. உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்!” என்ற அறைகூவலுடன் நிறைவுபெறுகிறது. இந்த 21ஆம் நூற்றாண்டிலும் உழைப்பாளர்களும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் வழிகாட்டியாக இருப்பது இந்த அறைகூவல் தான்.

தொழிலாளர், சோசலிஷ இயக்கங்களுக்கு மார்க்ஸின் பங்களிப்பைக் கண்டு அஞ்சிய அரசாங்கங்கள் அவரைத் தொடர்ந்து நாடுகடத்தின. பெலிஜியத்திலிருந்து, பிரஷ்யா, பிரஷ்யாவிலிருந்து ஃபிரான்ஸ். ஃபிரான்ஸிலிருந்து இங்கிலாந்து என்று தொடர்ந்து மார்க்ஸின் குடும்பம், அரசுகளால் அலைக்கழிக்கப்பட்டது. இருப்பினும் தமது பத்திரிகை மற்றும் புரட்சிப் பணிகளை தீவிரமாகச் செய்தனர் இரட்டையர்களான மார்க்ஸும் எங்கெல்சும். இறுதியாக அந்தக் காலத்தில் ஓரளவுக்கு ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட்ட இங்கிலாந்துக்கு 1849ல் குடிபெயர்ந்தார் மார்க்ஸ். லண்டன் அவரது நிரந்தர வசிப்பிடமாகியது.

இயக்க வேலைகள் காரணமாக முழுமையாக ஈடுபடமுடியாமல் இருந்த தத்துவ ஆராய்ச்சியை லண்டனில் தொடர்ந்தார் மார்க்ஸ். நியூயார்க் டெய்லி ட்ரிபியூன் போன்ற பத்திரிகையில் தொடர்ந்து எழுதினாலும் மார்க்ஸின் குடும்ப வறுமையைப் போக்க அந்த வருமானம் போதுமானதாக இல்லை. மார்க்ஸின் குடும்பத்துக்கு உதவுவதற்காகவே தனது தந்தை பங்குதாரராக இருந்த நிறுவனத்தில் குமாஸ்தா வேலைக்குச் சென்றார் எங்கெல்ஸ். மார்க்ஸ் இறந்த பின்னரும் கூட அவரது குடும்பத்துக்கு புரல்வலராக இருந்தார் எங்கெல்ஸ்.


உடல் உபாதைகள் அதிகம் இருந்தாலும் தமது ஆய்வுகளை மிகத் தீவிரமாகத் தொடர்ந்தார் மார்க்ஸ். லண்டன் மியூசியம் நூலகமே அவரது வசிப்பிடமாயிற்று. சமுதாயத்தின் இன்றைய நிலைக்கு என்ன காரணம், பெரும் செல்வந்தர்களாக ஒரு சிலர் இருக்க பெரும்பாலான உழைக்கும் மக்கள் வறுமையில் உழலக் காரணம் என்ன, முதலாளிகள் எப்படி உருவாகிறார்கள், முதலாளித்துவம் எப்படிச் செயல்படுகிறது, முதலாளித்துவ அமைப்பு மக்களைச் சுரண்டிக் கொழுப்பதன் பின்னணி என்ன என்பதையெல்லாம் ஆராய்ந்தார் மார்க்ஸ். முதல், வட்டி, கூலி லாபம் என்பதற்கெல்லாம் இதுகாறும் அறிஞர்கள் வழங்கிவந்த விளக்கங்கள் எல்லாம் மார்க்ஸின் அறிவு ஒளியில் காலாவதியாயின. இந்த உழைப்பின் விளைவாக, அவரது நூல்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் 1867ல் மூலதனம் என்னும் இணையற்ற நூலின் முதல் பாகத்தை மார்க்ஸ் வெளியிட்டார். மார்க்ஸ் எழுதிய இந்த நூலின் 2 மற்றும் 3வது பாகங்களை அவரது மறைவிற்குப்பின் எங்கெல்ஸ் தொகுத்து வெளியிட்டு அவரது பணியை நிறைவுசெய்தார்.



