Tuesday, September 21, 2010

இனவெறியை வென்ற நட்பு

 லஸ் லாங்கும் ஜெஸ்ஸி ஓவன்ஸும்




20ஆம் நூற்றண்டில் உலக நாடுகளுக்கெல்லாம் மாபெரும் அச்சுறுத்தலாக இருந்தவர் யாரென கேட்டால், ஹிட்லர் என்பதுதான் அனைவரின் பதிலாக இருக்கும். ஹிட்லரின் நாடு பிடிக்கும் கொள்கைமுதல் யூதர்கள் படுகொலைவரை அனைத்துக்கும் அடிப்படியானது ஹிட்லர் உயர்த்திப்பிடித்த இனவெறிக் கொள்கையான ‘ஆரிய மேன்மைகொள்கையே. மனித இனத்தில் ஆரிய இனம் தான் உயர்ந்தது, அந்த ஆரிய இனத்திலேயே தூய்மையானவர்கள் ஜெர்மானியர்கள்தான். ஆகவே, அவர்களே இந்த உலகை ஆளத்தகுந்தவர்கள் என்பது ஹிட்லரின் இனவாதக் கொள்கையாகும்.

ஆரிய மேன்மை தாங்கிய ஜெர்மானியர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று அவர் உறுதியாக நம்பினார். அது 1936ஆம் ஆண்டு. ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற இருந்தது. அந்தப் போட்டிகளை தனது கொள்கையை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள ஹிட்லர் முடிவு செய்தார். ஹிட்லரின் கண்காணிப்பில் ஜெர்மானிய வீரர்கள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டனர். முக்கிய வீரர்கள் போட்டி நடைபெறும் நாள் வரை அவர்களது திறமையை யாரும் காணாத வகையில் ரகசியமாக வைக்கப்பட்டனர்.    

ஜெஸ்ஸி ஓவன்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பின தடகள வீரரான இவரும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்காக பெர்லினுக்கு வந்திருந்தார். தான் கலந்துகொள்ளும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று இனவெறி மிக்க ஹிட்லரின் முகத்தில் கரியைப் பூசவேண்டும் என்று தீர்மானத்தோடு கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டிருந்தார்.

அன்று நீளம் தாண்டுதல் போட்டிக்கான தகுதிச் சுற்றுகள் நடைபெற்றன. அதற்கு ஓராண்டுக்கு முன்புதான் 8.13 மீட்டர் நீளம் தாண்டி உலக சாதனைப் படைத்திருந்தார் ஜெஸ்ஸி ஓவன்ஸ். எனவே தகுதிச் சுற்றை கடந்து எளிதாக இறுதிச் சுற்றை அடைந்துவிடலாம் என்று நினைத்து களமிறங்கினார் ஓவன்ஸ். போட்டிகள் ஆரம்பமாயின.

அப்போது ஓவன்ஸை மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கினார் அந்த உயரமான ஜெர்மானிய இளைஞர். அவர் பெயர் லஸ் லாங். தனது முதல் முயற்சியிலேயே 7.90 மீட்டர் நீளம் தாண்டி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார் லஸ் லாங். அவரை ஹிட்லர் தன் கண்கானிப்பிலேயே ரகசியமாக வைத்திருந்த விஷயத்தை ஓவன்ஸ் அப்போதுதான் கேள்வியுற்றார்.

இப்போது ஓவன்ஸின் முறை வந்தது. லஸ் லாங் மட்டும் இந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுவிட்டால், ஹிட்லரின் நம்பிக்கை உண்மையாகிவிடுமே. என்னைப் போன்ற நீக்ரோவால் வெற்றிபெற முடியாது என்ற ஹிட்லரின் ‘ஆரிய மேன்மைநம்பிக்கைக்கு வலுச் சேர்ந்துவிடுமேஎன்ற எண்ணம் ஜெஸ்ஸி ஓவன்ஸ் மனதில் பதட்டத்தை ஏற்படுத்தியது. ஓவன்ஸின் முதல் முயற்சி, அவர் ஃபவுல் செய்ததால் வீணானது. தொடர்ந்து இரண்டாவது முயற்சியிலும் எல்லைக்கோட்டைத் தாண்டி கால் வைத்ததால், அதுவும் வீணானது. வெறுப்படைந்த ஓவன்ஸ் கோபத்துடன் தரையை எட்டி உதைத்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். ‘இதற்காகவா அமெரிக்காவிலிருந்து கடல்கடந்து வந்தேன்?என்று மனதுக்குள் குமுறினார்.

அப்போது தனது தோளின் மீது ஒரு கை ஆறுதலாக தொடுவதை ஓவன்ஸ் உணர்ந்தார். அது வேறு யாருமல்ல. யாரிடம் தோற்றுவிடக்கூடாது என்று ஓவன்ஸ் நினைத்தாரோ அதே லஸ் லாங் தான்.

‘என்னுடைய பெயர் லஸ் லாங்என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட லஸ் லாங், ‘ஏதோ ஒரு விஷயம் உங்களுடைய மன அமைதியை கெடுக்கிறது. உங்களுடைய திறமைக்கு கண்ணை மூடிக்கொண்டு தாண்டியிருந்தாலே தகுதி பெற்றிருப்பீர்கள்என்று ஓவன்ஸுக்கு தன்னம்பிக்கையூட்டினான். நாஜி இளைஞர் பாசறையில் பயிற்சி பெற்றிருந்தும் ‘ஆரிய இன மேன்மைபாராட்டாத லஸ் லாங்கைப் பார்த்து ஓவன்ஸ் ஆச்சரியம் அடைந்தார். சிறிது நேரம் ஆறுதலாக உரையாடிய பின்னர் ஒவன்ஸிடம், ‘இது ஒன்றும் இறுதி போட்டியில்லையே. தேவையான தூரத்துக்கு தாண்டி தகுதி பெற்றாலே போதுமே. இறுதிப் போட்டியில் உங்களுடைய முழுத்திறமையை காட்டலாம். அதனால் எல்லைக்கோட்டுக்கு அரை அடி முன்பே நீங்கள் ஒரு கோடு கிழித்துக்கொண்டு அங்கிருந்து தாண்டுங்கள். கண்டிப்பாக தகுதிப் பெறுவீர்கள்என்று ஓவன்ஸை தட்டிக்கொடுத்தார் லஸ் லாங்.

மனம் தெளிவடைந்த ஓவன்ஸ் லஸ் லாங் சொன்னபடியே செய்தார். தேவைப்பட்டதைவிட ஓர் அடி அதிகமாகவே தாண்டி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் ஓவன்ஸ்.

மனம் நெகிழ்ந்த ஓவன்ஸ் லஸ் லாங்குக்கு நன்றி சொல்வதற்காக அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றார். லஸ் லாங்கின் ஆறுதல் மட்டும் இல்லையென்றால் மறுநாள் நடக்கப்போகும் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போயிருக்கும். லஸ் லாங்கும் ஜெஸ்ஸி ஓவன்ஸும் தங்களது இன வேறுபாடுகளை மறந்து மனம் விட்டுப் பேசினர். தங்களைப் பற்றி, விளையாட்டைப் பற்றி, உலக நடப்புகளைப் பற்றி என பல விஷயங்களைப் பேசினர். முடிவில், அந்த அறையை விட்டு வெளியேறும் போது இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆகியிருந்தார்கள்.

இறுதிப் போட்டி தொடங்கியது. லஸ் லாங் தனது முந்தைய சாதனையை முறியடித்தார். இது ஜெஸ்ஸி ஓவன்ஸை மேலும் சாதிக்கத் தூண்டியது. லஸ் லாங் அளித்த தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்கிய ஜெஸ்ஸி ஓவன்ஸ் 8.06 மீட்டர் நீளம் தாண்டி, புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். அப்போது அவரை முதலில் பாராட்டியது லஸ் லாங் தான். அதுவும் சில நூறு மீட்டர் தூரத்தில் ஹிட்லர் பார்த்துக்கொண்டிருக்க முழு மனத்துடன் ஓவன்ஸின் கைகளைப் பற்றி குலுக்கினார். அவர்கள் இருவரின் நட்பானது சர்வாதிகாரியின் இனவெறியை வென்றது.
தங்கப்பதக்கத்துடன் ஓவன்ஸ். அருகில் வெள்ளி வென்ற லஸ் லாங்

அந்த வெற்றியோடு ஓட்டப் பந்தையங்களில் மேலும் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார் ஓவன்ஸ். நீளம் தாண்டுதலில் ஓவன்ஸ் அன்று படைத்த ஒலிம்பிக் சாதனை அடுத்த 25 ஆண்டுகளுக்கு முறியடிக்கப்படாமல் இருந்தது. 

நான் வென்றுள்ள அத்தனை பதக்கங்களையும் கோப்பைகளையும் ஒன்று சேர்த்து உருக்கினாலும், அவை லஸ் லாங்கின் 24 காரட் தூய்மையான நட்புக்கு ஈடாகாது என்று லஸ் லாங்கின் நட்பு பற்றிக் கூறினார் ஓவன்ஸ். அன்று லஸ் லாங்கின் நட்பை உணர்ந்த போது, நவீன ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கிவைத்த பியரி டி கூபெர்டின் அவர்களின் வார்த்தைகள் தான் தனது நினைவுக்கு வந்ததாக ஜெஸ்ஸி ஓவன்ஸ் நினைவு கூர்கிறார். அது இதுதான்:

‘ஒலிம்பிக் போட்டியின் முக்கிய நோக்கம் வெற்றிபெறுவதல்ல, பங்கு பெறுவதுதான். வாழ்க்கையின் அடிப்படையான அம்சம் வெற்றிகொள்வதல்ல, நன்றாகப் போராடுவதே

’உடற்கூறியலின் தந்தை’ ஆண்ட்ரியஸ் வெசாலியஸ்

ஆண்ட்ரியஸ் வெசாலியஸ்


றிவியல் என்பது நாள் தோறும் வளர்ந்து கொண்டே இருப்பது. காலங்காலமாக உண்மை என்று கருதப்பட்டு கடைபிடிக்கப்படும் பல கோட்பாடுகளை நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் பொய்ப்பித்து வருவதை நாம் நடைமுறையில் காண்கிறோம். இப்போது சரி என்று கருதப்படும் உண்மைகள் பிற்காலத்தில் தவறு என்று நிரூபிக்கப்படலாம். உண்மை அறிதல் ஒன்றே அறிவியல் முறையின் நோக்கமாகும்.

இப்போதுள்ளதைப் போல் அறிவியல் மனப்பாங்கு கடந்த காலங்களில் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. செவ்வியல் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களான அரிஸ்டாட்டில், கேலன் போன்ற அறிவியல் அறிஞர்களின் கருத்துகளே முற்றான உண்மைகள், அவை மாற்ற முடியாதவை என்பதைப் போன்ற கருத்துகளே ஐரோப்பிய அறிவுலகம் முழுவதும் 1200 ஆண்டுகளுக்கும் மேலாக செல்வாக்கு செலுத்தி வந்தன. மத நூல்களும் தம் பங்குக்கு ஏராளமான மூட நம்பிக்கைகளை பரப்பி வந்தன. ஐரோப்பிய கண்டத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ரோமப் பேரரசோ அறிவியல் சிந்தனைகளுக்கு கடுமையான தடைகளை விதித்திருந்தது.

மருத்துவத் துறையிலும் இத்தகைய பழமைவாதக் கருத்துகளே உண்மை என்று பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் காரணமாக புதிய சிந்தனைகள் முளைவிட ஆரம்பித்தன. பழைய கோட்பாடுகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அத்தகைய புரட்சிகரமான ஆய்வுகளை மேற்கொண்டவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளரும் மருத்துவருமான ஆண்ட்ரியஸ் வெசாலியஸ்.


பரம்பரைப் பரம்பரையாக அரசவை மருத்துவர்களாகவும் மருந்தாளுனர்களாகவும் பணியாற்றிவந்த குடும்பத்தில் 1514ஆம் ஆண்டு டிசம்பர் 31 ல் பிறந்தார் ஆண்ட்ரியஸ் வெசாலியஸ். வெசாலியஸின் தந்தையான ஆண்ட்ரீஸ் வான் வெசலுக்கு தம் மகனை மருத்துவராக்க வேண்டுமென்று ஆசை. எனவே அடிப்படை கல்விக் கற்ற பிறகு மருத்துவம் படிக்க 1533ல் பாரீஸ் நகருக்கு சென்றார் வெசாலியஸ். அங்கு அவருக்கு கற்பித்த பேராசிரியர்களால் உடற்கூறியல் ஆய்வில் வெசாலியஸுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. கல்லறையிலிருந்து பிணங்களை திருட்டுத்தனமாக எடுத்துவந்து ஆய்வுகளை செய்தார் என்றால் அவருடைய ஆர்வம் எப்படிப்பட்டது என்பதை அறிந்துகொள்ளலாம். போர் காரணமாக பாரீஸை விட்டு வெளியேற நேர்ந்தது. பின்னர் இத்தாலியின் பதுவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது ஆய்வு டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.
மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார்

அங்கேயே பேராசிரியராக பணியில் சேர்ந்த வெசாலியஸ் தனது உடற்கூறியல் ஆய்வைத் தொடர்ந்தார். கி.பி.2 -ஆம் நூற்றாண்டில வாழ்ந்த கேலன் எழுதிவைத்த கருத்துகளே பாடமாக கற்பிக்கப்பட்டு வந்த காலமது. கேலனின் ஆய்வு முடிவுகளை கேள்விக்கு உட்படுத்துவது பெருங்குற்றமாக அந்நாள்களில் கருதப்பட்டு வந்தது. ஆனால், உண்மையான ஆய்வில் நம்பிக்கைக் கொண்ட வெசாலியஸ் கேலனின் பல கருத்துகள் தவறு என்பதைக் கண்டுப்பிடித்தார்.

மனித உடலின் உள்ளுறுப்புகளை கூர்ந்து ஆய்வு செய்து அவற்றின் சரியான இருப்பிடம், அமைப்பு, வேலைகள் ஆகியவைப் பற்றி புதிய உண்மைகளை வெளிக்கொணர்ந்தார். சிறந்த ஓவியர்களை பணிக்கு அமர்த்தி உடலுறுப்புகளை வரையச் செய்தார். அந்த ஓவியங்களின் துணையோடு மாணவர்களுக்குக் கற்பித்தார். அவருடைய காலம் வரை, மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் பாடத்தை கற்பிக்கும் பேராசிரியர் பாடத்தை மாணவர்களுக்குப் படித்துக்காட்டும் போது, நாவிதர் ஒருவர் பிணத்தின் உடலை அறுத்துக் காண்பிப்பார். ஆனால் மனித உடல் பற்றி கேலன், அரிஸ்டாட்டில் ஆகியோரின் கருத்துகள் சரிதானா என்பதை எந்த ஒரு பேராசிரியரும் சோதித்துப் பார்த்ததில்லை.
வெசாலியஸின் நூலில் இடம்பெற்றுள்ள படம்

ஆனால், வெசாலியஸ் கற்பிக்கும் முறை வித்தியாசமானது. இறந்த மனிதனின் உடல் மேசையில் கிடத்தப்பட்டிருக்க மாணவர்கள் சூழ்ந்து நிற்பர். வெசாலியஸ் தாமே உடலை அறுத்து மாணவர்களுக்கு உடற்கூறு பாடம் நடத்துவார். மாணவர்களையும் ஆய்வு செய்யத் தூண்டுவார். வெசாலியஸ் ஆய்வுகள் மருத்துவ உலகில் பிரபலமடையத் தொடங்கியது. மரண தண்டனைப் பெற்ற கைதிகளின் உடல்களை வெசாலியஸின் ஆய்வுக்கு உதவும் பொருட்டு அனுப்பினார் அந்நாளைய பதுவா நகர மேயர். தாம் கண்டறிந்தவற்றை பல நூல்களாக எழுதினார் வெசாலியஸ். அவற்றுள் தலையாயது மனித உடல் அமைப்பைப்பற்றி என்னும் பொருள்படும் ‘டி ஹ்யூமனி கார்ப்போரிஸ் ஃபேப்ரிகா’ என்னும் நூல். தனது கண்டுப்பிடிப்புகளில் ஏதேனும் தவறு இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டால் அதை ஏற்றுத் திருத்திக்கொண்டார் வெசாலியஸ். தமது மாணவர்களையும் சுயமாக ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவித்தார். புதிய கண்டுபிடிப்புகள் என்றால் எதிர்ப்பில்லாமல் இருக்குமா? பழமைவாதிகளும் மதவாதிகளும் அவரைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனாலும் அவர்கள் வெசாலியஸின் ஆராய்ச்சிகளை தவறென்று நிரூபிக்க முடியாமல் தோல்வியடைந்தனர்.

வெசாலியஸின் முக்கிய கண்டுபிடிப்புகளில் சில:

மனித உடலின் அடிப்படைச் சட்டகம் எலும்பு மண்டலம் என்று நிறுவினார். தாடை எலும்பு என்பது ஒன்று தான், ஸ்டெர்னம் என்னும் மார்பெலும்பு மூன்று பகுதிகளைக் கொண்டது என்று கண்டறிந்தார்.

உடல் தசைகளின் அமைப்பை முறையாக ஆராய்ந்து வகைப்படுத்தினார்.

இதயத்தின் உள்ளறைகளை கண்டறிந்து சொன்னார். இரத்த குழாய்களில் உள்ள பல வால்வுகளை கண்டறிந்தார்.

உணர்வுகளை கடத்துவதும், உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதும் நரம்புகள் தான் என்றார்.

நரம்புகள் மூளையிலிருந்தே ஆரம்பிக்கின்றன. அவற்றை ஒருங்கிணைத்து கட்டுப்படுத்துவது மூளை தான் என்று கண்டறிந்தார்.

கல்லீரலின் அமைப்பை வெளிப்படுத்தினார். சிறு நீரகங்களின் அமைப்பையும், இரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை சிறுநீராக வெளியேற்றுவதே சிறுநீரகத்தின் வேலை என்பதை வெளிப்படுத்தினார்.