கடும் உழைப்பும் நோயும் சேர்ந்து மார்க்ஸின் உடல்நலத்தைச் சூறையாடின. எனினும் மார்க்ஸ் தனது இயக்க பணிகளையோ ஆராய்ச்சிகளையோ சிறிதளவும் தளர்த்திக்கொள்ளவில்லை. வாழ்விலும் தாழ்விலும் அவருக்குத் தோள்கொடுத்து அவரைத் தாங்கிவந்த அவரது மனைவி ஜென்னி 1881ல் காலமானார். நோயைவிட ஜென்னியின் பிரிவு மார்க்ஸைப் பெரிதும் பாதித்தது. உலக மக்களின் நன்மைக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக்கொள்பவர்கள் சொந்தச் சோகங்களிலேயே மூழ்கிவிட முடியாது அல்லவா? மார்க்ஸ் தமது பணியைத் தொடர்ந்தார். சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கவேண்டுமென்றால், வர்க்கங்கள் ஒழிய வேண்டும். தனிச் சொத்துடமை ஒழியவேண்டும். இருப்பவர் இல்லாதவர் என்ற வேறுபாடுகள் அகல வேண்டும். எல்லாரும் எல்லாமும் பெற்று வாழவேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் போராடிய மார்க்ஸ் 1883ல, மார்ச் 14 அன்று சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார். ஆம்! மீளாத் துயிலில் ஆழ்ந்தார்.


அரசர்கள், ஆண்டைகள், வீரர்கள் தான் வரலாறை உருவாக்குகிறார்கள் என்ற கருத்தை உடைத்து, ’வரலாறை உருவாக்குபவர்கள் மக்கள் தான்- ஆனால் அவர்கள் விரும்பிய படியல்ல’ என்பதை நிறுவினார் மார்க்ஸ். மனிதனின் உணர்வுநிலை அவனது வாழ்வுநிலையைத் தீர்மானிக்கவில்லை. மாறாக மனிதனின் வாழ்நிலையே மனிதனின் உணர்வு நிலையைத் தீர்மானிக்கிறது. உற்பத்திச் சார்ந்த பொருளாதார உறவுகளே சமூக உறவுகளை உருவாக்குகின்றன என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவினார் அவர். நவீன அரசியல், பொருளாதார, தத்துவ, சமூக, வரலாற்றுத் துறைகளில் மார்க்ஸின் சிந்தனைகளின் செல்வாக்கு அளப்பறியது. தவிர்க்க இயலாதது. கடந்த கால தத்துவஞானிகளைப் போல் கனவு காணாமல், தனது தத்துவத்தை நடைமுறையில் செயல்படித்திக் காட்டியவர் அவர்.



உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, சுரண்டப்படுகிறார்களோ, அங்கெல்லாம் மக்கள் தம் உரிமைகளைப் பெற வழிகாட்டுவது மார்க்ஸின் சிந்தனைகள் தான். மார்க்ஸ் இறந்தபிறகு உலகெங்கும் அவரது சிந்தனைகளின் தாக்கம் வேகமாக பரவியது. 20ஆம் நூற்றாண்டு பெரும் மாற்றங்களைச் சந்தித்தது. காரணம் மார்க்ஸின் கருத்துகள். மார்க்ஸின் கருத்துகளின் தாக்கமானது, அவரது கருத்துகளை எதிர்க்கும் அரசுகள் கூட மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்ள காரணமானது. பி.பி.சி. நிறுவனம் நடத்திய ’கடந்த ஆயிரம் ஆண்டின் தலைசிறந்த சிந்தனையாளர் யார்?’ என்ற கருத்துக்கணிப்பில் காரல் மார்க்ஸைத் தேர்ந்தெடுத்தனர் மக்கள். ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், காண்ட் ஆகிய தலைசிறந்த சிந்தனையாளர்களுக்கும் மேலாக காரல் மார்க்ஸ் விளங்குகிறார் என்பதே அவரது புகழுக்குச் சான்றாகும்.

1 comment:

Nalliah said...

அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள்.
அன்று உழைப்பை சார்ந்து உழைப்பாளர்களாலும் தொழிலாளர்ளாலும் உருவாக்கப்பட்ட விவசாயப்பொருட்கள், உற்பத்திப்பொருட்கள் போன்றன தங்கத்திற்கும் வெள்ளிக்கும் கைமாறின. ஆனால் இன்று தங்கம், வெள்ளிக்கு கைமாறியது போய் சர்வதேச செலாவணியான எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) அச்சிட்ட அமெரிக்க டாலருக்கு மக்களின் உழைப்பும், நாடுகளின் இயற்கை வளங்களும், உற்பத்தி பொருட்களும் கைமாறுகின்றன என்றும், ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, கடனட்டைகள் மூலம் சாதாரண மக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.
தனிநபர்களும், பெருநிறுவனங்களும், வங்கிகளிடமிருந்து நுகர்வு மற்றும் முதலீட்டுக் கடனை நம்பி இயங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டது. எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி, வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களைப் பெற்றுக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிகளின் நுகர்வோர் கடன், ஈட்டுக் கடன் மற்றும் கடனட்டைகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்களும், நிரந்தரமாகக் கடன்காரர்களாக மாற்றப்படுவதோடு இவ்வங்கிக் கடன்பழுக்கள் மேலும் உயருமே தவிர, முற்றாக திருப்பிச் செலுத்தப்பட இயலாது.
வங்கிக் கடன்தான் மூலதனம் என மாறிப்போயுள்ள, சேமிப்பே இல்லாத “கடன்” (CREDIT) மயமான உலகில், தொடர்ந்து துரத்தும் கடன் பழுவால் ஏற்படும் பணப் பாய்ச்சல் (CASH FLOW) குறைவினால், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்கள் மற்றும் கடனட்டைகள் மூலமாக தம்மைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்ற ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள்.
நாட்டு மக்களின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றை பேண, செலவிடப்பட வேண்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்கங்களின் வங்கிக் கடன் சுமைக்கு வட்டியாக செலவிடப்படுகின்றது. 20,000 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் மூழ்கி இருக்கும் அமெரிக்க அரசாங்கம் முதல் 500 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் ஆழ்ந்து போயுள்ள கிரேக்க அரசாங்கம் வரை அனைத்து அரசாங்கங்களும், பெருவர்த்தக நிறுவனங்களும், சாதாரண மக்களும் தீராத வங்கிக் கடன்களில் மூழ்கி, முன்னொருபோதும் முகம் கொடுத்திருக்காத புதிய “கடன்” சவால்களை எதிர் கொண்டு திண்டாடும், அனைத்தும் “கடன்” மயமான இன்றைய உலகில், வீடுகள், வியாபாரங்கள் உட்பட அனைத்தும் ஈட்டுக் கடன்கள் மூலம் வங்கிகளின் கைவசமான இன்றைய காலகட்டத்தில், உலக நிதிச் சந்தையில் உண்மையான உற்பத்தி சம்பத்தப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் வெறும் 1 சதவீதமாகவும், 99 சதவீதமான பரிவர்த்தனைகள் பந்தய ஒப்பந்தங்களும் ஊக வணிகங்களாகவும் (FUTURES & DERIVATIVES) மாறிவிட்ட தற்போதைய சூழ்நிலைகளில் “மூலதனம்” பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பல விடயங்களெல்லாம் இத்துப்போன கருத்துக்களினதும் காலாவதியான தகவல்களினதும் குவியல்களாக மாறிவிட்டன.
உலகம் பூராக, உலகவங்கி (WORLD BANK), சர்வதேச நாணய நிதியம் (INTERNATIONAL MONETARY FUND), பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE), உள்ளிட்ட பல்வேறு வங்கிகளினதும், நிதி மையங்களினதும் சொந்தக்காரர்களான சர்வவல்லமை பொருந்திய ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (J.P.MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளினதும் "பணநாயகம்" அனைத்து நாடுகளிலும் ஜனநாயகத்தை அழித்தொழித்துவிடும்.
அமெரிக்கா முதல் ஆபிரிக்கா வரை உலகளாவிய ரீதியில், மக்களனைவரும் அச்சுறுத்தல்கள் மூலமும், பயத்தினூடாகவும், கட்டுப்படுத்தப்பட்டு, இலகுவில் ஆளப்படக் கூடியவர்களாக உருவாக்கப்படுகின்றார்கள் எனத் தெரிவித்திருந்த விசுவானந்ததேவன், 99 சதவீதமான மக்களின் சிந்தனை அன்றாட வேலைச் சுமையுடனும், அடுத்தநேர உணவுடனுமே மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.

- நல்லையா தயாபரன்

Post a Comment