பலம் இரத்தக் குழாய்கள், குடல், நுரையீரலை சூழ்ந்துள்ள ப்ளூரா உறை ஆகியவற்றை விளக்கினார். குடல்வாலைக் கண்டறிந்து சொன்னவரும் இவரே.

மூலையின் அமைப்பைப் பற்றி சிறந்த விளக்கங்களை அளித்தார். ஹைப்போதலாமஸ், கார்ப்பஸ் கொலோசம் போன்ற மூலையின் உள்ளுறுப்புகளின் அமைப்பை முதலில் விளக்கியவரும் இவரே.

மருந்து, உணவு, கைகளைப் பயன்படுத்தல் (அறுவை சிகிச்சை) ஆகியவையே மருத்துவத்தின் அடிப்படைகள் என வரையறுத்தார்.

இப்படிப்பட்ட புரட்சிகரமான ஆய்வுகளை மேற்கொண்டுவந்த வெசாலியஸைத் தேடி பதவிகளும் வந்தன. அரசரின் மருத்துவக் குழுவில் பல ஆண்டுகள் பணியாற்றிய வெசாலியஸ் தனது ஆய்வுகளைத் தொடர்ந்து செய்துவந்தார். புதிய கண்டுப்பிடிப்புகளுக்கு ஏற்ப தனது நூல்களை அவ்வப்போது திருத்தி எழுதினார். அவரது புகழைக் கண்டுப் பொறாமைக்கொண்ட அவருடைய சக அறிஞர்களால் தொடர்ந்து குற்றச்சாட்டுகளுக்கும் தொல்லைகளுக்கும் உள்ளானார். தனது ஐம்பதாவது வயதில், ஜெருசலேமுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டுத் திரும்பும் வழியில் ஸாகிந்தோஸ் என்னும் தீவில் 1564ல் மரணமடைந்தார்.

வெசாலியஸோடு அவருடைய ஆராய்ச்சிகள் முடிந்துவிடவில்லை. அவருக்குப் பின் நிகழ்த்தப்பட்ட பல மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு அவருடைய ஆய்வுகள் தான் அடைப்படையாக அமைந்தன. இரத்த ஓட்டத்தைக் கண்டுப்பிடித்துச் சொன்ன வில்லியம் ஹார்விக்கு அடிப்படையாக அமைந்தது வெசாலியஸின் ஆய்வே. வெசாலியஸின் ஒப்பீட்டு உடற்கூறியல் ஆய்வுகள் பரிணாமக் கொள்கையை வடிப்பதில் டார்வினுக்குப் பெரிதும் உதவின. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ‘உடற்கூறியலின் தந்தை’ என்றழைக்கப்படும் வெசாலியஸின் ஆராய்ச்சிகளுக்கு நவீன மருத்துவ உலகம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

நவீன ஜப்பானை உருவாக்கிய மெய்ஜி புரட்சி



ஜப்பான், உலகமே வியந்து பார்க்கும் ஒரு நாடு. ‘மேட் இன் ஜப்பான்என்பதே தரமான பொருளுக்கான சான்று என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்தியா, சீனா போன்ற நாடுகள் காலனிய ஆட்சியாலும் வறுமையாலும் சீர்கெட்டு பின்தங்கியிருந்தபோது, நூறு வருடங்களுக்கு முன்பே ஜப்பான் மட்டும் பொருளாதார வலிமைமிக்க, தொழில்வளர்ச்சி அடைந்த,  முன்னேற்றமடைந்த நாடாக மாறியது எப்போதும் வியப்புக்குரிய விஷயமாகவே பேசப்படுகிறது. பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜப்பானில் ஏற்பட்ட அரசியல் மாற்றமே இந்த சாதனைகளுக்கெல்லாம் காரணமாக அமைந்தது. அந்த மாற்றத்துக்கு வரலாறு இட்டப் பெயர் ‘மெய்ஜி புரட்சிஅல்லது ‘மெய்ஜி மீட்சிஎன்பதாகும். இந்த மெய்ஜி மீட்சி ஜப்பானின் உள்நாட்டு அரசியலில் மட்டுமல்ல, உலக நாடுகளுடனான ஜப்பானின் உறவுகளிலும் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியது.

நான்கு பெரிய தீவுகளையும் ஆயிரக்கணக்கான சிறிய தீவுகளையும் கொண்ட ஜப்பான் நாடு நீண்ட வரலாறைக் கொண்டுள்ளது. பண்டை காலம் முதலலே ஜப்பானின் பல்வேறு பகுதிகள் பல்வேறு வம்சங்களால் ஆளப்பட்டு வந்துள்ளது. 17ஆம் நூற்றாண்டில் டொகுகவா ஷோகன்கள் ஜப்பானில் செல்வாக்கு பெற்று அந்நாட்டின் பெரும்பகுதியை ஆளத்தொடங்கினர். (ஷோகன்என்றால் படைத்தலைவர் என்று பொருள்.). 1860களில் யோஷின்பு என்ற ஷோகன் ஜப்பானை ஆண்டுக் கொண்டிருந்தார். தொழில் வளர்ச்சியோ நவீனமயமோ இல்லாத அன்றைய ஜப்பான் நிலப்பிரபுத்துவ அமைப்பில் கட்டுண்டு இருந்தது. பெரும்பாலான நிலங்கள் ஒரு சில நிலப்பிரபுக்களுக்கு சொந்தமாக இருந்தன. சமுராய்என்றழைக்கப்பட்ட வகுப்பினர் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்று சிறப்பு சலுகைகளோடு வாழ்ந்தனர். சாதாரண மக்களின் வாழ்க்கை மிக மோசமான நிலையில் இருந்தது.


1850களில் வியாபாரம் செய்வதற்காக ஜப்பானில் நுழைந்தனர் ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும். இந்தியாவைப்போல ஜப்பானை தங்களது காலனி நாடாக மாற்ற அவர்களால் முடியாவிட்டாலும் அநீதியான வியாபார ஒப்பந்தங்களால் ஜப்பானுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினர். ஐரோப்பிய, அமெரிக்கர்களை ஜப்பானிய ஷோகன் எதிர்த்தாலும் மேற்கத்தியர்களிடம் இருந்த நவீன ஆயுதங்களும் தொழில்நுட்பமும் ஜப்பானுக்கு அச்சுறுத்தலாகவே இருந்தது. தம்து படைகளை பலப்படுத்த ஷோகனும் மற்ற பிரபுக்களும் நவீன ஆயுதங்களையும் தொழில்நுட்பத்தையும் இறக்குமதி செய்ய ஆரம்பித்தனர். எனினும் மேற்கத்திய நாடுகளை எதிர்ப்பதில் ஷோகனின் இயலாமை மக்களிடையே பெரும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் தோற்றுவித்தது.

வளமான நாடு, வலிமையான ராணுவம்என்னும் கோஷத்துடம் இளம் சமுராய்கள் தலைமையில் ஷோகன் எதிர்ப்பாளர்கள் ஆட்சி மாற்றத்துக்கு போராடினர். முடிவில், எதிர்ப்பாளர்களின் கோரிக்கைக்குப் பணிந்த ஷோகன் யோஷின்பு ஜனவரி 3, 1868ல் ஆட்சியை மெய்ஜி மன்னர் மட்சுஹிடோவிடம் ஒப்படைத்தார். அன்று தொடங்கியது தான் மெய்ஜி மீட்சி எனப்படும் சீர்த்திருத்த காலம். நன்கு கற்றறிந்த, மக்கள் செல்வாக்கு பெற்ற குழுவினரின் ஆலோசனைப்படி இடோவை (இன்றைய டோக்கியோ) தலைநகராகக் கொண்டு மெய்ஜி மன்னர் ஆட்சிபுரிய ஆரம்பித்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. பல நூறு பகுதிகளாக நிலப்பிரபுக்களால் ஆளப்பட்டுவந்த பகுதிகள், பல ஒன்று சேர்க்கப்பட்டு 75 பகுதிகளாக குறைக்கப்பட்டன். ஜப்பான் முழுமையாக ஒரே மத்திய அரசின்கீழ் வந்தது. அனைவரும் சமம் என்று அறிவிக்கப்பட்டது. மக்களுக்கிடையே இருந்த வகுப்பு பிரிவினைகள் சட்டப்படி ஒழிக்கப்பட்டன. சமுராய்கள் மற்றும் இதர மேற்குடி மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. ஷோகனின் படைகள் கலைக்கப்பட்டது. தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டு மேற்கத்திய பாணியில் நவீனப்படுத்தப்பட்டது. 21 வயது நிரம்பிய ஆண்களுக்கு மூன்று வருட ராணுவ சேவை கட்டாயம் ஆக்கப்பட்டது. குறைந்தபட்சம் ஆறுவருட பள்ளிக்கல்வி அனைவருக்கும் உறுதி செய்யப்பட்டது. நிலச்சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. வரிவிதிப்பு முறைகள், சட்ட-நீதிமன்ற அமைப்புகள், கல்விமுறை மேற்கத்திய முறையில் மாற்றப்பட்டன.


புத்த மதத்தின் செல்வாக்கு குறைக்கப்ட்டு ஜப்பானியரின் ஆதிமதமான ‘ஷிண்டோமதம் அரசினால் முன்னிலைப்படுத்தப்பட்டது. மதம், ஆட்சி இரண்டுக்கும் மன்னரே தலைவராக இருந்தார். அவ்வப்போது தலைத்தூக்கிய ஷோகன் ஆதரவாளர்கள் முழுமையாக அடக்கப்பட்டனர். அமெரிக்கா போன்ற நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு உருவாக்கப்பட்டது. தனியாருடன் இணைந்து அரசு தொழிதுறையை வளர்க்க பெரும் முயற்சியில் இறங்கியது. நவீன மேற்கத்திய தொழிநுட்பம் ஜப்பானுக்கு கொண்டுவரப்பட்டது. புதிய ரயில் பாதைகள், தபால் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள், கப்பல் கட்டும் துறைகள், சுரங்கங்கள், ஆயுதத் தொழிற்சாலைகள், சர்க்கரை, சிமெண்ட், வேதிப்பொருள்கள், கண்ணாடி என எண்ணற்ற பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அடுத்த இருபது ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. பல பெரிய தொழில் குழுமங்களும் உருவாகின.

அரசியல் சட்டப்படி 1889ஆம் ஆண்டில் டயட்எனப்படும் பாரளுமன்றம் ஏற்படுத்தப்பட்டு செயல்படத் தொடங்கியது. இதர ஆசிய நாடுகள் காலனி ஆட்சியாளர்களால் சுரண்டப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் நான்கு கால் பாய்ச்சலில் வேகமாக முன்னேறியது ஜப்பான். பொருளாதார வலிமையிலும் வாழ்க்கை தரத்திலும் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்ந்தது ஜப்பான். அதன் ராணுவ வலிமையும் பலமடங்கு பெருகியது. தந்து பக்கத்து நாடான கொரியாவின் மீது உரிமை கொண்டாடுவதில் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் ஏற்பட்ட மோதலால் 1894 போர் வெடித்தது. ஜப்பான் போரில் வென்று மேற்கத்திய நாடுகளை திரும்பிப்பார்க்க வைத்தது. அதன் பிறகு ரஷியாவுடன் ஏற்பட்ட போட்டியின் காரணமாக 1905ல் நடைபெற்ற போரிலும் ரஷியாவை வென்று தான் ஒரு வல்லரசாக உருவாகி வருவதை உலகுக்கு காட்டியது. இந்த வெற்றிகள் ஜப்பானிய மக்களிடையே தேசிய உணர்வை அதிகரித்தன. பெருமிதம் கொள்ள வைத்தன.


1912ல் மெய்ஜி மன்னர் இறந்துவிட அவரது மகனான யோஷிஹிடோ மன்னரானார். இவரது ஆட்சிகாலத்தில் மெய்ஜி புரட்சியின் பலன்களை மக்கள் முழுமையாக அனுபவிக்கத் தொடங்கினர். பொருளாதாரம் வளர்ந்ததால் மக்கள் செல்வ செழிப்புடன் இருந்தனர். வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. மேற்கத்திய கல்விமுறையும், தொழிநுட்பமும் மக்களின் சிந்தனை போக்கில் பெரும் மாற்றத்தை உண்டாக்கின. இதனால் மக்கள் அதிகப்ப்டையான அரசியல் சுதந்திரத்தை கோரினர். அரசியல் கட்சிகள் உருவாகி வலுப்பெற்றன. பழமையான கருத்துகள் மதிப்பிழந்தன. அனைவருக்கும் ஓட்டுரிமை வேண்டும் என கோரப்பட்டது. 1925ல் வயது வந்த அனைத்து ஆண்களுக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. 1912-1930 காலகட்டத்தில் அமெரிக்க மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கு இணையாக இருந்தது ஜப்பானியரின் வாழ்க்கை.


1930களில் ஜப்பானில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட உலகலாவிய பொருளாதார பெருமந்தம் ஜப்பானை கடுமையாக பாதித்தது. அதனால் மூலப்பொருள்களுக்கு ஏற்பட்ட தேவையை நிறைவுசெய்ய மேற்கத்திய நாடுகளைப் போலவே காலணிகளை உருவாக்கும் முயற்சிகளில் ஜப்பான் இறங்கியது. இந்தச் சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ராணுவம் ஜப்பானிய ஆட்சியின் தலைமையை கைப்பற்றிக்கொண்டது. பின்னர் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோல்வியடைந்தது. போரினால் சின்னாபின்னப்படுத்தப்பட்ட ஜப்பானின் பொருளாதாரம் மீண்டு வரும் என்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் அடுத்த முப்பது ஆண்டுகளிலேயே ஜப்பான் உலகின் முன்னேற்றமடைந்த நாடாக மீண்டு உருப்பெற்றது. இந்த அதிசயத்துக்கு காரணம் மெய்ஜி புரட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல், நிருவாகம் மற்றும் கல்வி சீர்த்திருத்தங்களும், அடிப்படை கட்டமைப்புகளும் தான் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

.     

Saturday, July 17, 2010

எளிய தமிழில் பொதுவுடமை தத்துவத்தின் அடிப்படை கோட்பாடுகள்

உலகில் கம்யூனிசம் ஒழிந்துவிட்டது. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் இன்னும் பிற பொதுவுடமை சிந்தனையாளர்களின் தத்துவங்கள் எல்லாம் காலாவதியாகிவிட்டது. உலக மக்களின் துயரங்களுக்கு ஒரே மாமருந்து முதலாளித்துவம் தான். பொதுவுடமை கொள்கையை கடைபிடிக்கும் நாடுகளில் பொதுவுடமை வலுவிழந்து வருகிறது. ஆகவே கம்யூனிச தத்துவம் அழிந்துவிட்டது. இப்படியாக ’அறிவு ஜீவிகள்’ என்றும் ‘மெத்தப் படித்தவர்கள்’ என்றும் காட்டிக்கொள்ளும் பலரும் ‘பிரசாரத்தில்’ ஈடுபட்டு வருவதைப் பார்க்கிறோம்.

பொதுவுடமைத் தத்துவத்தை ஆதரிப்பவர்களோ, ”உலகில் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் நிலவும் காலம்வரையில் பொதுவுடமை தத்துவத்தின் தேவை இருந்துகொண்டே தான் இருக்கும். அது மனிதனின் வாழ்நிலையோடு, சமூக இயக்கத்தோடு இணைந்தது, அறிவியல் பூர்வமானது. பொதுவுடமையை பின்பற்றும் நாடுகளின் பின்னடைவுக்கு பல அக, புறச் சூழ்நிலைகள் காரணமாக உள்ளன. வரலாற்றுப் போக்கில் இவை இயல்பானதே. ‘சோவியத்’ மாதிரி குலைந்துவிட்டதால் பொதுவுடமை தத்துவம் அழிந்துவிடாது. தனது தவறுகளை, குறைகளை ஆய்ந்து புதிய ஆற்றலுடன் மீண்டும் மக்களை வழிநடத்தும். உலகெங்கும் நடைபெற்றுவரும் போராட்டங்கள், கொந்தளிப்புகள், அடக்குமுறைகள் ஆகியவை இதைத்தான் உணர்த்துகின்றன” என்று மார்க்சிய அழிவின்மை தத்துவத்தைக் கூறுகின்றனர்.

இந்த இரண்டு பிரிவுகளைச் சேராத மக்களுக்கோ இது ஒரு ‘தேவையில்லாத’ பேச்சு. ’நாம் பேசி என்ன ஆகப் போகுது?’ என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது. இதற்கு காரணம் சாதாரண மக்களிடம் பொதுவுடமை தத்துவம் பற்றிய அறிவு அல்லது தகவல் போதுமான அளவுக்குப் போய்ச் சேராததே ஆகும். ‘விஞ்ஞான சோஷலிசம்’ ‘வர்க்கப் போராட்டம்’ ‘அந்நியமாதல்’ ‘பூர்ஷ்வா கலாசாரம்’ ‘அகவய யதார்த்தம்- புறவய உண்மைகள்’ ‘இயக்கவியல் பொருள் முதல்வாதம்’ போன்ற வார்த்தைகள் அறிவுஜீவிகளுக்கானது, நமக்கெல்லாம் புரியாது என்று மக்கள் தாமாகவே ஒதுங்கிக் கொள்கின்றனர்.

மார்க்சிய-பொதுவுடமை தத்துவங்கள், அரசியல், அறிவியல், இலக்கியம் என பல துறைகளிலும் உள்ள சிந்தனைகள் சாதாரண மக்களை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் ’சோவியத் யூனியன்’ அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஏராளமான நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. ஆர்வமுள்ளவர்களின் தேவையை இந்த நூல்கள் பூர்த்தி செய்தன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இவற்றைப் படிப்பதற்கே கொஞ்சம் பயிற்சி தேவைப்படுகிறது. தமிழும் கடினமாக இருந்தது. மேலும், ஓரளவு அடிப்படை விஷயங்களை தெரிந்தவர்களுக்கே இந்தத் தத்துவங்கள் புரியும்படி இருந்தன.

பொதுமக்களுக்கு, மாணவர்களுக்கு, எளிய மக்களுக்கு புரியும்படி தமிழில் எழுதப்பட்ட நூல்கள் அவ்வளவாக வெளிவரவில்லை. தமிழில் வெளியான அடிப்படை நூல்களில் பெருமளவு மொழிபெயர்ப்பே. அவற்றில் இருந்த மொழியியல் சிக்கல்களும் அந்நியத்தன்மையும் எளிமைக்குத் தடையாகவே இருக்கின்றன. எளிய மக்களுக்கு புரியும் வகையில் தமிழிலேயே எழுதப்பட்ட நூல்கள் மிகச் சிலவே. பத்தாண்டுகளுக்கு முன்பு நான் படித்த ‘குந்தவிக்கு மான்விழிக்கு கடிதங்கள்’ அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

செ.கணேசலிங்கன் அவர்கள் எழுதி குமரன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தில் பொதுவுடமை கொள்கையின் அடிப்படைகள் மிக மிக எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன. தனது மகளுக்கு எழுதும் கடிதங்களில் ‘உயிரினத்தின் தோற்றம்’ ‘சமுதாயத்தின் தோற்றம்’ வர்க்கம் என்றால் என்ன?’ ‘பணம் எப்படி வந்தது’ ‘அடிமைகளின் தோற்றம்’ ‘இயந்திர உற்பத்தியின் வளர்ச்சி’ ‘முதலாளித்துவம் என்றால் என்ன?’ ‘கம்யூனிச சமுதாயம் என்றால் என்ன?’ என மொத்தம் இருபத்தி ஐந்து தலைப்புகளைப் பற்றி அழகு தமிழில் எழுதியுள்ளார். பொதுவுடமை தத்துவத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வமுள்ளவர்கள் ஆரம்ப நூலாக இதைப் படிக்கலாம்.

பாரம்பரியமான கம்யூனிச கொள்கையின் அடிப்படையிலேயே இந்நூலில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. மாறிவரும் உலக அரசியல், பொருளியல், சமூகவியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ’பாட்டாளிகள்’ ‘உற்பத்தி உறவுகள்’ போன்ற பல அம்சங்கள் மறுவரையறை செய்ய வேண்டியிருக்கின்றன என்றாலும் ஆரம்ப நூலாக இதை பயிலலாம். மக்களுக்கான தத்துவம் என்றால் அது மக்களை கவர்ந்தால் தான் வெற்றிபெற முடியும். நாங்கள் மட்டுமே உண்மையான் கம்யூனிஸ்டுகள் என்று தமக்குத்தாமே ‘சர்டிஃபிகேட்’ கொடுத்துக் கொள்ளும் பொதுவுடமைவாதிகள் இவ்விஷயத்தில் கவனம் செலுத்துவார்களேயானால் அவர்களுக்கு நல்லது. இல்லையெனில் மக்கள் அவர்களை மறந்துவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை.



‘குந்தவிக்கு மான்விழிக்கு கடிதங்கள்’ புத்தகத்திலிருந்து இரண்டு அத்தியாயங்களை இங்கு காணலாம். (நன்றி: குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை & திரு செ. கணேசலிங்கன்)

உற்பத்திக் கருவிகள் என்றால் என்ன?




அன்பான மகளுக்கு,

உற்பத்திக் கருவிகள் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறாய். நல்லது. மகளே உனக்குள்ள சந்தேகத்தைக் கேட்டுத் தெளிவு பெற விரும்புகிறாய். நன்று. மனிதர் உணவு தேடுவதற்கும் பாதுகாப்பிற்குமாக எடுத்துக்கொண்ட கருவிகளையே உற்பத்திக் கருவிகள் என்போம்.

தடி, கல், கூரான கல், கவண், அம்பு, வில், செம்பு, உலோகத்தால் செய்யப்பட்ட கருவிகள், இரும்பால் செய்யப்பட்ட கருவிகள் என அக் கருவிகள் வளர்ச்சியடைந்து வந்துள்ளன. கருவிகள் வளர மக்கள் வாழ்க்கையும் வளர்ந்து வந்துள்ளது. சிந்தனையும் வளர்ந்து வந்துள்ளது. இதைச் சுருங்கக் கூறின் மனிதன் தேடிக் கொண்ட உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியே அவனது வாழ்நிலை வளர்ச்சியாகும். அவனது வாழ்நிலையே அவனது சிந்தனையின் வளர்ச்சியையும் ஆக்குகிறது.

மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு பற்றி இங்குச் சுருக்கமாகக் கூறுகிறேன். தன் தேவைக்கேற்ப உற்பத்திக் கருவிகளை ஆக்கிக் கொள்ள மனிதனால் மட்டுமே முடிந்தது. மிருகத்தால் அதைச் செய்ய முடியவில்லை. மிருகம் இயற்கையில் கிடைக்கும் பொருளை அப்படியே பயன்படுத்தும். மனிதன் அதனைத் தனது தேவைக்கேற்ப மாற்றிப் பயன்படுத்துவான்.

இக்கருத்தையே உன் அப்பாவும் கொண்டிருக்கிறார். இவ்வாறு கருதுவது ஒரு தனிச் சித்தாந்தம் அல்லது மெய்ஞான முறையாகும். உலகத்திற்கும் உலக மக்களது வாழ்க்கைக்கும் கொடுக்கப்படும் விளக்கம் பற்றிய துறையாகும்.

சாக்கிரட்டீஸ், அரிஸ்டோட்டில் பற்றி நீ படித்திருக்கலாம். பெற்றன் ரசல், சாத்ரே பற்றிப் படிக்காவிட்டாலும் மார்க்கஸ் பற்றி அறிந்திருப்பாய்தானே. மார்க்ஸ் மற்றவர்களை விட வேறுபட்டவர். அவர் உலகத்திற்கு விளக்கம் கூரியது மட்டுமல்ல அதை எவ்வாறு மாற்றி அமைக்க முடியும் என்பதையும் விளக்கிக் காட்டியவர். இவை பற்றி, நீ பின்னர் விரிவாகப் படித்துக் கொள்வாய்.

மேலே கூறிய சித்தாந்த முறையையே பொருளியம் அல்லது பொருள் முதல் வாதம் என்று கூறுவர். அதாவது பொருளின் வளர்ச்சி அல்லது உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியே மனிதச் சிந்தனையை அல்லது வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்பதாகும். அப்போது இதற்கு எதிரான கோட்பாடு என்னப்பா என்று கேட்கிறாயா? அதையே கூற வருகிறேன்.

மனித சிந்தனையே முந்தியது, அதன் வளர்ச்சியே உற்பத்திக் கருவிகளையும் வளரச் செய்தது. உபரி உற்பத்திக்கு வழி செய்தது. சமுதாயத்தையும் வளர்த்தது. இவ்வாறு விவாதிப்பதையே கருத்தியம் அல்லது கருத்து முதல் வாதம் என்பர். நீ உன் பள்ளியிலும் பிற விடங்களிலும் காணும் பெரும்பாலானோர் இக்கோட்பாடு கொண்டவரேயாவர்.

சரியாகக் கணக்கு செய்யாவிடின் அம்மா அல்லது உன் ஆசிரியர் ‘மூளையிலே களிமண்ணா?’ என்று சினப்பதைக் கேட்டிருப்பாய். தலையிலே மூளை என ஒரு பொருள் இருக்கிறது. களிமண் போலத் தொட்டுப் பார்க்கத் தக்க பொருள் மூளை. நீ ஏற்றுக் கொள்கிறாயா? அப்போது நீ பொருளியல்வாதி அல்லது பொருள்முதல்வாதி. கருத்தியல்வாதி அல்லது கருத்துமுதல்வாதிகள் இதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

பொருள் முதல்வாதம் கருத்துமுதல்வாதம்; இவ்விரு வகை சித்தாந்தங்களும் நீண்ட காலமாகவே நிலவிவந்தவையாகும். மத வழிபாட்டை ஆதரிப்பவர்களெல்லோரும் கருத்து முதல்வாதிகளே. மத வழிபாட்டைஎதிர்க்கும் தமிழ்நாட்டிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தவர் கூடக் கருத்து முதல்வாதிகளே. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என அவர்கள் கூறுவர்.

உலகம் முதலில் உயிரற்ற பொருட்களையே கொண்டிருந்தது. அவற்றின் வளர்ச்சியிலேயே உயிரினங்களும் மனிதனும் தோன்றின. மனிதன் தன் மூளையின் பிரதிபலிப்பின் மூலமே பிற பொருட்களைக் காண்கிறான். திட, திரவ, வாயு போன்ற பிற புறபொருட்களைக் ஐம்புலன்களினால், சிந்தனையால் உணர்கிறான். அதே போல தன் உழைப்பு, சமூக உறவுகளால் ஏற்படும் பாதிப்புகளையும் உணர முடிகிறது. இவையும் பொருள் சார்ந்தவையே. இத்தகைய சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்பவர்களே பொருள்முதல்வாதிகள்.

முன்னர் நான் எழுதிய முறையிலே கார்ல் மார்க்ஸ் என்பவர் மனித சமுதாய வளர்ச்சியைக் கண்டார். அவர் இவ்வளர்ச்சிப் போக்கிற்குப் புதிதோர் பெயரிட்டார். அதுவே இயக்கவியல் பொருளியம் அல்லது பொருள் முதல் வாதம் என்பதாகும். மேற்கூறியவற்றின் தொகுப்பே அது. மூன்று அம்சங்களை இச் சித்தாந்தம் கூறுகிறது. (1) உற்பத்திக் கருவிகளை வளர்ப்பதன் மூலம் மனிதன் இயற்கையை வெல்கிறான். (2) அதனால் சமுதாயம் வளர்ச்சி அடைகிறது. (3) மனிதனுது சிந்தனை வளர்ச்சியடைகிறது.

அன்புள்ள,

அப்பா.




வர்க்கச் சமுதாயம் என்றால் என்ன?

அன்புமகளே,

மனிதனுடைய தனிச் சிறப்புகள் பற்றிப் பின்னரும் எழுதினேன். உற்பத்திக் கருவிகளை அவன் மேலும் மேலும் சிறப்பாக்குகிறான்; கூர்மை அடையச் செய்கிறான். அதோடு அவனது சிந்தனையும் வளர்ச்சி அடைகிறது. இயற்கையை நுணுகி ஆராய்கிறான். பலவற்றைக் கற்றுக் கொள்கிறான். இயற்கையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை மனிதனுக்கு ஏற்படுகிறது.

இவை ஒரு நீண்ட கால வளர்ச்சியின் தொடராகும். மிருகங்கள் இயற்கையோடு ஒட்டியே வாழ்ந்தன; இயற்கையில் கிடைப்பவற்றையே உண்டு வாழ்ந்து வந்தன். மனிதன் இதற்கு விலக்காகிறான். எப்படித் தெரியுமா? அவன் உற்பத்திக் கருவிகளை இயற்கை மீது செலுத்துகிறான். கற்கோடாரியால் மரத்தை வெட்டுகிறான். செம்பு உலோகத்தால் செய்த வாளால் இறைச்சியை வெட்டுகிறான். கற்களை உராய்த்துத் தீ மூட்டுகிறான்; இரும்புக் கலப்பையால் நிலத்தைக் கீறி உழுகிறான். தானியத்தை விதைக்கிறான்.


மனிதன், உற்பத்திக் கருவிகள், இயற்கை; இம்மூன்றையும் தனித்தனியே கவனிக்க. இன்று நாம் காணும் வளர்ச்சி அனைத்துமே மனிதன் உற்பத்திக் கருவிகளை வளர்த்து இயற்கை மீது செலுத்தியதால் ஏற்பட்ட வளர்ச்சி என்பதை மறந்துவிடாதே. எப்பொருளும் வானத்திலிருந்து வந்துவிடவில்லை. கட்டிடங்கள், கார்கள், விமானம், ரேடியோ, டிவி, கம்ப்யூட்டர், உடை, உணவு, யந்திரங்கள்.... எல்லாமே மனிதர் உழைப்புக் கருவிகளை இயக்கித் தம் உழைப்புச் சக்திகளைச் செலுத்தப் பிறந்தவைகள் தான்.


மனிதனிடம் உள்ளது மகத்தான உழைப்புச் சக்தியாகும். நிலம், நீர், மூலப்பொருட்களை உற்பத்திச் சாதனங்கள் அல்லது இலக்குப் பொருட்கள் என்பர். உழைப்புக் கருவிகள் என்பன பற்றி மேலே சொல்லி உள்ளேனே. ஆகவே மேலே கூறியதை இன்னும் சிறப்பாகப் பின்வருமாறு கூறலாம்; மனிதர் இயற்கையின் மீது தம் உழைப்புச் சக்தியைச் செலுத்தியே தமக்குத் தேவைப்பட்ட உற்பத்திக் கருவிகளையும் ஆக்கிக் கொள்கிறார்கள். பின்னர் தம் தேவைக்கு ஏற்ப அக்கருவிகளை மென்மேலும் மாற்றியமைத்துக் கொள்கின்றனர்.


உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடைந்தன; பழங்குடியினர் நிலை பெறத் தொடங்கினர். தம் தேவைக்கு மேலாக உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர். இதையே உபரி உற்பத்தி என முன்னரும் எழுதினேன். அப்போதுதான் மனிதனுடைய வேகமான வளர்ச்சி ஆரம்பமாகத் தொடங்கியது, அதே வேளையில் மனித சமுதாய உறவுகளிலும் பெரிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.


போரில் வெற்றி பெற்றவர்கள் தோற்ற பழங்குடியினரைக் கொன்று ஒழிப்பதை நிறுத்தினர். அவர்களைத் தமக்கு அடிமை ஆக்கிக் கொண்டனர். தாம் செய்த வேலைகளை அவர்களைக் கொண்டு செய்வித்தனர். மேலும் சிறப்பாகச் சொல்லின், தாம் உழைக்காது தம்மிடமுள்ள உற்பத்திக் கருவிகளை அடிமைகளிடம் கொடுத்து உழைக்கச் செய்தனர்.


அவ்வடிமைகளுக்கு உணவு, உறைவிடம் மட்டும் அளித்தனர். ஏன் தெரியுமா? அடிமைகள் தாம் இழ்ந்த உழைப்புச் சக்தியை மீண்டும் பெற்றுப் புதிய தெம்போடு ஆண்டைகளுக்கு நாளைக்கும் உழைக்க வேண்டும் என்பதற்காகத் தான். அடிமைகள் தாம் உண்ட உணவிற்கும் மேலாக உபரியாக – உற்பத்தி செய்தார்கள். அவர்கள் உழைப்பால் கிடைத்த மேலதிக உற்பத்தியை, - உபரி உழைப்பை – உற்பத்திக் கருவிகளை வைத்திருந்த ஆண்டைகள் அபகரித்தனர். அடிமைகளும் நிலபுலங்கள் போல ஆண்டைகளின் உடைமைப் பொருளாயினர்; ஆடுமாடுகளைப் போல விற்பனைப் பண்டமாயினர்.

இங்குச் சுதந்திரமாக வாழ்ந்து வந்த மனிதர்களிடையே நிலவும் உறவுகளைப் பார்த்தாயா? ஒரு பிரிவினர் – ஆண்டைகள் – உற்பத்திக் கருவிகளையும், உற்பத்திச் சாதனங்களையும் கொண்டிருக்கின்றனர். மற்றொரு பிரிவினர் அடிமைகள்.

ஒரு உடைமையுமின்றி ஆண்டைகளுக்குத் தமது உழைப்புச் சக்தியை மட்டும் நாள் தோறும் செலவு செய்து வாழ்ந்து வருகின்றனர். உற்பத்தி சாதனங்களை வைத்திருந்த இந்த ஆண்டைகள் உடமையாளர்களாக இருக்கவும் உற்பத்திச் சக்தியை வைத்திருந்த அடிமைகள் உரிமையும் உடைமையும் அற்றவர்களாயிருந்ததையும் பார்க்கிறாயல்லவா? இவ்விரு தரப்பட்டவர்களிடம் நிலவும் உறவு போன்றவற்றைத்தான் உற்பத்தி உறவு என்கிறோம்.

மனித வரலாற்றில் இங்கு தான் வர்க்கச் சமுதாயம் தோன்றிவிட்டதாக மார்க்ஸ் கூறினார். ஒரு பகுதியினர் பறித்தெடுக்கும் அநாகரிக முறை; இது நீதியாக்கப் பட்டது. உலகின் பல பகுதிகளில் சென்ற 4000 ஆண்டுகளாக இத்தகைய முறை தொடர்ந்து நீடித்து வருகிறது. காலப் போக்கில் உற்பத்தி உறவுகளிடை பண்ணை அடிமை, கூலி அடிமை எனச் சிறு சிறு மாற்றம் ஏற்பட்டு வந்துள்ளது. அவ்வளவேதான். இத்தகைய அமைப்பை அழிப்பது அப்பாவின் கோட்பாடாகும். இது தவறான கொள்கையா? அதையே சோசலிசம் என்று கூறுவோம். இது மனித சமுதாய வளர்ச்சிக்காகச் செய்யும் பெரிய சேவையாக உனக்குத் தோன்றவில்லையா?

அன்புள்ள,
அப்பா.


‘குந்தவிக்கு மான்விழிக்கு கடிதங்கள்புத்தகத்திலிருந்து இரண்டு அத்தியாயங்கள். 

நன்றி: குமரன் பப்ளிஷர்ஸ்,சென்னை

Wednesday, May 5, 2010

கடவுள் உண்டா? இல்லையா? - புத்தரின் பதில்





கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வரும் விவாதம் இது. இந்திய தத்துவ விசாரணையின் முக்கிய கருப்பொருளாகவும் இது ஆதிகாலம் தொட்டு இருந்து வருகிறது. மேற்கத்திய நாத்திக மரபைக் காட்டிலும் இந்திய நாத்திக, கடவுள் மறுப்பு மரபு பழமையானது, ஆழமானது. பிற்காலத்தில் ஏற்பட்ட பார்ப்பனிய எழுச்சி, கடவுள் மறுப்பு வாதங்களையும் தத்துவ விசாரணைகளையும் பெருமளவு அழித்தும் மறைத்தும் அல்லது மாற்றியும் விட்டது.


பிரபஞ்சத்தைப் படைத்தவர் கடவுளே. படைத்ததோடு அவற்றின் இருப்புக்கும் இயக்கத்துக்கும் காரணமாகவும் காரியமாகவும் இருப்பவர் அவரே.....என்றெல்லாம் கடவுளைப் பற்றிய வரையறைகளை அவரவர் விருப்பத்துக்கு அள்ளித் தெளித்தனர். இன்றுவரை இந்த நிலை தொடரத்தான் செய்கிறது. 25 நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்திய சமுதாயத்தை கட்டுப்படுத்தக்கூடிய செல்வாக்கை பார்ப்பனீயம் பெற்றிருந்தாலும் அதன் தத்துவத்தையும் செல்வாக்கையும் எதிர்க்கக்கூடிய தத்துவங்களும் மக்களின் செல்வாக்கைப் பெற்றிருந்தன. அந்த வகையில் வேத மரபை, பார்ப்பனீயத்தை எதிர்த்த தத்துவத்தில் முதன்மையாக இடம்பெறத் தக்கது புத்தரின் பகுத்தறிவு கொள்கைகள்.


’கடவுளைப் பற்றிய கேள்விக்கு புத்தர் பதில் சொல்லவில்லை. ஆன்மா இல்லை என்றும் தெளிவாகச் சொல்லவில்லை’. எனவே புத்தர் கடவுளை எதிர்க்கவில்லை என்று அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் இல்லையென்று புத்தர் சொல்லியிருந்தால், புத்த மதத்தை சேர்ந்தவர்களே அவரை ஏன் கடவுளாக வணங்குகிறார்கள் என்றும் கேட்கிறார்கள். அப்படியானால் புத்தர் கடவுளை மறுக்கவில்லையா?


விடை தெரிந்துகொள்ள தத்துவ நூல்களை புரட்டியதில் முதலில் கண்ணில் பட்டது அருணன் அவர்கள் எழுதி ’வசந்தம் வெளியீட்டகம்’ வெளியிட்டுள்ள ’தமிழரின் தத்துவ மரபு’ என்னும் நூல். இரண்டு பாகங்களைக் கொண்ட அந்த நூலில் ஆதி தத்துவ மரபில் தொடங்கி, வேத மரபு, வேதமறுப்பு மரபு, சாங்கியம், ஆசீவகம், சமணம், பவுத்தம், சைவ சித்தாந்தம், நாட்டார் மரபு.............தற்கால ’நவீன குருமார்கள்’ வரை அனைத்துத் தத்துவங்களும் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. ஏராளமான இலக்கிய மேற்கோள்கள், விவாதங்கள், அலசல்களுடன் தமிழர் தத்துவத்தை அறிந்துகொள்ள சிறந்த அறிமுக நூலாக அமைந்துள்ளது. அந்தப் புத்தகத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த புத்தரின் வாதத்தை இனி பார்க்கலாம்.


பகுத்தறிவின் அடிப்படையிலான ஒரு சமயத்தை நிறுவ முயன்றவருக்கு கடவுள் தேவையில்லாமல் போனார். கடவுளைப் பற்றி புத்தர் பேசியிருக்கிறார். ராதாகிருஷ்ணன் புத்தர் கூறியதாக உள்ள அந்தப் பகுதியைத் தனது நூலில் (”இந்தியத் தத்துவம்” ) அடிக்குறிப்பாகத் தந்துள்ளார். அது -

”அனாதபிந்திகாவுடனான உரையாடலில் புத்தர் இவ்வாறு இது பற்றி விவாதித்ததாகக் கூறப்படுகிறது – உலகமானது ஈஸ்வரனால் படைக்கப்பட்டது என்றால் அங்கே மாற்றமோ அல்லது அழிவோ இருக்கக்கூடாது. அங்கே துன்பம் அல்லது பேரழிவு போன்ற விஷயங்களே நடக்கக் கூடாது. காரணம், நல்லது அல்லது கெட்டது மற்றும் சுத்தமானது அல்லது அசுத்தமானது எனச் சகலமும் அவனிடமிருந்தே வந்திருக்கவேண்டும். உணர்வுள்ள உயிர்களிடம் உள்ள துன்பம்-இன்பம், அன்பு-வெறுப்பு என்பதெல்லாம் ஈஸ்வரனின் வேலை என்றால் அவனே அந்தத் துன்பம்-இன்பம், அன்பு-வெறுப்பிற்கு ஆட்படுபவனாக இருக்க வேண்டும். அவனுக்கும் இதுவெல்லாம் உண்டு என்றால் அவன் எப்படி முழு நிறைப் பரம்பொருளாக இருக்க முடியும்?

ஈஸ்வரனே படைத்தவன் என்றால், அனைத்து உயிர்களும் மௌனமாக படைத்தவனின் சக்திக்கு அடங்கிப் போக வேண்டும் என்றால் அறங்களைப் பின்பற்றுவதால் என்ன பயன் விளைய முடியும்? நல்லது அல்லது கெட்டதைச் செய்வதும் இப்படியே ஆகும். காரணம், அனைத்துச் செயல்களும் அவனுடையவையே. இவை அனைத்தும் அவற்றை உண்டாக்கியவனிடமும் இருக்கும். கவலைக்கும் துன்பத்திற்கும் வேறு ஒன்றே காரணம் என்றால், ஈஸ்வரனால் படைக்கப்படாத ஒன்று இருந்ததாக ஆகிவிடும். அப்படியென்றால், இருக்கிற அனைத்திற்குமே அவன் காரணம் அல்லவென்று ஏன் கூறக்கூடாது?

மேலும், ஈஸ்வரனே படைத்தவன் என்றால் அவன் ஏதோ நோக்கத்தோடோ அல்லது நோக்கமில்லாமலோ படைத்திருக்க வேண்டும். நோக்கத்தோடு படைத்தான் என்றால் அவன் முழுநிறைப் பரம்பொருளாக இருக்க முடியாது. காரணம், நோக்கம் என்றாலே விருப்பத்தை முடித்த திருப்தி என்பது உள்ளுறையாக அமைந்து விடுகிறது. எந்த நோக்கமுமின்றி படைத்தான் என்றால் அவன் பைத்தியக்காரனைப் போல அல்லது பால் குடிக்கும் பாலகனைப் போல இருக்க வேண்டும்.

மேலும், ஈஸ்வரனே படைத்தவன் என்றால் மக்கள் ஏன் அவனுக்கு பயந்து பணிய வேண்டும்? தங்களின் தேவையைக் கருதி ஏன் அவனுக்கு காணிக்கை செலுத்தவேண்டும்? ஏன் மக்கள் பல கடவுள்களை வணங்க வேண்டும்? ஆக, பகுத்தறிவின் படி பார்த்தால் ஈஸ்வரன் என்கிற கருது கோள் பொய்யானது என்று நிரூபணமாகிறது. (ஈஸ்வரன் பற்றிக் கூறப்படுகிற) ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.” (”அஷ்வகோஷாவின் புத்த சரிதா”)


புத்தர் ஒரு கடவுள் மறுப்பாளராக இருந்திருக்கிறார் என்பது மட்டுமல்லாது, இந்த நாத்திகச் சிந்தனையைத் தனது சீடர்கள் பிறருக்கும் போதிக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்திருக்கிறார். பிற்காலத்திய நாத்திகவாதிகள் கடவுளை மறுக்கச் சொல்லிய காரணங்கள் பலவற்றையும் 2500 ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் சொல்லியிருக்கிறார் என்பது மிகுந்த வியப்புக்குரிய விஷயமாகும். இத்தோடு விடவில்லை அவர், கடவுளின் இருப்பை நிறுவ முன் வைக்கப்படும் வேறு சில வாதங்களையும் தகர்த்தெறிகிறார் -


”மனிதனால் அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு கடவுள் பெரியவர் என்று ஆத்திகவாதிகள் சொல்வார்களேயானால், அவரின் குணங்களும் நம்மால் அறிய முடியாதவை என்று ஆகும். அப்படியென்றால் அவரே படைத்தவர் என்பதை நம்மால் அறியவும் முடியாது, அவருக்கு அந்த குணத்தை நம்மால் கொடுக்கவும் முடியாது.” (போதி கார்யாவதாரா”)


இன்றளவுக்கும் முன்வைக்கப்படுகிற வாதம் இது. தர்க்கவியலுக்குள் கடவுளின் இருப்பு சிக்கித்தவிக்கும் போது அதை மீட்டுக் கொள்ள மனிதனை அறியாதவன் என்று மனிதனே கூறிவிடுவான். அப்படியே வைத்துக் கொண்டாலும் அறிய முடியாத கடவுளை, படைத்தவன் என்று அறிவது மட்டும் எப்படி என்று மடக்குகிறார் புத்தர்.


”அறியப்பட்ட அனைத்தோடும் தொடர்பின்றி தனித்திருப்பவர் அந்த முழு நிறைப் பரம் பொருள் என்றால், அவனது இருப்பை பகுத்தறிவால் நிலை நிறுத்த முடியாது. இதர பொருட்களுக்குத் தொடர்பில்லாத ஒன்று எப்படி இருக்க முடியும்? நாம் அறிந்த வரை முழுப் பிரபஞ்சமும் தொடர்புகளின் முறைமைதான்: எந்த ஒன்றோடும் தொடர்பில்லாத அல்லது தொடர்புபடுத்த முடியாத ஒன்றே இல்லை. எதையும் ஆதாரமாகக் கொள்ளாத ஒன்று, எதோடும் தொடர்பில்லாத ஒன்று எப்படி ஒன்றோடு ஒன்றாய் தொடர்புடையவற்றை, ஒன்றுக்கு ஒன்று ஆதாரமாய் இருக்கக் கூடியவற்றை படைத்திருக்க முடியும்?


மேலும் முழு நிறைப் பரம்பொருளானது ஒன்றா அல்லது பலவா? அது ஒன்றே என்றால் நமக்குத் தெரிந்து பலவகைக் காரணங்களிலிருந்து பிறக்கிற பலவகையானவற்றிற்கு எப்படி காரணமாக இருக்க முடியும்? எத்தனை வகைப் பொருட்கள் உண்டோ அத்தனை வகை முழு முதற் பரம் பொருள் உண்டு என்றால், ஒன்றுக்கு ஒன்று எப்படி தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. அந்தப் பரம்பொருள் அனைத்திலும் ஊடுருவியிருக்கிறது, அனைத்து வெளியிலும் நிறைந்திருக்கிறது என்றால் அது எதையும் படைத்திருக்க முடியாது. காரணம், படைக்க ஏதும் இருக்காது.


பரம்பொருள் நிர்குணவாதி என்றால் அவனிலிருந்து வந்த அனைத்திற்கும் குணங்கள் இருக்காது. ஆனால், உண்மையில் உலகில் உள்ள அனைத்தும் குணங்களால் நிரம்பியுள்ளன. எனவே, அந்தப் பரம் பொருள் அவற்றிற்கு காரணகர்த்தாவாக இருக்க முடியாது. குணங்களிலிருந்து தனித்து நிற்பவன் பரம் பொருள் என்றால் குணங்கள் உள்ள இத்தனைப் பொருட்களை எப்படி அவற்றில் தன்னை வெளிப்படுத்தி வருகிறான்?


பரம் பொருள் மாறாதது என்றால், அனைத்து பொருள்களும் கூட மாறாததாக இருக்க வேண்டும். காரணத்திலிருந்து பிறந்த காரியம் அதன் குணத்தில் மாறுபட முடியாது. ஆனால், உலகில் அனைத்துப் பொருள்களும் மாறுதலுக்கும் அழிவுக்கும் உட்படுகின்றன. அப்படியெனில் பரம் பொருள் மட்டும் எப்படி மாறாததாக இருக்க முடியும்? மேலும், அனைத்திற்குள்ளும் பரவி நிற்கிற பரம் பொருளே அனைத்திற்கும் காரணம் என்றால் முக்தியை நாம் ஏன் நாட வேண்டும்? நாம் தான் அந்தப் பரம் பொருளை நம்மிலேயே கொண்டுள்ளோமே! அந்தப் பரம் பொருள் உருவக்கியதே என்று ஒவ்வொரு துயரத்தையும் கவலையையும் பொறுமையாகத் தாங்கிக் கொள்ள வேண்டியதுதான்! (”அஸ்வகோஷாவின் புத்த சரிதா”)


கடவுள் என்கிற கருதுகோளை எந்த வகையிலும் மெய் என்று நிருபிக்க முடியாது. நிரூபிக்க முயன்றால் அது சுயமுரணுக்குள் போயே முடியும். காரணம், அந்தக் கருதுகோள் முற்றிலும் கற்பிதமானது என்பதால் பகுத்தறிவுக்கு அடங்காது. பகுத்தறிவுக்கு அடங்காத ஒன்றை இருப்பதாக அந்தப் பகுத்தறிவைக் கொண்டே நிரூபிக்க முயலும் சகல முயற்சிகளும் தோற்றுப் போகும் என்பதை அற்புதமாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார் புத்தர். இதன் மூலம் தன்னையொரு மகத்தான பகுத்தறிவாளராக வெளிப்படுத்தியுள்ளார்.

Tuesday, April 20, 2010

தாய்வழிச் சமுதாயம் எப்படி இருந்தது? - ஒரு கற்பனை பயணம் - 3

தாய்வழிச் சமுதாயம் எப்படி இருந்தது? பகுதி-1
தாய்வழிச் சமுதாயம் எப்படி இருந்தது? பகுதி-2

நிஷா - பாகம் 3
வசந்த காலம். கடந்த ஆறு மாதங்களாக மொட்டையாய் நின்ற மரக் கிளைகளில் சிறிய இலைகள் துளிர் விடுகின்றன. பனி உருகி, பசும்புல்லால் போர்த்தியது போன்று காட்சியளித்துக் கொண்டிருக்கிறது பூமி. திசை முழுதும் புத்துயிரும் புதிய களையும் பெற்று விளங்கின. காற்றிலே நல்ல வாசனை எங்கும் பரவிக் கொண்டிருந்தது. அநேக விதப் பட்சிகள் மரக்கிளைகளில் அமர்ந்து இனிய சப்தமிடுகின்றன. எங்கும் வண்டுகளின் ரீங்காரம்; பனி உருகி வரும் நீரோட்டக் கரைகளில் அமர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான நீர்ப்பறவைகள் புழுக்களைத் தின்பதில் கவனத்தைச் செலுத்துகின்றன.

ஆணும், பெண்ணுமான ஜோடி அன்னங்கள் காதலில் திளைத்திருக்கின்றன. ஆங்காங்கு மான் கூட்டங்கள் குதித்து விளையாடுகின்றன. ஆடுகள், மாடுகள் முதலிய மிருகங்கள் ஒரு புறம் கவலையற்று மேய்ந்து கொண்டிருக்கின்றன. அவைகளை விழுங்குவதற்காகச் சமயத்தை எதிர்பார்த்துப் புலிகளும், ஓநாய்களும் மற்றொரு புறத்திலே பதுங்கியிருக்கின்றன.


பனிக் காலத்தில் உறைந்திருந்தது, இப்போது உருகிப் பெருக்கெடுத்தோடும் நதிகளைப் போல மனிதர்களின் பரிவாரங்களும், தங்கள் ஆயுதங்கள், குழந்தைகள், தோல் முதலிய தட்டுமுட்டுச் சாமான்கள் இவைகளைத் தூக்கிக் கொண்டும் நெருப்பைக் காப்பாற்றிக் கொண்டும், திறந்த வெளிகளில் வசிக்க ஆரம்பித்தனர். இவர்களுடைய நாய்கள் கடித்துக் கொண்டு வரும் ஆடு, ஓநாய் இவைகளைக் கொண்டோ அல்லது இவர்களே ஆயுதங்களின் உதவியால் பிராணிகளைக் கொன்றோ தங்கள் ஆகாரத்தைக் தேடிக் கொள்கின்றனர். நதிகளிலும் மீன்கள் ஏராளம். வால்கா நதிப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் மீன் பிடிப்பதிலும் சமர்த்தர்கள்.


இப்பொழுதும் இரவில் குளிர் இருக்கிறது. ஆனால் பகல் உஷ்ணமாயிருக்கும். ஏனைய குடும்பங்களைப் போல் நிஷாவின் பரிவாரமும் வால்கா நதிப் பிரதேசத்தைத் தங்கள் வாசஸ்தலமாக்கிக் கொண்டார்கள். நிஷாவைப் போலவே மற்ற குடும்பங்களுக்கும் தாய் தான் தலைவி; தகப்பன் அல்ல. மேலும் அங்கு யாருக்கு யார் தகப்பன் என்று கூறுவது முடியாத காரியம். நிஷாவுக்கு எட்டு பெண் மக்களும் ஆறு ஆண் மக்களும் பிறந்தனர். அவர்களில் நான்கு பெண்களும் மூன்று ஆண்களும் இப்பொழுதும் - நிஷாவின் புத்திர புத்திரிகள் என்பதற்கு, அவர்களைப் பிரசவித்த நிஷாவே சாட்சியாயிருக்கிறாள்.


ஆனால் இந்த ஏழு பேருக்கும் தகப்பன் யார் என்று சொல்வது முடியாது. ஏனெனில் நிஷாவின் தாய் - நாம் முன்னே சந்தித்த கிழவி - குடும்பத்தின் தாயாய் - தலைவியாய் இருந்து பரிவாரத்தை நடத்தி வரும்பொழுது, மங்கைப் பருவமாயிருந்த நிஷாவுக்கு அவளுடைய சகோதரர்களும் புத்திரர்களும் நாயகர்களாயிருந்தனர். பல தடவை, இவளோடு சேர்ந்து ஆடியும், பாடியும் இவளுடைய காதலுக்கு உரியவர்களாவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பின்பு நிஷா குடும்பத்தின் தலைவியாக ஆனதும் அவளுடைய சகோதரர்களோ அல்லது புத்திரர்களோ அடிக்கடி மாறிவரும் அவளுடைய காதல் வேட்கையைத் தடுப்பதற்குச் சக்தியற்றவர்களாகி விட்டனர்.


ஆகையால் இப்பொழுது ஜீவந்தர்களாயிருக்கும் நிஷாவினுடைய மக்கள் ஏழு பேரில், யாருக்கு யார் தகப்பன் என்று எப்படிச் சொல்ல முடியும்? நிஷாவின் குடும்பத்தில், இப்பொழுது அவளேதான் குடும்பத்தின் தாய் - தலைவியாயிருக்கிறாள். ஆனால், இந்தத் தலைமை இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான். ஒன்றிரண்டு வருடங்களில் இவளுடைய பெண் மக்களில் பராக்கிரமசாலியான லேக்கா பரிவாரத்தின் தலைவியாகி விடுவாள். அப்பொழுது சகோதரிகளுக்குள் அவசியம் சண்டை உண்டாகும்.

இதே போல் லேக்காவின் சகோதரிகளும், ஒன்று அல்லது இரண்டு பரிவாரங்களை ஸ்தாபிப்பதில் வெற்றி பெறவும் முடியும். ஒவ்வொரு வருஷமும் குடும்பத்தின் சில நபர்கள் துஷ்ட மிருகங்களால் தாக்கப்பட்டும், வால்காநதியின் வெள்ளத்தில் இழுக்கப்பட்டும் குறையும் போது, அந்தக் குடும்பத்தின எண்ணிக்கை குறையாமல் காக்க வேண்டியது தலைவியின் கடமை.

குடும்பத் தலைவி நிஷா, பல முறை வேட்டைகளில் தன் மகள் லேக்காவினுடைய சாதுர்யத்தையும், பலத்தையும் பார்த்திருக்கிறாள். மலைகளிள்மீது மான்களைப் போன்று அவளால் ஏற முடியும்! ஒரு சமயம் தேன் குடிக்கும் கரடிகள் கூட ஏற முடியாத அவ்வளவு உசரமான ஒரு மலை உச்சியில் ஒரு பெரிய தேனிறாட்டு (தேன் கூடு) தென்பட்டது. இதைப் பார்த்த லேக்கா மரங்களோடு மரங்களைச் சேர்த்துக் கட்டி ஓர் இரவில் அவற்றின் மீது பல்லியைப் போன்று ஊர்ந்து ஊர்ந்து உச்சியை அடைந்து, நெருப்பினால் அந்தக் தேனீக்களைத் துரத்திவிட்டுத் தேன் கூட்டில் பெரிய துவாரத்தையும் போட்டுவிட்டாள்.

கீழே சொட்டிய தேனை ஒரு தோல் பாத்திரத்தில் பிடிக்க, அது உத்தேசம் இருபது படிக்குக் குறைச்சல் இல்லை. லேக்காவினுடைய தைரியமான இச்செய்கையானது. நிஷா குடும்பம் மட்டுமல்லாமல், அடுத்த பரிவாரங்களும் அவளைப் புகழும்படிச் செய்து விட்டது. ஆனால் நிஷாவுக்கு இது சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை. ஏனெனில், நிஷாவின் யௌவனப் புத்திரர்கள் லேக்காவினுடைய ஆணையைச் சிரமேற் கொள்ளத் துடித்துக்கொண்டு இருப்பதையும், நிஷாவின் வேண்டுகோள்களைக் கூட உதாசீனம் செய்வதையும்; நாளடைவில் நிஷா கவனித்து வந்தாள். தன்னை வெளிப்படையாக எதிர்ப்பதற்குத் தன் மகளுக்குத் தைரியம் ஏற்படாதிருப்பதையும் நிஷா தெரிந்திருக்கிறாள்.

தன்னுடைய வழியில் பெரிய முட்டுகட்டையாய் இருக்கும் லேக்காவை ஒழித்துவிடுவதற்கு நிஷா பல வழிகளைப் பற்றி யோசித்தாள். 'நித்திரையில் கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொன்றுவிட்டால் என்ன?' என்று கூட அவளுக்கு ஒரு சமயம் தோன்றிற்று. ஆனால், தன்னைப் பார்க்கிலும் லேக்கா பலசாலியென்பதும் நிஷாவுக்கு நன்றாகத் தெரியும். இதற்கு வேறொருவருடைய உதவியைப் பெறுவதென்றாலோ யாரும் இவளுக்குச் சகாயம் செய்ய மாட்டார்கள் என்பதும் நிஷாவுக்குத் தெரியும். நிஷாவினுடைய புத்திரர் யாவரும் லேக்காவினுடைய காதலுக்கும் தயவுக்கும் காத்திருப்பவர்கள்; பெண் மக்களோ லேக்காவுக்குப் பயப்படுகிறவர்கள். இதில் வெற்றி பெறாவிட்டால் தன்னுடைய பிராணனை லேக்கா வதைத்து விடுவாள் என்பதும் அவளுக்குத் தெரியும்.

ஒரு சமயம் நிஷா தனிமையாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று அவள் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது. லேக்காவை ஒழித்துவிடுவதற்கு அவள் ஒரு வழி கண்டுபிடித்துவிட்டாள்.

சூரியன் உதயமாகிக் கொஞ்ச நேரமேயானாலும், வெயில் அதனுடைய சக்தியைத் தெரிவிக்க ஆரம்பித்து விட்டது. தங்களுடைய தோல் குடிசைக்குப் பின்னே நிஷாவின் குடும்பத்தாரில் சிலர் நிர்வாணமாகப் படுத்திருக்கின்றனர். சிலர் வெயில் காய்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நிஷா மாத்திரம் தனியாகக் குடிசைக்கு முன்னே உட்கார்ந்திருந்தாள். அவளுக்குச் சமீபம் லேக்காவினுடைய மூன்று வயதுப் பையன் விளையாடிக் கொண்டிருந்தான். நிஷாவினுடைய இரண்டு கைகளிலும் சிவந்த பழங்கள் நிறைய இருந்தன.

வால்கா நதிபிரவாகமாக அவளுக்குச் சமீபத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. நிஷாவினுடைய குடிசை வரை பூராவும் வால்கா நதியின் மணல் பிரதேசம். விளையாடிக் கொண்டிருக்கும் பையனுக்கு முன்னே, நிஷா தன்னுடைய கைகளிலிருக்கும் பழங்களில் ஒன்றை எறிந்தாள். பையன் அதை ஓடி எடுத்துத் தின்றான். அடுத்து மற்றொன்றைக் கொஞ்சம் எட்டி எறிந்தாள். அதையும் தின்றான். அடுத்து வேக வேகமாய்ப் பழங்களைப் போடத் தொடங்கினாள். பையனும் ஓடி ஓடி வேகமாக எடுப்பதும் புசிப்பதுமாயிருந்தவன், ஒரு சமயம் ஓடிய வேகத்தில் கால் தவறி வால்கா நதி வெள்ளத்தில் விழுந்து விட்டான். அந்தத் திசையை நோக்கிய வண்ணம் நிஷா சப்தமிட்டாள்.

கொஞ்ச தூரத்தில் உட்கார்ந்திருந்த லேக்கா, தன்னுடைய குழந்தையைக் காணாததால் வேகமாக ஓடி வந்தாள்; பையன் தண்ணீருக்குள் முழுகுவதும் மேல் வருவதுமாய் வெள்ளத்தில் போய்க் கொண்டிருக்கிறான். உடனே லேக்கா, நதியில் குதித்து வேகமாக நீந்திப் போய்த் தன் மகனை எடுத்தாள். தண்ணீரை நிறையக் குடித்து விட்டதால் குழந்தை அசைவற்றிருந்தது. லேக்கா குழந்தையுடன் திரும்ப நீந்திக் கரையேற வேண்டும். பெருகி வரும் வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கரையேறுவது கஷ்டம் தான். மற்றும் ஒரு கையிலே குழந்தை!

ஒரு கையாலும் கால்களாலும் அவள் நீந்திக் கொண்டிருக்கிறாள். பனியுறைந்த அந்தத் தண்ணீர் வேறு, அவளுடைய சரீரத்தில் முள் மாதிரிக் குத்துகிறது. இந்தச் சமயத்தில் பலமான கைகள் தன்னுடைய கழுத்தைப் பிடித்து நெருக்குவது தெரிந்து இது யார் என்பதை லேக்கா உடனே தெரிந்து கொண்டாள். ஏனென்றால் சில நாட்களாக நிஷாவினுடைய மாறி வரும் மனோநிலையை லேக்கா அறிந்தே இருந்தாள். தன் வழியில் உள்ள இந்த முள்ளை - லேக்காவை ஒழிப்பதற்கு நிஷா தீர்மானித்து விட்டாள்.

இப்பொழுதுங்கூட லேக்கா தன் பராக்கிரமத்தை நிஷாவிடம் காட்ட முடியும். ஆனால் ஒரு கையில் குழந்தை இருக்கிறது. இருந்தாலும் கழுத்துப் பிடிப்பையும் பொருட் படுத்தாமல் நீந்துவதில் வேகத்தைச் செலுத்தும் லேக்காவினுடைய துணிவையும் தைரியத்தையும் நோக்கிய நிஷா தன்னுடைய மார்பகத்தை அவளுடைய சிரசின் மீது வைத்து அழுத்த ஆரம்பித்தாள். இதனால் ஒரு முறை லேக்கா தண்ணீருக்குள்ளும் அமிழ்ந்து விட்டாள். இப்படியும் அப்படியுமாக லேக்கா அடித்துக் கொண்டதால் குழந்தை அவளுடைய கையிலிருந்து நழுவி விட்டது. திரும்பவும் குழந்தையைப் பற்றுவதற்கு அவளால் இயலவில்லை. எப்படியோ அவளுடைய கைகள். நிஷாவினுடைய கழுத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டன. லேக்கா இப்போது மூர்ச்சையாகி விட்டாள். அந்தச் சரீரம் நிஷாவுக்கு ஒரு சுமையாகி விட்டது. இந்தச் சுமையோடு நீந்திக் கரையேறுவது நிஷாவினால் முடியாத காரியம். முயற்சித்தாள், இருந்தும் பயனென்ன? முயற்சி வெற்றி பெறவில்லை, இருவரும் தங்களைக் கூட்டாக வால்கா நதிக்குச் சமர்ப்பித்துக் கொண்டார்கள்.
பரிவாரத்தின் அடுத்த வீரப்பெண் ரோசனா, நிஷா குடும்பத்தின் தலைவியாகி விட்டாள்.

தாய்வழிச் சமுதாயம் எப்படி இருந்தது? - ஒரு கற்பனை பயணம் - 2

தாய்வழிச் சமுதாயம் எப்படி இருந்தது? பகுதி -1

நிஷா - பாகம் 2

அதோ, அநேகம் பாதங்கள் வழி கூடிப்போவதை நாம் பார்க்கிறோம். சப்தம் கேட்காமலிருப்பதற்காகத் தானா அந்தப் பாதங்கள் தோலால் மூடப்பட்டிருக்கின்றன? அவைகள் எங்கு நோக்கிச் செல்லுகின்றன? நாமும் தொடர்ந்து போவோம். ஒரு பக்கமாகத் திரும்பி மலைக் காட்டுக்குள் புகுந்துவிட்டன. நாம் இவ்வளவு வேகமாக நடந்தும் அந்தப் பாதங்களைத் தொடர்வது கடினமாயிருக்கிறதல்லவா? அவைகளும் நின்ற பாடாயில்லை. பனி படர்ந்த பூமி, காடடர்ந்த மலைவரிசை, அப்பால் பனிப் படலங்கள், இவ்விதமாக நாம் கடந்து இது வரை வந்திருக்கிறோம். அதோ தெரிகிறதே அந்த மனிதக் கூட்டத்திற்குப் பின், நீல நிறமான இந்த ஆகாயம் நிர்மலமாயில்லாவிட்டால் அவர்களை நாம் பார்க்கவே முடியாது போலிருக்கிறதே! நாமும் வெகு வேகமாக நடந்து அவர்களைச் சமீபித்து விட்டோம் . அவர்களுடைய உடம்பின் மேல் மூடப்பட்டிருக்கிறதே அந்த ரோமங்கள் அடர்ந்த தோலின் நிறத்திற்கும், இந்தப் பனி நிறத்திற்கும்
ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா? அவர்களுடைய கைகளிலிருக்கும் ஆயுதங்கள் கூட ஒரே வெண்மையாய்த்தான் தோற்றமளிக்கின்றன. வாருங்கள், கொஞ்சம் நெருங்கிப் போய்ப் பார்ப்போம்.

முன்னே வழிகூட்டிச் செல்லும் அந்தப் பெண்ணுக்கு வயது நாற்பதுக்கு மேல் ஐம்பதுக்குள்ளிருக்கும். திறந்திருக்கும் அவளுடைய புஜத்தைப் பார்த்தாலே அவள் நல்ல சரீரக்கட்டு உடையவள் என்பது தெரிகிறதல்லவா? ஆனால் இவள் கொஞ்சம் பருமன், பருவத்திலும் மூப்பு. இடது கையில் நீண்ட கூர்மையான கம்பு; வலது கையில் தோலிலே நன்றாகத் தீட்டிக் கூர்மையாக்கப்பட்ட கல்- அம்பு இவளுக்குப் பின்னே, நான்கு ஆடவர்களும், இரண்டு பெண்களும் செல்கின்றனர் ஆடவர்களில் ஒருவன் பெரியவளுக்குக் கொஞ்சம் அதிகமான வயதுடையவனாயிருக்கிறான். ஏனையோர்களுக்கு, பதினான்கிலிருந்து இருபத்தாறு வயதுவரை இருக்கும் பெரியவனுடைய முகச்சாயல், ரோமம், அங்கங்கள் எல்லாம் அந்தப் பெரியவளுடைய தோற்றத்தையே ஒத்திருக்கின்றன. சரீரக்கட்டிலும் அவளைப் போலவே பலவான் தான். அதே மாதிரி ஆயுதங்களே அவனுடைய கைகளிலும் இருக்கின்றன. பாக்கி மூன்று ஆடவர்களுடைய தோற்றம். புஜபலம் இவனை ஒத்திருந்தாலும், இவனைப் பார்க்கிலும் அதிக ஆயுதங்கள்தான் இவர்கள் கைகளிலுமிருக்கின்றன.

பெண்கள் இருவரில் ஒருத்திக்கு இருபத்திரண்டு வயதிருக்கும். முன்னமே நாம் குகையில் அந்தக் கிழவியைப் பார்த்திருக்கிறோமல்லவா? நம்முடைய மனக்கண் முன்னே, அவளுடைய முகச்சாயலோடு இவர்கள் எல்லோருடைய தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவர்கள் யாவரும் ஒரே குடும்பத்தவர்தான் என்று நிச்சயிக்க முடிகிறதல்லவா? ஆயுதம் ஏந்திய கைகள், வேகமான நடை, பெரியவள் முன்னே செல்ல, அவளைத் தொடர்ந்து ஏனையோர் செல்லும் முறை இவைகளைக் கவனிக்கும் நமக்கு இவர்கள் ஏதோ யுத்தத்தை நாடிப் போகிறவர்கள் மாதிரித் தெரிகிறது. நாமும் தொடர்ந்தே செல்வோம், வாருங்கள்.

தலைமை தாங்கி முன்னே போகும் பெரியவள்.(இனி அவளைத் தாய் என்றே அழைப்போம். தாய் என்பது அந்தக் காலத்தில் குடும்பத் தலைவியைக் குறிக்கும்) இப்போது பள்ளத்தாக்கில் இறங்கி இடதுபக்கம் திரும்பி நடக்கிறாள். மற்ற யாவரும் அவளைத் தொடர்கின்றனர். அவளுடைய கால்கள் மெதுவாகத் தேய்த்துத் தேய்த்துச் செல்கின்றன. தோல்களைக் கட்டியருப்பதால் காலடிச் சப்தம் கூடக் கேட்கவில்லை இப்போது. அவர்கள் தொடர்ந்திருக்கும் சிறிய மலைக் கூட்டங்களின் மீது செல்கிறார்கள். அதே மெதுவான நடை; கைகளாலும் அந்த மலைகளைத் தொட்டுத் தொட்டுக் கொண்டு நடக்கிறார்கள்.

வெகுதூரம் வளைந்தும், சுற்றியும் வந்த அவர்களுடைய பயணமும் முடிந்து விட்டதா என்ன? அவர்கள் ஏன் நிற்கிறார்கள்? குகை! இதைத் தேடியா இவர்கள் இவ்வளவு தூரம் வந்தார்கள்? இதுதான் இவர்களுடைய வசிப்பிடமா? இல்லை, இல்லை. குகையின் வாசலில் பனி படர்ந்திருக்கும் பூமியைக் குனிந்து உற்று உற்று நோக்குகிறாள் அந்தத் தாய். எந்த ஒரு அடையாளமும் தென்படவில்லை. இப்போது அவள் மாத்திரம் குகையின் உள்ளே மெதுவாக அடியெடுத்து வைத்து நடக்கிறாள்.

கொஞ்ச தூரம் சென்றவுடன் குகை கொஞ்சம் வளைந்து செல்கிறது; வெளிச்சமும் குறைவு; நான்கு புறத்தையும், பூமியையும் உற்றுக் கூர்ந்து கவனித்துச் செல்லும் அவளுடைய கண்களுக்கு, வெளிச்சம் குறைந்து விட்டதும் சிரமத்தைக் கொடுக்குமல்லவா? கொஞ்சம் நின்று நிதானத்துக் கண்களைச் சரிபடுத்துக் கொண்ட அவள் இப்போது மேலும் மெதுவாக, அடியெடுத்து வைத்துச் செல்கிறாள்; கொஞ்சதூரம் சென்றவுடன் அவள் என்ன கண்டாள்? மூன்று கரடிகள்-ஆண், பெண், அவற்றின் குட்டி ஆக உருப்படி மூன்றும் தலைகளைப் பூமியில் புதைத்துக் கொண்டு ஆழ்ந்த நித்திரையில் இருக்கின்றன., இறந்து கிடப்பவை போன்று, ஏனெனில், உயிரோடிருக்கின்றன என்பதற்கான எந்த அடையாளத்தையும் காணோம்.

மெதுவாக அடியெடுத்துவைத்துத் திரும்பி வரும் அவளுடைய முகத்தோற்றத்தைப் பாருங்கள்! நெஞ்சிலே பொங்கி வரும் ஆனந்தத்தை வெளியே காண்பிக்கிறதல்லவா? அதிலும் ஒருவிதப் பீதி கலந்திருக்கிறது; ஆம், தூங்கிக் கொண்டிருக்கும் அந்த துஷ்ட மிருகங்கள் விழித்துக் கொண்டால்? வரவையெதிர்பார்த்து வெளியே காத்து நின்ற இவளுடைய பரிவாரம், இவளின் முகத்தோற்றத்திலிருந்து, தங்களுடைய உழைப்புக்கு ஊதியம் கிட்டி விட்டதாய்த் தெரிந்து கொண்டனர். வந்த அவளும் தன்னுடைய கையை நீட்டி அதில் மூன்று விரல்களைக் காட்டினாள். இவளோடு, பெரியவன், அவனுக்கு அடுத்தவன் இருவரும் தங்கள் தங்கள் ஆயுதங்களை எச்சரிக்கையாகத் தாங்கிக் கொண்டு தாய்க்குப் பின்னே திரும்பவும் குகைக்குள் அடி மேல் அடி வைத்து ஒருவர் பின் ஒருவராய்ச் செல்கின்றனர். கூர்மையான நீண்ட தடிகளை வலக் கரங்களில் பிடித்துக் கொண்டு, தாய் ஆண் கரடியையும் பெரியவன் பெண் கரடியையும், இளையவன் குட்டியையும் நெருங்கினர். மறு வினாடி அவர்களின் கூரிய ஆயுதங்கள் கரடிகளின் இருதயத்தில் பாய்ந்தன.

ஆனால் பாவம், அந்த மிருகங்கள் தங்கள் உடம்பைக்கூட அசைக்கவில்லை. அவைகளின் ஆறு மாதப் பனிக்கால நித்திரை கலைவதற்கு இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் பாக்கி இருக்கிறது! ஆயுதபாணிகளான இவர்கள் அதைக் கவனிக்க முடியுமா? முன் ஜாக்கிரதையாகத்தானே அவர்கள் காரியம் செய்ய வேண்டும். வேகமாகப் பாய்ச்சிய ஆயுதங்களை இப்படியும் அப்படியுமாக நாலைந்து தடவை அசைத்தார்கள். ஏன்? அந்தப் பிராணிகள் உயிருடன் விழித்துக் கொண்டால் ஆபத்தல்லவா? இப்போது பயம் தீர்ந்து விட்டது. அவர்கள் தங்கள் பிராணிகளின் முன்னங்கால்களையும், முகத்தையும் சேர்த்துப் பிடித்து இழுத்து வாசலுக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றனர். எல்லோருடைய முகத்தையும் பாருங்களேன். என்ன ஆனந்தம்! எவ்வளவு சந்தோஷம்! ஒரே ஆரவார சப்தம்!
தாய், தன் உடம்பில் கட்டப்பட்டிருக்கும் தோலுக்குள்ளிருந்து ஒரு கத்தியை எடுத்தாள். அது கூர்மையாகத் தீட்டப்பட்டிருக்கும் கல். அதைக் கொண்டு பெரிய கரடியின் வயிற்றுப் பாகத்தைக் கிழிக்கிறாள். கிழிப்பதோ கரடியின் தோலை; ஆயுதமோ கல். அது எவ்வளவு கூர்மையாயிருந்தால்தான் என்ன? பழக்கமும் நல்ல பலமும் இருப்பதால் தானே முடிகிறது. வயிற்றைக் கீறிய அவள், ஈரலில் ஒரு துண்டை வெட்டித் தன் வாயில் போட்டுக் கொண்டாள்; மற்றொன்றை பதினான்கு வயதுடைய சிறிய பையனின், வாயில் வைத்தாள். மற்றவர்கள் அந்த மிருகங்களின் சமீபத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.

மெதுவான பாகங்களை வெட்டி வெட்டி அந்தத் துண்டுகளை ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டு வருகிறாள். இந்த விதமாக, ஒரு பிராணியின் மெதுவான பாகம் தீர்ந்து, அடுத்த மிருகத்தின் உடலில் தன் ஆயுதத்தைப் பிரயோகிக்கிறாள். இந்த நேரத்தில் பதினாறு வயதுடைய இளையவள், கொஞ்சம் விலகிப் போய், சிறிது பனிதுண்டையெடுத்து வாயில் போட்டுக் கொள்கிறாள். அதே சமயம் ஆடவர்களில் பெரியவனும், அவளுக்குச் சமீபம் சென்று, தன்னுடைய வாயிலும் சிறிய பனிக்கட்டியைப் போட்டுக் கொண்டு அவள் கரங்களைப் பிடிக்கிறான். கொஞ்சம் நாணிய அவள் உடனே அமைதியாகி விட்டாள். இறுகித் தழுவிக் கொண்ட அவனும் அவளும் இன்னும் கொஞ்சம் விலகிச் சென்று விட்டனர்.

சிறிது நேரத்தில், பனிக்கட்டிகளைக் கையில் ஏந்திக் கொண்டு அவர்களிருவரும் கூட்டத்துக்குத் திரும்ப வந்தனர். இருவருடைய கன்னங்களும், கண்களும் இப்போது அதிகமாகச் சிவந்திருக்கின்றன. அந்தப் பெரியவன் "அம்மா, நான் அறுக்கிறேன்; நீ ரொம்பக் களைத்துப் போய் விட்டாய்" என்றான். அவனிடம் கத்தியைக் கொடுத்த தாய் குனிந்து, பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களில் இருபத்தி நான்கு வயதுடைய ஆடவனின் முகத்தில் முத்தமிட்டுவிட்டு அவனுடைய கைகளைப் பற்றினாள். உடனே இருவரும் வெளியில் சென்று விட்டார்கள்.
மூன்று பிராணிகளின் ஈரல்களையும் மெதுவான மாமிசத் துண்டங்களையும் யாவரும் தின்றுவிட்டனர். நான்கு மாதங்களாக ஒரே நித்திரையில் ஆழ்ந்திருந்த அந்த மிருகங்களனிடம் ஈரல் எங்கே இருக்கப் போகிறது? ஆனாலும் அந்தச் சிறிய குட்டிக் கரடினுடைய மாமிசம் மிருதுவாகவும் ருசியாகவும் இருந்திருக்குமல்லவா? கூடிய மட்டும் மாமிசத் துண்டுகளைத் தின்ற அவர்கள், இளைப்பாறுவதற்காக அந்த இடத்திலேயே சிறிது படுத்துப் புரண்டனர்.

இனி அவர்கள் தங்கள் வீட்டுக்கு- ஆம், குகைக்குச் செல்ல வேண்டும். பெரிய கரடிகள் ஒவ்வொன்றினுடைய நான்கு கால்களையும் தோல் கயிற்றினால் சேர்த்துக் கட்டி, அவற்றினூடே கம்புகளைக் கொடுத்து ஒவ்வொன்றுக்கும் இரண்டு பேர் வீதம் நான்கு ஆடவரும் தங்கள் தோள்களில் தூக்கிக் கொண்டார்கள் குட்டியை ஒரு பெண் தூக்கிக் கொண்டாள். தாய் தன்னுடைய ஆயுதங்களைக் கையிலேந்தியவளாய் முன்னே செல்ல, மற்றவர்களும் அவளைத் தொடர்ந்தனர்.

அந்த மாக்கள் (காட்டு மனிதர்கள்) அப்போது என்ன நேரம் எத்தனை மணி இருக்கும் என்பதை அறியமாட்டார்கள். ஆனால், "இன்று நல்ல நிலவாயிருக்கும்" என்பது மாத்திரம் அவர்களுக்குத் தெரியும். இப்போது சூரியனுடைய ஒளி ரொம்ப குறைந்து விட்டது. அப்பொழுதுதான் அஸ்தமித்துக் கொண்டிருந்தால், இன்னும் லேசான வெளிச்சம் இருந்தது. அவர்களும் தங்கள் பாதையில் முன்னேறிய வண்ணம் சென்றனர். கொஞ்ச நேரத்தில்ஆகாயம், பூமி எங்கும் ஒரே வெண்மை நிறமாகக் காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டது. ஆகாயத்தில் நிலவின் ஒளி, கீழே பனிப்படலம் படிந்த பூமி.
வழிகூடிச் செல்லும் இந்தக் காட்டு மனிதர் கூட்டங்களுக்கு, அவர்களுடைய வீடு இன்னும் வெகுதூரத்தில் இருப்பது தெரியும். வேகமாக நடக்கின்றனர். ஆயுதம் ஏந்திய கையினளாய், அந்தத் தாய் தலைமை தாங்கி யாவருக்கும் முன்னே நடக்கிறாள். இரவானதால் நாலா பக்கங்களிலும் தன்னுடைய கண்களின் பார்வையை விட்டெறிந்து கூர்மையாக நோக்கிய வண்ணம் நடந்து கொண்டிருக்கிறாள். ஒர் இடத்தில் திடீரென்று நின்ற அவள், காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தாள்; ஏனையோர் மௌனமாக நிற்கின்றனர். இந்த நேரத்தில் பதினாறு வயதுள்ள பெண் இருபத்தாறு வயதுள்ள வாலிபனிடம் "உர்,உர்,ப்ருக்" என்று சத்தமிட்டு, 'அதிகம் அதிகம் யாவரும் ஜாக்கிரதை' என்று ஜாடை காட்டி ஆவேசத்தோடு அலறினாள்.

தூக்கி வந்த சவங்கள் தோளிலிருந்து இறக்கப்பட்டன. உடனே யாவரும் தங்கள் தங்கள் ஆயுதங்களை ஏந்தி, முதுகுக்கு முதுகு தொடும்படியாக வட்ட வடிவில் வியூகம் வகுத்து திசைகள் தோறும் நோக்கியவர்களாய் நின்றனர்; சிறுவன் வியூகத்துக்கு நடுவில் நிற்கிறான். கொஞ்ச நேரத்தில், ஏழெட்டு ஓநாய்கள், தங்களுடைய நீளமான நாக்குகளைத் தொங்க விட்டுக் கொண்டும், " உர் உர்" என்று கத்திக் கொண்டும், இந்த மனித மிருகக் கூட்டத்தின் வியூகத்தைச் சுற்றி வர ஆரம்பித்தன. இவர்களுடைய கைகளிலுள்ள ஆயுதங்களைப் பார்த்த அந்த ஓநாய்கள் யுத்தம் ஆரம்பிப்பதற்குச் சந்தர்ப்பத்தை எதிர்பார்ப்பன போல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் வியூகத்தின் நடுவே நின்ற பதினான்கு வயதுச் சிறுவன். தன்னுடைய நீண்ட தடியோடு சேர்த்துக் கட்டியிருந்த கம்பை எடுத்து அதில் தோல் கயிற்றைக் கட்டி அதை ஒரு முறுக்கேறிய வில்லாக்கி, எங்கே தான் மறைத்து வைத்திருந்தானோ ஒரு கூர்மையான கல் அம்பு, அதையும் வில்லையும் வட்டத்தில் நிற்கும் இருபத்துநான்கு வயதுடைய ஆடவனின் கையில் கொடுத்து அவனை வியூகத்தின் நடுவே தள்ளி விட்டு, அவனுடைய ஸ்தானத்தில் தான் நின்று கொண்டான். இருபத்துநான்கு வயதுடைய ஆடவன் தன்னுடைய வில்லில் நாணேற்றி, கல் அம்பைப் பூட்டி வியூகத்தின் நடுவே நின்ற வண்ணம் குறி வைத்து ஓர் ஓநாயின் மீது ஏவினான்.

அந்நப் பாணம் அதன் ஒரு புறத்து விலாப்பக்கத்தில் பாய்ந்து விட்டது. உடனே கீழே விழுந்த அந்த ஓநாய், சமாளித்துக் கொண்டு வியூகத்தின் மீது பாய ஆரம்பித்ததோ இல்லையோ அவன் மற்றொரு பாணத்தையும் அதன் மீது ஏவி விட்டான். இந்த அம்பு சரீரத்தில் பெரிய காயத்தை மாத்திரமா உண்டு பண்ணியது? அதனுடைய உயிரையும் கொள்ளை கொண்டு விட்டது. பிணமாக விழுந்த அந்த ஓநாயின் சரீரத்திலிருந்து வழிந்தோடும் ரத்தத்தை மற்ற ஓநாய்கள் நக்கிக் கொண்டும் கடைசியில் அதைக் கிழித்துத் தின்னவும் ஆரம்பித்து விட்டன.

இந்த நேரத்தைத் தங்களுக்குச் சாதகமாக நினைத்த மாக்கள் (மனித மிருகங்கள்) தங்களுடைய வேட்டைப் பொருளை தோள்களில் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாகத் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். இப்பொழுது, தாய், இடையிடையே கூர்ந்து கூர்ந்து பார்த்துக் கொண்டும், காது கொடுத்துக் கேட்டுக் கொண்டும் யாவருக்கும் பின்னேயும், மற்றவர்கள் முன்னுமாக நடக்கின்றனர். இன்று பனியில்லாததால், நிலவில் ஒளியிலே இவர்கள் பாதை தெரிந்து வேகமாக நடக்க முடிகிறது. இவர்களுடைய குகை இன்னும் அரை மைல் தூரங்கூட இராது; இவ்வளவில் அந்தத் துஷ்ட மிருகங்கள், ஓநாய்கள் திரும்பவும் இவர்களை வளைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டன. இவர்களும் தங்கள் சுமையை இறக்கி வைத்து ஆயுதங்களைத் தயார் செய்து பல அம்புகளைக் குறிவைத்து ஏவினார்கள்.

ஓயாமல் மிகவும் வேகமாக வளைய வந்து கொண்டிருக்கும் ஓநாய்களில் ஒன்றைக் கூட இவர்களுடைய அம்புகள் தொடவில்லை. இரு கட்சிக்கும் பலமான போராட்டம் நடக்கிறது. ஆம்! வாழ்க்கைப் போராட்டம் அல்லவா? இந்த நேரத்தில் எப்படியோ நான்கு ஓநாய்கள் ஒரு மொத்தமாகப் பதினாறு வயதுள்ள மங்கை மீது பாய்ந்துவிட்டன. பக்கத்தில் நின்ற தாய் தன்னுடைய ஈட்டியால்-முனையுள்ள காம்பால் ஓர் ஓநாயைக் குத்தி விழுத்தாட்டினாள். ஆனால் பாக்கி மூன்றும் தாங்கள் பாய்ந்திருந்த மங்கையின் தொடையில் பெரிய காயத்தை உண்டாக்கி விட்டன. அவள் பூமியில் சாயந்ததுதான் தாமதம்; அவளுடைய வயிற்றைக் கடித்துக் குடலையும் வெளியே இழுத்துவிட்டன.

எல்லோருடைய கவனமும் இவளைக் காப்பாற்றுவதில் முனைந்திருக்கும் போது மற்றும் மூன்று ஓநாய்கள் தருணம் பார்த்து, இருபத்துநான்கு வயதுள்ள ஆடவனின் மீதும் பாய்ந்து பூமியின் மீது சாய்ந்துவிட்ட அவனுடைய சரீரத்தில் பல காயங்களை உண்டு பண்ணிவிட்டன. அவனுடைய வயிற்றையும் கிழித்துவிட்டன. இப்போது எல்லோருடைய கவனமும் இந்தப் பக்கம் திரும்பியது. அந்தப் பக்கமும் முன்னே கீழே தள்ளப்பட்டு குடல் சரிந்து கிடக்கும் பதினாறு வயது பெண்ணின் சரீரத்தை அந்த ஓநாய்கள் இன்னும் கொஞ்ச தூரம் இழுத்துக் கொண்டு சென்று தின்ன ஆரம்பித்துவிட்டன. இந்தச் சமயத்தில், இவர்களில் யாரோ ஓர் ஆள் பெரியவளால் குத்துப்பட்டு விழுந்து கிடக்கும் ஓநாயின் வாயில் தடியைச் செலுத்த, இன்னொருவன் அதன் முன்னங்கால்களைப் பிடித்திருக்க, மற்றவர்கள் அதன் சரீரத்திலிருந்து பெருகியோடும் ரத்தத்தைக் குடிக்க ஆரம்பித்தனர்.


தாய் அதனுடைய தொண்டையின் நரம்பை வெட்டி இவர்களுக்கு உதவி செய்தாள். இந்தப் போராட்டமும், கொலையும், புசிப்பும் சில நிமிஷங்களில் நடந்திருக்கின்றன. ஓநாயின் ரத்தத்தைக் குடிப்பதில் முனைந்நிருக்கும் இந்த மனிதக் கூட்டத்துக்குப் பதினாறு வயது மங்கையின் சரீரத்தைப் பூராவும் தின்ற பின்னே அந்த ஓநாய்கள் தங்களைத் தாக்க ஆரம்பிக்கும் என்று தெரியுமாதலால் ஆவியை விட்டுக் கொண்டிருக்கும் ஆடவனையும் அங்கே போட்டுவிட்டு தங்களுடைய வேட்டைப் பொருளான மூன்று கரடிகள், ஓர் ஓநாய் இந்த நான்கையும் தூக்கிக் கொண்டு, ஓட்டமும் நடையுமாக அவர்கள் தங்கள் குகைக்கு வந்து சேர்ந்தனர்.

இங்கு குகையில் நெருப்பு ஜோதி மயமாக எரிந்து கொண்டிருக்கிறது. அக்கினியின் வெளிச்சத்திலேயே இரண்டு பெண்களும் எல்லாக் குழந்தைகளும் நித்திரை செய்கிறார்கள், காலடிச் சப்தம் கேட்ட கிழவி, "நிஷா....! வந்து விட்டீர்களா?" என்று கேட்டாள். "ஆமா" என்று சொல்லிக் கொண்டே தாய் தன்னுடைய ஆயுதங்களை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு மார்பைச் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் தோலையும் கழற்றினாள். மற்றவர்களும், தூக்கி வந்த உடல்களைக் கீழே கிடத்தி விட்டுத் தங்கள் தங்கள் ஆயுதங்களையும் கட்டியிருந்த தோல்களையும் ஒருபக்கத்தில் வைத்து, யாவரும் இப்போது நெருப்பின் உஷ்ணத்தில் தங்களது உடலைச் சூடேற்ற முனைந்தனர்.

நித்திரையில் ஆழ்ந்திருந்த குழந்தைகளும் பெண்களும் விழித்து விட்டனர். எவ்வளவு அயர்ந்த தூக்கத்திலிருந்தாலும் சிறு சப்தத்தையும் கூடக் கேட்டு எழுந்துவிடுவது இவர்களின் இளமையிலிருந்து வரும் பழக்கம். வெகு கவனத்தோடும் பிரயாசையோடும், தாய் இது வரை குடும்ப பாரத்தை ஏற்று நடத்தி வந்தாள். மான், முயல், மாடு, ஓநாய், ஆடு, குதிரை முதலிய மிருகங்கள் இங்கு பனி ஆரம்பமாவதற்கு முன்பே, தெற்கே உஷ்ணப்பிரதேசத்தை நாடிச் சென்று விடுவது வழக்கம். இவர்களும், அதே போல் போயிருக்க வேண்டியவர்கள் தான்; ஆனால் அந்தச் சமயத்தில் பதினாறு வயதுள்ள மங்கை நோய்வாய்ப் பட்டு இருந்தாள்.

அந்தக் காலத்து மனித தர்மப்படி, 'ஒருவருக்காக மற்றவர்களையும் ஆபத்துக்கு உட்படுத்தக் கூடாது' என்பதுவே குடும்பத்தை நடத்தும் பெரியவளின்-தாயின் கடமையாயிருந்து. ஆனால் அன்று அவளுடைய இதய பலவீனம், இன்று ஒன்றுக்கு இரண்டு மனித உருவங்களைப் பறி கொடுக்கும்படி செய்துவிட்டது. இந்த ஆரண்யத்தை நோக்கித் திரும்பவும் மிருகங்கள் வந்து சேர்வதற்கு இன்னும் எத்தனை ஜீவன்களை இழக்க வேண்டியிருக்குமோ, யார் கண்டார்கள்? மூன்று கரடி, ஓர் ஓநாய் இந்த நான்குமா இந்தப் பரிவாரம் பூராவும் இரண்டு மாதங்களுக்குக் காணும்?


குழந்தைகளுக்குப் பரம சந்தோஷம். ஏனென்றால் அவர்களுடைய வயிறு முதுகெலும்போடு ஒட்டிக் கிடந்தது. தாய் முதலில் ஓநாயினுடைய ஈரலை வெட்டி வெட்டிக் குழந்தைகளுக்குக் கொடுத்தாள். அவைகள் அவசர அவசரமாக அவற்றை மென்று விழுங்கிக் கொண்டிருக்கின்றன. பிறகு தோலுக்குச் சேதமில்லாமல் அதை உரித்தாள். ஏனெனில், தோல் அவர்களுக்கு ரொம்ப உபயோகமுள்ள வஸ்து. மாமிசத்தை அறுத்து அறுத்து நெருப்பில் வாட்டினாள். பசியோடு காத்திருந்த கூட்டம் சுட்டும் சுடாமலும் எடுத்துக் கவ்வுகின்றன. சிலர் கழுத்துப் பாகத்தின் மெல்லிய மாமிசத்தை அறுத்துக் கொடுக்கும்படி தாயைக் கெஞ்சிக் கேட்கின்றனர். அப்பொழுது, தாய் 'இன்று வயிறு நிறையச் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்; நாளையிலிருந்து இவ்வளவு கிடையாது' என்று சொல்லும்போது எவ்வளவு பொறுப்புடன் சொல்லுகிறாள்.

குகைக்கு உள்ளே சென்ற தாய் ஒரு தோல் பாத்திரத்தைக் கொண்டு வந்து பரிவாரத்தின் முன்னே வைத்து " இதில் மது இருக்கிறது; யாவரும் குடியுங்கள்; ஆடுங்கள்; பாடுங்கள்; சந்தோஷம் கொண்டாடுங்கள்" என்று உத்தரவிட்டாள். சிறிய குழந்தைகளுக்கு உறிஞ்சிக் குடிக்கத் தான் கிடைத்தது. பெரியவர்களுக்குக் கொஞ்சம் அதிகம் கிடைத்தது. சொல்லவா வேண்டும்? கொஞ்ச நேரத்தில் அவர்களுடைய கண்கள் சிவப்பேறி விட்டன. போதை தலைக்கேறி விட்டது. ஆனந்தத்தின் உச்சியில் அளவளாவ ஆரம்பித்து விட்டனர்; பாடினர் சிலர்; ஆடினர் சிலர்; இந்த இரவு அவர்களுக்குச் சந்தோஷமாயிருப்பதில் அதிசயமில்லை.
இங்கு நடைபெறுவது 'தாயின் ராஜ்யம்.' ஆனால் அநியாயமோ உயர்வு தாழ்வோ இல்லாத ராஜ்யம். கிழவியையும் ஆடவர்களில் பெரியவனையும் தவிர்த்து, மற்ற எல்லோரும் அந்தத் தாயின் குழந்தைகள். தாயும் அந்தப் பெரியவனும், கிழவியின் மகனும், மகளும். ஆகையால் அங்கே 'என்னுடையது' என்ற பேதமே கிடையாது. ஏனெனில் அந்தப் பேதம்-உன்னுடையது, என்னுடையது என்ற பிறப்பதற்கு இன்னும் காலமிருக்கிறது. ஆனால் ஒரு விஷயம்; இங்கே-இந்த ராஜ்யத்தில், எல்லா ஆடவர் மீதும் தாய்க்குத்தான் முதாலாவது அதிகாரம். அதுவும் ஒரே மாதிரியான-சமமான அதிகாரம்; வித்தியாசம் கிடையாது.

மகனும், புருஷனுமாயிருந்த இருபத்துநான்கு வயதுடைய ஆடவன் இறந்துவிட்டதால், அவளுக்கு, தாய்க்குத் துக்கம் இல்லாமல் இல்லை. இருந்தாலும், அந்தக் காலத்து மனித வாழ்க்கை முக்கியமாக நிகழ்காலத்திலேயே கவனம் செலுத்துவதாய் இருந்தது. தாய்க்கு இரண்டு நாயகர்கள் இருந்தனர். மூன்றாவது புருஷன்-பதினான்கு வயதுப் பையன் தயாராகிக் கொண்டிருந்தான். இன்னும் அவளுடைய ராஜ்யத்தில் எத்தனை குழந்தைகள் அவளுடைய கணவன் ஸ்தானத்திற்கு வருவார்களோ யார் கண்டார்கள்? இருபத்து ஆறு வயதுடைய ஆடவனைத் தாய் நேசித்தாள். ஆகையால் பாக்கி மூன்று பெண்களின் கணவன் ஸதானத்துக்கு, ஐம்பது வயதுக் கிழவன்தான் மிஞ்சியிருக்கிறான்.
பனிக்காலம் விடைபெற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டது. இக்காலத்தில், கிழவியின் உடலை விட்டு அவள் ஆவியும் விடை பெற்றுக் கொண்டது. குழந்தைகளில் மூவரை ஓநாய் விழுங்கி விட்டது. ஆடவர்களில் பெரியவன் பனி உருகி நதியில் போய்விட்டான். இந்த விதமாக தாயின் பரிவாரம் பதினான்கிலிருந்து ஒன்பதுக்குச் சுருங்கி விட்டது.


தாய்வழிச் சமுதாயம் எப்படி இருந்தது? பகுதி - 3

மனிதனின் ஆயுளை உயர்த்திய லூயி பாஸ்டியர்




நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தாமல் இன்றைய மனிதனால் வாழமுடியாது என்னுமளவுக்கு அறிவியல், மனிதனின் வாழ்க்கையில் கலந்துவிட்டது. மனிதனின் செயல்பாடுகளை எளிமையாக்குதல், தேவைகளை நிறைவேற்றுதல், பிரபஞ்ச உண்மைகளை கண்டறிதல் ஆகியவற்றுக்கு நவீன கண்டுபிடிப்புகள் பேருதவி புரிந்தாலும் அவை யாவற்றிலும் தலையாயது மருத்துவத் துறையில் நிகழ்த்தப்பட்ட கண்டுபிடிப்புகளே. இத்துறையில் மிகப் பெரிய சாதனையாளர்களில் முதன்மையானவர் லூயி பாஸ்டியர் ஆவார்.

புரட்சிகரமான அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டிருந்த பத்தொன்பதாவது நூற்றாண்டில் 1822ஆம் ஆண்டு பிரான்சிலுள்ள ஜூரான் பிராந்தியத்தில் தோலே என்னும் ஊரில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் லூயி பாஸ்டியர். சிறு வயதிலே அவர் ஈடுபாட்டுடன் கல்வி கற்ற போதிலும் அவரது அறிவுக்கூர்மை வெளியே தெரியவில்லை. தமது 26வது வயதில் டாக்டர் பட்டத்துக்கு டார்டாரிக் அமிலத்தின் உருப் பளிங்கு படிவம் (mirror-image isomers) பற்றிய அவரது ஆய்வு அவருக்கு பெரும்புகழைத் தேடி தந்தது.

பாஸ்டியர் 1857ல் நொதித்தல் பற்றி முக்கிய ஆராய்ச்சியை நிகழ்த்தினார். சில வகை நுண்ணுயிர்கள் காரணமாகவே நொதித்தல் நடைபெறுகிறது. பானங்களில் விரும்பத்தகாத நச்சுப்பொருள்கள் நுண்ணுயிர்களாலயே உருவாகின்றன என்று கண்டார். மேலும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோய்கள் ஏற்படுவதற்கு நோய் நுண்மங்கள் எனப்படும் கிருமிகள் தான் காரணம் என்பதை பரிசோதனைகள், செயல்விளக்கங்களுடன் துல்லியமாக நிரூபித்தார். இது நோய் நுண்மக் கோட்பாடு(germ theory) எனப்படுகிறது.

நோய்நுண்மங்கள் உடலுக்குள் செல்வதனால் தான் நோய் ஏற்படுகிறது எனில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்வதன் மூலம் நோயை தவிர்க்க முடியும். இந்த அடிப்படையில் தான் , அறுவை சிகிச்சையின் போது பின்பற்றப்படும் ஆண்டிசெப்டிக் வழிமுறைகளை ஜோசப் லிஸ்டர் பின்னர் கண்டுபிடித்தார்.

உணவுப் பொருள்கள் மற்றும் பால், பீர், வைன் போன்ற பானங்கள் அவற்றிலுள்ள தீங்கு விளைவிக்கும் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியங்களால் கெட்டுவிடுகின்றன. இவை நோய்களையும் உண்டுபண்ணுகின்றன. பால் போன்ற பானங்களை குறிப்பிட்ட வெப்பநிலைக்கு சூடுபடுத்தி அதிலுள்ள பெரும்பாலான கிருமிகளை அழித்து அவற்றை கெட்டுப்போகாமல் காக்கும் ஒரு துப்புறவு முறையை 1864ல் பாஸ்டியர் கண்டறிந்தார். இன்றும் பயன்படுத்தப்படும் இந்த முறை பாஸ்சுரைசேஷன்(Pasteurisation) எனப்படுகிறது.

கால்நடைகளை அதிகம் தாக்கும் கொடிய நோய் கரணை நோய் எனப்படும் ஆந்த்ராக்ஸ் ஆகும். இந்த நோயை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை கண்டறிந்த பாஸ்டிய அவற்றில் ஆற்றல் குன்றிய வகையினத்தை உற்பத்தி செய்யும் ஒரு முறையை கண்டறிந்தார். இந்த ஆற்றல் குன்றிய நோய் கிருமிகளை ஊசி மூலம் கால்நடைகளின் உடலில் செலுத்தினால் அந்த கால்நடைகளுக்கு கடுமையற்ற நோய் உண்டாகியது. பின்னர் அந்த கால்நடையின் உடலில் அந்த குறிப்பிட்ட நோய்க்கு எதிர்பாற்றல் உருவாகிவிடுகிறது. இதனால் அந்த நோய் வராமல் தடுக்கப்படுகிறது என்பதை 1881ல் பாஸ்டியர் திட்டவட்டமாக நிரூபித்தார். இது மருத்துவ உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாக கருதப்பட்டது. இவ்வகையான தடுப்பூசிகளுக்கு வாக்ஸீன் என்று பெயரிட்டார்.

அயராது செய்த ஆராய்ச்சியின் பயனாக 1885ல் பாஸ்டியர் வெறிநாய் கடி நோய்க்கும்(Rabies) தடுப்பூசி கண்டுபிடித்து சாதனை புரிந்தார். இவரது கண்டுபிடிப்பின் அடிப்படையிலேயே ஜன்னி காய்ச்சல், இளம்பிள்ளை வாதம் ஆகிய நோய்களுக்கு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டன. மேலும் சிக்கன் காலரா எனப்படும் கொடிய நோய்க்கும் பாஸ்டியர் தடுப்பூசி உருவாக்கினார்.

நுண்ணுயிர்கள் தாமாகவே உருவாகின்றன என்று அவரது காலம்வரை நம்பப்பட்டு வந்தது. தமது கூரிய ஆய்வால் வெளியில் இருந்து வராமல் பொருள்களில் தாமாகவே நுண்ணுயிர்கள் உருவாவதில்லை என்று நிரூபித்தார். மேலும் ஆக்ஸிஜனில்லாமலும் சில வகை நுண்ணுயிர்கள் வாழும் என்பதையும் பரிசோதனையில் மெய்ப்பித்தார். இவற்றோடு பட்டுப் புழுக்களில் ஏற்படும் இரண்டு நோய்களை பற்றி இரண்டாண்டுகள் கடுமையான ஆய்வை மேற்கொண்டார். அந்த நோய்களுக்கு காரணமான நுண்கிருமிகளை கண்டறிந்து அவற்றிடமிருந்து பட்டுபுழுக்களை காப்பாற்றும் வழிமுறைகளையும் உருவாக்கினார்.

கடும் உழைப்பாளியாகவும் அறிவுகூர்மை மிக்கவராகவும் மட்டுமில்லாமல் பாஸ்டியர் மிகவும் துணிச்சல் காரராகவும் விளங்கினார். பல பரிசோதனைகளை தன்மீதே மேற்கொண்டார். அளப்பரிய சேவை செய்த லூயி பாஸ்டியர் 1895ல் காலமானார்.

இவர் கல்வி கற்றது வேதியியல் துறை என்றாலும் மருத்துவம் மற்றும் நுண்ணுயிரியியல் துறைகளில் இவரது கண்டுபிடிப்புகள் தன்னிகரற்று விளங்குகின்றன. நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மனிதனின் சராசரி ஆயுளை விட இன்றை மனிதனின் சராசரி ஆயுள் இரண்டு மடங்காகியுள்ளது. இந்தச் சாதனைக்கு காரணம் லூயி பாஸ்டியர் தான் என்றால் மிகையில்லை. பாஸ்டியரின் தொண்டுக்கு உலக மக்கள் அனைவரும் கடமைபட்டிருக்கிறோம். அவரது நினைவை போற்றும் வகையில் பல மருத்துவ, ஆராய்ச்சி நிலையங்களுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் அமைந்திருக்கும் மத்திய தடுப்பூசி உற்பத்தி மையத்துக்கும் பாஸ்டியரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது நமக்கு பெருமையளிப்பதாகும்.

தாய்வழிச் சமுதாயம் எப்படி இருந்தது? - ஒரு கற்பனை பயணம்

இந்திய நாடு பெற்றெடுத்த மேதைகளில் ஒருவர், கடந்த நூற்றாண்டின் சிறந்த மார்க்சீய சமூக ஆய்வாளர், தத்துவ அறிஞர், பலமொழி வித்தகர் என பல சிறப்புகளைப் பெற்றவர் ராகுல்ஜி என்றழைக்கப்படும் ராகுல சாங்கிருத்தியாயன். இவர் பல அரிய நூல்களை எழுதியிருந்தாலும் அவற்றுள் அனைவராலும் மிகவும் போற்றப்படும் நூல்களுள் முதன்மையானது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலாகும்.

இந்நூலில் கற்கால நாகரிகத்தில் ஆரியர்கள் மத்திய ஆசியாவில் வாழந்த காலத்தில் தொடங்கி படிப்படியாக கிழக்கு நோக்கிப் பயணித்து இந்தியாவை அடைந்தது, சிந்து-கங்கை சமவெளிகளில் நிலை கொண்டது... என வரலாற்று நிகழ்வுகளை சமூக, அரசியல் பின்புலங்களோடு கதை வடிவில் சுவைபட அளித்துள்ளார். இந்தக் கதைகளில் வரும் பாத்திரங்கள் மூலமாக மனிதனின் சமூக, பண்பாட்டு வளர்ச்சியை எளிமையாக விளக்குகிறார்.

நூலில் முதலில் இடம்பெறும் கதையின் பெயர் ‘நிஷா’. பனியுகத்தின் முடிவில் கி.மு. 6000 வாக்கில் வேட்டையாடி வாழ்ந்த மனிதனின் வாழ்க்கையில் எவ்வளவு ஆபத்துகள் இருந்தன, எப்படி தாக்குப்பிடித்து உயிர்வாழ்ந்தான், குடும்ப அமைப்பு எப்படி இருந்தது என்பதை மிக அழகாக நம் கண் முன் நிறுத்துகிறார் (தற்கால அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் கால அளவு துல்லியமாக பொருந்தாமல் போகலாம்) . ஆதி மனிதச் சமுதாயத்தில் பெண் தான் தலைமைப் பாத்திரம் வகித்தாள் என்று சொன்னாள் நம்மால் புரிந்துகொள்வது சற்று கடினமே. மானுடவியல் ஆய்வுகள், தொல் சமூகவியல் ஆய்வுகள் இந்தக் கூற்றை ஆதாரங்களுடனும் கோட்பாடுகள் மூலமாகவும் விளக்கினாலும் சாமானியர்கள் புரிந்துகொள்ள முடியுமா என்பது சந்தேகமே.

இந்தக் கடினமான செயலை தனது கதையின் மூலம் சாதித்திருக்கிறார் ராகுல்ஜி. திரு கே.என். முத்தையாவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ் புத்தகாலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலில் இடம்பெற்றுள்ள கதைகளில் ஒன்றை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். பல ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு என்பதால் வாசிப்பதற்கு சற்று கடினமாகத் தோன்றலாம். அப்படியே எவ்வித மாற்றமும் செய்யாமல் அளிக்கிறேன்.

பாகம் - 1
நிஷா

தேசம்: வால்கா நதிக்கரை பிரதேசம்

ஜாதி : ஹிந்தோ ஐரோப்பியர்

காலம் : கி.மு 6000



எத்தனையோ நாட்களுக்குப் பிறகு இன்றுதான் சூரியனைக் காண முடிந்திருக்கிறது. மத்தியான வேளை; ஆனால் இன்னும் உச்சிக்கு நேரே சூரியன் வரவில்லை. பொழுது புலர்ந்து நான்கு, ஐந்து மணி நேரமாகியும் சூரியனுடைய ஒளியில் அவ்வளவு உஷ்ணத்தைக் காணோம். அவனை, சூரியனை மேகங்கள் மறைக்கவில்லை; பனிப் படலங்கள் மூடவில்லை: பெரிய காற்றோ, புயலோ கிடையாது. இந்நிலையில் உடம்பைத் தொட்டுக் கொண்டிருக்கும் அவனுடைய கிரணங்கள் மனத்துக்கும் தேகத்துக்கும் எவ்வளவு ஆனந்தத்தைக் கொடுக்கின்றன!

சரி, நாலா பக்கங்களிலுமுள்ள காட்சிகளைத்தான் நோக்குவோமே! மேலே நீலநிறமான ஆகாயம்; கீழே கற்பூரத்தைப் போன்ற பனிப்படலங்கள் கவ்விக் கொண்டிருக்கும் பூமி. கடந்த இருபத்து நான்கு மணி நேரமாகப் பனி விழாததால், பூமியின் மீது படிந்திருக்கும் பனித்திரள் கொஞ்சம் கெட்டியாகிவிட்டது. பனி மூடிய இந்தப் பூமி எங்கும் வியாபித்திருப்பதாக நீங்கள் நினைத்துவிட வேண்டாம். அதோ இருமருங்கிலும் மலைகளின் மீதுள்ள மரக்கூட்டங்களின் நடுவே சில மைல் தூரம் மேடும் பள்ளமுமாக, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வெள்ளிப் பலகை மாதிரி கிடக்கிறது இந்தப் பூமி. வாருங்கள்; இனி அந்த மரக்கூட்டங்களைக் கொஞ்சம் நெருங்கிப் பார்ப்போம்.

இங்கே இரண்டு விதமான விருட்சங்கள் அதிகமாயிருக்கின்றன. ஒரே வெண்மை நிறமாயும் ஆனால் இலைகளே இல்லாத கொம்புகள் கிளைகள் உள்ளனவாயும் நிற்பன ஒரு வகை; ஓங்கி வளர்ந்து, ஆனால் அடர்ந்த கிளைகளையும் ஊசி முனை இலைகளையும் உடைய தேவதாரு விருட்சங்கள் மற்ற வகை. அடர்ந்த கிளைகள் அந்த மரங்களை அப்படியே மூடிக்கொண்டிருப்பதும், அவைகளின் மீது வெண்மையான பனிக்கட்டிகள் தொங்கிக் கொண்டிருப்பதும், கண் கொள்ளாக் காட்சியாயிருக்கிறதல்லவா? தனிமையில் இருக்கும் நாம், கொஞ்சம் உற்றுக் காது கொடுத்துக் கேட்போமா? பட்சிகளின் சப்தமாவது கேட்கிறதா? மிருகங்களின் இரைச்சலாவது கேட்கிறதா? சிறிய வண்டுகளின் ரீங்காரமாவது கேட்கிறதா? இல்லை. பயங்கரம் நிறைந்த நிசப்தத்தின் ஆட்சி ஆரண்யமெங்கும் நிலவுகிறது.

சரி, வாருங்கள். அதோ மலையின் மீது உயர்ந்து வளர்ந்திருக்கும் தேவதாரு மரத்தின் மீது ஏறி நாலாபக்கங்களின் காட்சிகளைப் பார்ப்போம். யார் கண்டார்கள்? பனிக்கட்டி, தேவதாரு விருட்சங்கள் இவைகளையல்லாமல் வேறு ஏதாவது அந்தப் பக்கம் தென்படாதா? அப்படி ஒன்றையும் காணோம். எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய மரங்களும், பனியுந்தானா? புற்களோ, புதர்களோ இந்தக் காட்டில் முளைக்கவே செய்யாதா? ஆனால் இவைகளைப் பற்றியெல்லாம் அபிப்ராயம் கூறுவதற்காக நாம் இங்கு வரவில்லையே? பனி சூழ்ந்த இரண்டு பாகங்களைக் கடந்து கடைசிப் பாகத்துக்கு நாம் வந்திருக்கிறோம்.

இந்த வருஷம் பனி அதிகமென்று சொல்வதையும் நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா? இவ்வளவு பனியிலும் நின்று கொண்டிருக்கிற இந்த மரங்கள் எவ்வளவு பருமனாயிருக்கின்றன. அளந்து பார்ப்பதற்குக் கூட நம்மிடம் சாதனம் இல்லை. ஆனால் சுமாராகச் சுற்றளவு எட்டு முழம் இருக்குமல்லவா? அதற்கு மேலும் இருக்கும். இந்த உயரமான மரத்தில் ஏறி நிற்கும் நாம் என்ன பார்க்கிறோம்? அதே பனிப்படலம்; அதே மரங்களின் கூட்டம் மேடு பள்ளமான அதே மலைப் பிரதேசம்! அதோ புகை; ஆம், உண்மையிலேயே புகைதான். இந்த நிசப்தமான வனாந்தரத்தில் புகை எங்கிருந்து வந்தது. நமக்கு ஆச்சரியமாயும், ஆனால் சந்தோஷமாயும் இருக்கிறதல்லவா? வாருங்கள், போய்ப் பார்த்து விடுவோமே! புகை கிளம்புவது உண்மைதான். ஆனால் ரொம்ப தூரம் ஆகாயம் நிர்மலமாயிருப்பதனாலும், நாம் உயரத்தில் நிற்பதாலும் சமீபமாகத் தெரிகிறது. இருந்தாலுமென்ன? நெருங்கி வந்து விட்டோம். பிண நாற்றமும் மாமிச வாசனையும் தான் நம்முடைய மூக்குக்கு முதல் விருந்தாகக் கிடைத்திருக்கிறது. அதோ சப்தம்; ஆம் சிறு குழந்தைகளின் சப்தம்; ஜாக்கிரதை; நாம் ரொம்ப மெதுவாக நடக்க வேண்டும். காலடிச் சத்தங்கூடக் கேட்கக்கூடாது. மூச்சும் மெதுவாக விட்டால் நல்லதுதான். யார் கண்டார்கள்! நம்மை வரவேற்பதில், அவர்களைப் பார்க்கிலும் அவர்களுடைய நாய்கள் முந்திக் கொண்டால்?


இந்தக் குழந்தைகளைப் பார்த்தீர்களா? உண்மையிலேயே சின்னஞ்சிறிய குழந்தைகள். அதோ யாவற்றிலும் பெரிய குழந்தைக்கு எட்டு வயதிருக்கும். சின்ன குழந்தைக்கு ஒரு வயது இருக்குமல்லவா? ஆம், ஒரே வீட்டில் ஆறு குழந்தைகள்; இது வீடில்லையே; மலையின் இயற்கைக் குகை. உட்பக்கம் ஒரே இருட்டாகவல்லவா இருக்கிறது! இது எவ்வளவு அகலமும் நீளமும் இருக்கும்? எவ்வளவும் இருக்கட்டுமே. நீளத்தையும் அகலத்தையும் பார்ப்பதற்காகவா நாம் வந்திருக்கிறோம்? இனி இங்கு வசிப்பவரைக் கவனிப்போம்.

ஒரு பழுத்த கிழவி, அழுக்கு படிந்து வெண்மையாய், ஆனால் சடை மாதிரி கற்றை கற்றையாக விரிந்து, அவளுடைய முகத்தையே மூடிக்கொண்டிருக்கின்றன. ரோமங்கள்! தன்னுடைய கைகளினால் அந்த ரோமக் கற்றைகளை விலக்குகிறாள். அவளுடைய புருவ ரோமங்களும் கூட ஒரே வெண்மை நிறம். அவளுடைய வெண்மையான முகத்தில் விழுந்துள்ள சுருக்கங்கள் அவளுடைய வாய்க்குள்ளிருந்து வெளிக் கிளம்புவன போன்று காட்சியளிக்கின்றன. புகையும் நெருப்பும் வெளித் தோன்றும் அந்தக் குகைகுள்ளே தான் குழந்தைகளும் கிழவியும் வசிக்கிறார்கள். அவளுடைய உடம்பில் எந்த ஓர் ஆடையையும் காணோம். ஆபரணமில்லை. வற்றிப்போன அவளுடைய இரண்டும் கைகளும் கால்களுக்குப் பக்கத்தில் கிடக்கின்றன. குழிவிழுந்த அவளுடைய கண்களின் நீலமணிகள் பொலிவிழந்திருந்தாலும், பார்க்கும் சக்தியைப் பூரணமாக இழந்துவிடவில்லை என்பதைத் தெரிவிக்கின்றன.

குழந்தைகளின் சப்தத்தைக் கூட அவளால் கேட்க முடிகிறது. இந்த நேரத்தில், ஒரு குழந்தை கத்துகிறது. அவளுடைய கண்கள் அந்தப் பக்கம் திரும்பின. கிட்டத்தட்ட ஒன்று ஒன்றரை வயதுள்ள இரண்டு குழந்தைகள்; ஓன்று ஆண் குழந்தை; மற்றது பெண். மஞ்சள் படிந்த வெண்மையும் மிருதுவுமான ரோமும் பெரிய நீலநிறமான விழிகளையுமுடைய அந்தப் பையன் அழுது கொண்டிருக்கிறான். வாயில் ஓர் எலும்பை வைத்துச் சுவைத்துக் கொண்டிருக்கிருக்கும் சிறு பெண் பக்கத்தில் நிற்கிறாள்.
"அகின், இங்கே வா, நான் இங்கே இருக்கிறேன்" என்று தன்னுடைய நடுங்குங் குரலில் கிழவி பையனை அழைக்கிறாள். ஆனால் அகின் எழுந்திருக்கவில்லை. இந்தச் சமயத்தில் எட்டு வயதுப் பையன் அகினை தூக்கி கிழவிக்குச் சமீபத்தில் விட்டு, "அம்மா! ரோசனா எலும்பைப் பறித்துக் கொண்டாள். அதனால் அகின் அழுகிறான்" என்றான். கிழவி தன்னுடைய வற்றிப்போன கைகளால் அகினைத் தூக்கினாள். இன்னும் அவன் அழுது கொண்டுதானிருக்கிறான். அகினுடைய கண்களிலிருந்து பொங்கி வழியும் கண்ணீர், அவனுடைய அழுக்குப் படிந்த கன்னத்திலே பெரிய ரேகைகளை உண்டாகிச் செல்லுகிறது! கிழவி அவனை முகத்தோடு அணைத்துக்கொண்டு, "அகின்! அழாதே. ரோசானாவை அடித்து விடுவோம்" என்று பனி சேர்ந்திருக்கும் பூமியைத் தன்னுடைய கையால் அறைந்தாள்.

ஆனால் அகினுடைய அழுகையோ கண்ணீரோ நின்ற பாடில்லை. தன்னுடைய கையால் அவனுடைய கண்ணீரை துடைத்தாள். அந்தச் சிறிய அழகிய வதனத்தின் கண்ணீரைத் துடைத்ததால், அவளுடைய கையில் படிந்திருந்த அழுக்கு சில கறுப்பு கோடுகளைத் தீட்டிற்றேயொழிய, பையனுடைய அழுகை நிற்கவில்லை. மாமிசப் பசையேயில்லாது, பை மாதிரி நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும் அவளுடைய ஸ்தனத்தின் நுனியை அகினுடைய வாயில் வைத்தாள். பையனும் உடனே அழுகையை நிறுத்திக் கொண்டான்.

அது என்ன சப்தம்? ரொம்ப சமீபத்தில் கேட்கிறதே! மனிதக் குரல். ஆம், இனிமையான இளம் குரல் யாரையோ அழைப்பது போல் கேட்கிறதல்லவா? "அகின்!அகின்!" சப்தத்தைக் கேட்ட அகின், அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டே அழ ஆரம்பித்துவிட்டான்.
தலையில் விறகுச் சுமையுடன் வேகமாக வந்த இரண்டு பெண்கள் தங்களுடைய சுமையைக் குகைக்குப் பக்கமாகப் போட்டுவிட்டு ஒருத்தி ரோசானாவையும், ஒருத்தி அகினையும் தூக்கி அணைத்துக் கொண்டார்கள். இரு பெண்களும், அந்த இரண்டு குழந்தைகளின் தாய்கள் மாத்திரமல்ல; இருவரும் உடன்பிறந்த சகோதரிகள் என்பதையும் அவர்களுடைய முகச்சாயல் நமக்குத் தெரிவிக்கிறதல்லவா? நீல நிற விழிகளுங்கூட ஒரே மாதிரிதான்; ஒன்று ஒன்றரை வயது வித்தியாசந்தானிருக்கும். இது நமக்குப் பெரிய மாறுதலாகத் தென்படவில்லை. அவர்களுடைய வதனங்களின் முழு அழகும் வெளிக்குத் தெரியக் கூடாதென்பதற்காகவே நீண்ட சுருள் சுருளான மிருதுவான தலை ரோமங்கள் அந்த வதனங்களை மூடிக் கொண்டிருப்பதைப் போல் தோன்றுகிறது. இப்பொழுது அவர்களுடைய அழகிய கைகளால் அந்த ரோமக் கற்றைகளை விலக்கியபின் பாருங்கள். கிரகணம் நீங்கிய பின் பொலிவோடு விளங்கும் பூரணச்சந்திரன் மாதிரி இருக்கின்றன அவர்களுடைய முகங்கள்.

அகினுடைய தாய், நெஞ்சில் வலது ஸ்தனத்தைச் சேர்த்துக் கட்டியிருக்கும் ரோமங்கள் அடர்ந்த தோலைக் கழற்றிக் கீழே போட்டு, அதன் மீது உட்கார்ந்து கொண்டு மடியில் வைத்து அணைத்துக் கொள்கிறாள் தன் மகனை. அகினுக்குப் பரம சந்தோஷம். அந்தச் சிறிய வாயின் வெளியே தோன்றும் முத்துப் போன்ற பற்களைப் பாருங்கள். அவனுடைய உச்சி மீதும், கன்னங்களிலும் அவன் தாய் கொடுக்கும் ஒவ்வொரு முத்தத்துக்கும் அவன் சிரிப்பதைப் பாருங்களேன்! சில மாதங்களாக விடாது தொடர்ந்து பனி பெய்து கொண்டிருந்ததால், ஆகாரத்துக்குத் தட்டு ஏற்பட்டதில் அவளுடைய சரீரம் மெலிந்திருந்தாலும் அழகையிழந்து விடவில்லை.

முகத்திலும் அதே பொலிவுதான். அவள் தன்னுடைய மிருதுவான கரிய நுனியுள்ள ஸ்தனத்தை அகினுடைய வாயில் வைத்தாள். இப்பொழுது அந்தச் சின்னக் குழந்தையின் கண்கள் பாதி மூடிக்கொண்டிருப்பதைப் பாருங்கள். அந்தச் சின்னஞ்சிறு கால்கள், மெதுவாக,ஆனால் எவ்வளவு ஒய்யாரமாக ஆடுகின்றன. தாயினுடைய மடியிலே, அந்தக் குழந்தை அனுபவிக்கும் ஆனந்தத்தைப் பாருங்கள். அவனுடைய வலது கையின் சின்னஞ்சிறு விரல்கள் அவளுடைய இடது ஸ்தனத்தின் கரிய நுனியை வருடிக் கொண்டிருப்பதைப் பார்த்தீர்களா? இந்த ஏகாந்தமான குகையிலே இவர்களை, அவர்களுடைய அலுவல்களைக் கவனிக்க விட்டுவிட்டு, நாம் அடுத்த காட்சியைப் பார்ப்போமா?

தாய்வழிச் சமுதாயம் எப்படி இருந்தது? -பகுதி 2
தாய்வழிச் சமுதாயம் எப்படி இருந்தது? -பகுதி 3